முன் குறிப்புகள் :-
சுச்சு என்று அழைக்கப்படும் சுரேந்திரன்
1. இதை, ஒரு மாதம் முன்னால் நான் எழுதிய "தாடி மஹாத்மியம் " என்ற பதிவிற்கு sequel / தொடர் பதிவு (?) ஆகவும் கொள்ளலாம்.
"மொட்டை" என்பது முழு உருண்டையை நினைவு படுத்துவதால் ஒரு புதிய தொடக்கமாகவும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.....
2. முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது அல்ல.
அந்த காலத்து N S கிருஷ்ணன் என்கிற நகைச்சுவை நடிகர் போல "சிரிக்கவும் (குறைந்த பட்சம் புன்னகைக்கவும் ??) வைத்து சிந்திக்க வைக்கிற" கருத்துக்கள்.
உங்களுக்குள் உணர்ச்சிகள் மாறி மாறி எழலாம்......
கவனமாக .இருக்கவும்..
(இருதய நோயுள்ளவர்கள் பயந்து போய் விட வேண்டாம். நீங்களும் தாராளமாக படிக்கலாம்)
3. "மொட்டை"யாக பதிவை எழுத தொடங்க விருப்பம் இல்லை....அது தான் இத்தனை முன் குறிப்புகள். சரி....மேலே தொடரவும்.
(சற்றே நீண்ட பதிவு தான்..... ஆனால் உங்களுக்கு நேரம் போவதே தெரியாது)
அன்புடையீர்
கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழியா ? என்பது ஒரு புராதானமான paradox.
ஒரு விஷயம்...
முட்டையிலிருந்து சேவலும் வந்து விடலாம் .
அதனால் probability theory பிரகாரம் கோழி தான் முதலில் என்பது அடியேனின் ஒரு யூகம். எதற்கு இப்படி "மொட்டை"க்கும் முழங்காலுக்கும் (மன்னிக்கவும்....முட்டைக்கும் :-) !!) முடிச்சு போடுகிறேன் என்று யோசிக்கிறீர்கள் தானே.....? ஆம். மொட்டை நிலையில்ருது உரோமம் வளர்ந்து அடர்ந்து தாடியாவது தானே இயற்கை. ஏன் தாடியைப் பற்றி கதைத்து விட்டு இப்போது மொட்டையைப் பற்றி மிழற்றுகிறேன் என்று நீங்கள் துக்கிப்பது / தவிப்பது (?) புரிகிறது.
என்னைப் பொறுத்தவரை எதையுமே வித்தியாசமான கோணத்தில் பார்த்து பழகி விட்டேன். முடி இருந்தால் தானே மழிக்கும் செயல்..... காரணம் இருந்தால் தானே காரியம்......புரிகிறதா ?
சரி, மொட்டைக்கு வருவோம். பல்லாயிரம் வருடங்களாகவே மனித குலத்தில் மொட்டை அடிக்கும் வழக்கம் இருந்திருக்கலாம். நமக்கு மிகச் சமீபமான "அரசர்.....அரண்மனை " காலத்தில் கூட, ஒரு வழக்கம் இருந்திருப்பதை நீங்கள் படித்தோ tv யில் சீரியல் எதிலாவதோ பார்த்திருக்கலாம். ஒரு ஞானி / துறவி வந்தால் அரசர் தன மணி மகுடத்தை (அது தான் கிரீடம்) கழற்றி அவர் கால் அடியில் வைப்பது ஒரு மரியாதை மட்டுமல்ல - ஒரு மரபு - ஏன், ஒரு தத்துவம் என்றே சொல்லலாம். என் ஆட்சிப்பொறுப்பே /இந்த அந்தஸ்தே உங்கள் கால் தூசுக்கு சமம் என்பது தாத்பர்யம்.
நமது கலாசாரத்தில் நம் போன்ற சாமான்யர்கள் என்ன செய்வது ? இறைவனை தொழுது வர ஆலயம் / க்ஷேத்ராடனங்கள் செல்லும் பொழுது என் உடலின் உயரமான பகுதியில் உள்ள, என் முகத்திற்கு அழகு சேர்க்கிற கேசத்தை உனக்கு சமர்ப்பணம் செய்தே என்று "முடி காணிக்கை" (முடி என்பது அரசனின் "மணி முடிக்கு ஒப்பானது என்பதை உணர்க......!!) தருவது கலாசாரம். அநேகமாக பாரத கண்டம் முழுவதும் இந்த செயல் இருந்து இருக்கிறது.
இரு விதமான துறவு நிலைகளைப் பற்றி திருவள்ளுவர் பேசுகிறார் - துறவு என்ற அதிகாரத்தில் (அறத்துப் பால்). மழித்தல்.... (இராமகிருஷ்ண மடத்து துறவிகள்....ஏன், இப்போது சமீப காலத்தில் உருவான ஈஷா மையத்து துறவிகளை பற்றி உங்களுக்கு கட்டாயம் தெரிந்து இருக்கும்); மற்றொன்று - நீட்டல் - அதாவது கானகம் / மலை / குகைகளில் சென்றமர்ந்து இறைவனை தேடுவதே பெரும்பணியாக செய்பவர்கள், புற அழகை பற்றி கவலைப் படாமல், தாடியும், நீள் நகமுமாக ஒரு பாரம்பர்யம்.
ஏன், நமக்கு மிகவும் நெருக்கமான புத்த மத துறவிகளுக்கும் ஜைன மத புனிதர்களுக்கும் கூட "மொட்டை" என்பது ஒரு முக்கிய அம்சமாகவே இருந்து இருக்கிறது. முக்கியமான் ஜைன மதத்தில் (ஒரு பிரிவு ??) பற்றி நான் எங்கேயோ படித்த நினைவு - மொட்டை என்று கத்தியால் மழிப்பது அவர்கள் வழக்கம் இல்லையாம். ஒரு சில முடிகளை பிடித்து பலவந்தமாக இழுத்து....மேலும் மேலும்..... "கத்தியை உபயோகப் படுத்தாமல்" அஹிம்சா " முறையில் மொட்டைச் சடங்கை நிறைவேற்றுவார்களாம்.இப்போதும் இந்த "படு துன்பமான" வழிமுறை வழக்கத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
ரொம்ப மதங்கள் பற்றியே எழுதி விட்டேன். வெள்ளைக்காரர்களும், head shaving என்பதை ஒரு வழக்கமாக அங்கீகரித்து விட்டார்கள். வெயிலுக்காவோ...முடியை அடர்த்தியாக்கவோ ....ஏன், சிலர் அழகுக்காகவோ (Demi Moore என்ற ஹாலிவுட் நடிகை சில பல வருடங்கள் முன்னர் மொட்டை அடித்து pose கொடுத்த சில பல படங்களைப் பார்த்தது என் கல்லூரி நினைவில் நிழலாக தங்கியிருக்கிறது) .... ஏன், சிலர் ஒரு "change "க்காகவோ மொட்டை அடிப்பது சாதாரண விஷயம்.
ஆனால், கடந்த olympic (அதாவது கடைசிக்கு முன் வந்தது..... ஒரு நீச்சல் காரர் (Michael phelps ) தங்க பதக்கங்களை வாங்கி குவித்தாரே நினைவு இருக்கிறதா ? அடுத்த பந்தயங்களிலும் அவர் கலக்கினார் என்ற தான் படித்த ஞாபகம் )
பந்தயத்தில், அந்த நீச்சல் வீரர்கள் போட்டோ சிலவற்றைப் பார்த்து, திடீர் என்று திடுக்கிட்டு போனேன்.......!! அனைவரும்....அநேகமாக அனைவரும் தலையை மொட்டை போட்டு இருந்தார்கள்......!! என் அருகில் இருந்த நண்பர் ஒருவர் அதற்கான "scientific " விளக்கத்தை அளித்தார்..(எந்த அளவு உண்மையோ எனக்கு தெரியாது ) - அவர்களுக்கு நீச்சல் போட்டிகளில், தடுப்பு சக்தியை குறைத்து (resistance ) அவர்களுக்கு சில மில்லி மீட்டர்கள் advantage கொடுக்க மொட்டை பயன்படுகிறதாம். எப்படி இருக்கிறது சங்கதி.....? மொட்டை என்பது ஆன்மிகமும், வழக்கமும் தாண்டி தீவிரமான ஒரு விளையாட்டு சங்கதி என்பதை கவனத்தில் கொள்க......!!
சரி, மிகவும் நீளமாகி விட்டது இந்த பதிவு..... "மொட்டை"யாக முடிக்காமல் இரண்டே இரண்டு தகவல்களுடன் முடித்து விடுகிறேன்.....
(1) எங்கள் வீட்டு முதல் பேத்தி - 25 வருடங்களுக்கு முந்தையது இந்த படம்.
இப்போது இவளுக்கே மகள் பிறந்து விட்டாள். தலை முடியோ மனிதர்களோ, வளர்ந்து தானே ஆக வேண்டும்....?
என்ன சொல்கிறீர்கள் ?
(2) சுமார் ஒரு மாதம் கழித்து "வழுக்கை மஹாத்மியம்" எழுதலாம் என்று ஒரு நப்பாசை. அது ஒரு சங்கல்பமாக உருவாகி...., அந்த மொட்டைத் தலை (பழனி) முருகன் எங்கள் வீடு கணினியின் எலியில் (mouse ) எழுந்து அருளி......உங்களுக்கு என் மூலம் "வழுக்கை உணர்வு" மன்னிக்கவும், விழிப்பு உணர்வு பெற்றால்....நான் தன்யன் ஆவேன்....
எப்போதும் போல், பேரன்புடன்.....மாறாத வாஞ்சையுடன்
சுச்சு என்று அழைக்கப்படும் சுரேந்திரன்