அன்புடையீர்
ஒரு பூங்கா எப்படி முழு அகண்டமாக விரிய முடியும் என்று சென்ற பதிவில் என்னால் இயன்ற அளவு சொல்ல முயன்று இருந்தேன் - ஆங்கிலத்தில்.
முன்னரே சொன்ன படி , எனக்கு இந்த பதிவு (மனிதம்) தமிழில் எழுதத் தோன்றியது.
தொடங்கட்டுமா ?
இந்த பதிவில் நான் எழுதப்போவது - என் தினசரி நடைப்பயிற்சியின் பொழுது, என் காதில் விழுந்த -நான் இரசித்த- சில வாக்கியங்களும் (சில சமயம்) அதற்கு பதில் தரும் வகையில் எனக்கு தோன்றிய பதில்களும் பற்றியது.
வேகு வேகு - என்று என் முழு வேகத்தில் நெஞ்சு நிமிர்த்தி உடலில் வியர்வை பொங்க நான் நடந்து கொண்டு இருந்தாலும் (இறை அருளால்) மூடிகள் இல்லாத காதுகளில் தேவைக்கு மேலாகவே மற்றவர்களின் சம்பாஷனைகள் வந்து மோதுவதும் அவற்றை நிச்சலனமாக கவனிப்பதும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தால் ஆராய்வதும் ஒரு தனி சுகம்.
ஒரு குறிப்பிட்ட நாளில் எனக்கு பின்னே வந்து கொண்டிருந்த (நன்கு படித்த நாகரிகமான) இரு நண்பர்கள்.....நமது உலக நாயகன் ,கமல் பற்றி பேசுகிறார்கள் என்று யூகித்தேன். ஒரு அழகான கருத்து என் காதில் விழுந்தது....."நல்ல actor தான்.....!! எதுக்கு director ஆகவும் try பண்ணனும்.....? இன்டர்நேஷனல் level - ல போக ஆசைப்படறவர் எல்லாத்தையும் செய்ய ஆசைப் படக்கூடாது. Practical -ம் இல்லை"; கமல் பற்றி என் கருத்தும் ஏறக்குறைய அது தான் என்பதால் எனக்குள் பூத்த முறுவலை நான் அடக்க முயற்சி எதுவும் செய்யவில்லை.
மற்றொரு நாளில் ஒரு பெண்மணி தன் கூட நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்த ஒரு முதிய தம்பதிகளிடம் புன்னகையுடன் சொல்லிக்கொண்டு இருந்தார்...."எல்லாருக்கும் ஒரே emotions தானே இருக்கு ?"
சட்டென்று நின்று அவரிடம் " feelings (உணர்வுகள்) வேணா ஒரே மாதிரி இருக்கலாம் ; emotions (உணர்ச்சிகள்) அவரவர் பக்குவத்துக்கு ஏற்ப மாறுபடும்" என்று சொல்ல வாய் வரை வந்து விட்டது..
நல்ல வேளை .... என் நடை வேகம் என் மன வேகத்தை விட அதிகமாக இருந்ததால் அவர்களைத் தாண்டி வெகு தூரம் சென்று விட்டேன்.
அது என்னவோ தெரியவில்லை....பூங்காவில் நடக்கும் போது மிகப்பலர் mobile போன்-ல் பேசுவது (அல்லது ஒருவேளை அவர்கள் பேசும் பொழுது நடை பழகுகிறார்களா ? ) வழக்கமாக இருக்கிறது. ஒரு மூதாட்டி தன தளர்ந்த நடையின் போது கணீர் குரலில் " பணம் சம்பாதிப்பது சுலபம்; மனுஷாளை அவ்வளவு சீக்கிரம் சம்பாதிக்க முடியுமா ?" என்று தார்மிக கேள்வி ஒன்றை யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்த பொழுது அவரை புயல் வேகத்தில் நான் கடந்தேன்....
நின்று அவருக்கு ஒரு கனிவான முத்தம் தர ஆசைதான்......!!
இராத்திரி "பலான" படம் பார்த்து விட்டு நேரம் கழித்து படுத்ததில் ஒருவருக்கு காலை எழுந்திருக்கையில் உடல் எல்லாம் வலியாம்.
மிகவும் ஆதுரத்தோடு மாலை நடையில் தன் பூங்கா நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்க அவரை அவர் நண்பர்கள் கேலி செய்தது கொண்டு இருந்தார்கள். புன்சிரிப்போடு அவர்களை நான் கடக்கையில் அவர் தன நண்பரிடம் சோகமாக சொல்லிக்கொண்டு இருந்தார்...."chicken இல்லாம சாப்பாடு உள்ள போக மாட்டேங்குது; நாமெல்லாம் எங்க diet இருந்து உடம்பை குறைக்கிறது ?.....நடைதான் நமக்கெல்லாம் சரி" என்று;
அவர் எந்த (கெட்ட ) படத்தையும் பார்க்காமல் - அளவோடு நல்ல சாத்விக உணவு சாப்பிட்டு பொழுதோடு தூங்கி காலையில் எவரிடமும் வெட்டி பேச்சு பேசாமல் விறு விறு என்று நடை பழகினால் கண்டிப்பாக அவருக்கு நல்லது என்று எனக்கு பட்டது.
யார் போய் அவரிடம் சொல்வது.....?
பேசிக்கொண்டே நடப்பவர்களில் கிரீடமே அளிக்கும் வகையில் ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி. பேசும் விஷயங்களில் இருந்து ஒரு tution டீச்சர் என்று யூகிக்கிறேன். தன சிநேகிதியுடன் அவர் நடையால் கரைக்கும் calorie களை விட தன பலத்த குரலால் (mike முழுங்கிய தொண்டையோ ? நான் அறியேன்) வெட்டிக் கதை பேசுவது நூறு மீட்டர் வரை கேட்பது எனக்கு ரொம்பவே பழகி விட்டது. இப்பொழுதெல்லாம் அவரைப் பார்த்து ஆச்சரியப் பட ஆரம்பித்து விட்டேன்......(height of energy - you know )
இது போல் பலப் பல மனிதர்கள்.
முதல் நாள் நடைக்கு கூட்டி வந்த செல்ல மகளை (டீன் ஏஜ் - சற்று உடம்பு பெருத்த பெண் தான்) அவரது பெற்றோர் - அவள் கால் வலியால் தளரும் போதேல்லாம் - "போகப் போக சரியாயிடும்" என்று தேற்றும் அவளது பெற்றோரை பார்க்கும் பொழுது என் மனமும் வாஞ்சையால் விம்மும்....(கடந்த பத்து நாட்களாக அந்த குண்டு பெண் - நடை பழகி, பிடித்துப் போய் உற்சாகமாக நடக்கிறாள் என்பது தற்போதைய மகிழ்ச்சியான செய்தி)
பூங்காவில் ஒரு ஓரத்தில் அமைந்து இருக்கும் ஒரு மேடையில் yoga பழகும் 10 - 12 மக்களை வெறித்து பார்த்தவாறு நிற்கும் ஒரு முதியவர்.
அது கடந்த கால - அதாவது அவர் உடற்பயிற்சி செய்து வந்த பொற்காலம் - பற்றிய பசுமை நினைவுகளா அல்லது அவர் செய்யத் தவறி விட்ட தருணங்கள் வாய்ப்புகள் பற்றிய மருகலா - என்று எனக்கு சரியாக புரியவில்லை. கேட்பது நாகரிகம் இல்லை....மேலும் யாரிடும் பேசி பழகும் மனநிலையில் நானும் இருப்பதில்லை.
நான் இந்த மூன்று மாதங்களில் (நூறு நாட்கள் தாண்டி விட்டேன் என்று நினைக்கிறேன்) இவர்கள் யாரிடமும் பேச முயற்சி கூட செய்வது இல்லை.
ஒரே ஒரு முறை கண்ணோடு கண் நோக்கி ஒருவரைப் பார்த்து புன்னகை மட்டும் செய்தது இருக்கிறேன்.
அவர் (அவன் ??) அநேகமாக தினமும் ஒரு bench -ல் அமர்ந்து கொண்டு தாடியும் மீசையுமான ஒரு - பித்தன் போன்ற - இளைஞன். நிறைய பழைய காகிதங்களை வைத்துக்கொண்டு (அவற்றில் பலவகையான கிறுக்கல்கள்) ஒரு குறிப்பிட்ட bench ல் அமர்ந்து கொண்டு அந்த காகிதங்களில் மேலும் என்னவோ தீவிரமாக எழுதிக்கொண்டு இருப்பான். யாரிடமும் பேசுவதில்லை - என்னைப்போலவே !!
ஒரு முறை - ஒரே ஒரு முறை - அவனை தாண்டி போகும் பொழுது யதேச்சையாக எங்கள் கண்கள் சந்திக்க, நான் அவனைப் பார்த்து முறுவலித்தேன். அவனிடம் ஒரு கணம் திகைப்பு - மறு கணம் குழந்தை போல் கள்ளமில்லாமல் பதிலுக்கு சிரித்தான். அவ்வளவு தான். அதற்கு பிறகு அவனிடம் எதுவும் கண் தொடர்பு கூட இல்லை.......!!
ஆம்.....நான் முதலிலேயே சொன்ன மாதிரி இந்த நடைப்பயிற்சி ஒரு யோகமாகவே எனக்கு படுகிறது.
அனாவசியமான புதிய தொடர்புகள், குசல விசாரிப்புகள் இவற்றினால் என் மௌனத்தை அழித்து தொலைத்து விடாமல், அந்த உன்னதமான மன நிலையை அந்த ஒரு மணி நேரம் முழுவதும் இருத்தி வைத்துக் கொள்ளவே எனக்கு ஆசை.
பிரபஞ்ச அழகையும் இந்த அண்டத்தின் சிறு வடிவமான நமது பிண்டத்தின் அழகையும் இரசிக்க சில நேரம் யோகம் போன்ற விஷயங்கள் ரொம்பவும் உதவியாய் இருக்கிறது.
சுரேந்திரன்
No comments:
Post a Comment