அன்புடையீர்
"தூரத்து பச்சை கண்ணுக்கு அழகு" என்ற பழமொழி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? வசூல் ராஜா படத்தில் கமல் சொல்வது போல், இது ஒரு "அனுபவிக்க " வேண்டிய பழமொழி.....(ஆராயவும் விஷயம் உண்டு என்பது வேறு விஷயம் !! ).
ஆனால் எனக்கு தெரிந்த வரையில் ஒரு இளக்காரமான தொனியில் மட்டுமே இது உச்சரிக்கப்படுகிறது. நமது உணர்ச்சிகரமான வாழ்க்கை அனுபவங்கள் நாம் தளர்ந்து போன பின் வியப்பாக, வெறும் நினைவுகளாக மாறுவது போல, இந்த பழமொழியை ஒரு இனிமையான கண்ணோட்டத்திலும் அனுபவிக்கலாம்.
திரையிடப்பட்டு சுமார் 2 வருடங்கள் மேல் ஆன மௌன குரு படத்தை நான் இரு மாதம் முன் பார்க்க வாய்க்கப்பெற்றேன். பிரமிக்கத்தக்க பல விஷயங்கள் பல இருந்தாலும், என்னை அது பற்றி எழுத தூண்டினாலும், என் இச்சையை அடக்கி கொண்டேன் என்று சொல்வதை விட மறந்து விட்டேன் என்று தான் ஒத்துக்கொள்ள வேண்டும்.
போன வாரத்தில் அதே படத்தை (ஒன்றல்ல .....இரு முறை) வீட்டில் பார்த்த பொழுது தான் இந்த படத்தின் உருவாக்கத்தில் இருந்த நேர்த்தியும் அழகும் நன்றாக புரிந்தது......!!
(எனக்கு தெரிந்த வரையில்) கதையில் எந்த ஒரு ஓட்டையும் தட்டுபடாமல் இவ்வளவு சுவாரஸ்யமான திரைக்கதையுடன் எடுக்கப்படும் ஒரு சினிமா அரசியல் காரணங்களுக்காக (அப்படித்தான் கேள்விப்பட்டேன்) திரையரங்களில் அவ்வளவாக ஓட விடாமல், ஏன் - அதிகம் பேசப்படாமல் போனது தமிழின் துரதிஷ்டமே.......!!
(இது வெளி நாட்டு படம் ஏதாவது ஒன்றின் தழுவல் அல்லது பெருமளவு கதைத் திருட்டுக்கு உள்ளான ஒரு படமோ - நான் அறியேன்.....!!)
திரைக்கதை - மூன்று தளங்களில் ஒரே நேரத்தில் விறுவிறுப்பாக செல்வது, பின் ஒன்றோடு ஒன்று அழகாக நெருங்கி ஒருமிப்பது .......ஒரு (தமிழ்க்) குடும்பத்து அழகுப் பெண் தனது நீளமான கூந்தலை மிக நேர்த்தியாக பின்னி இருப்பது போன்ற ஒரு தோற்றம் ......;
(இது தான் கவிஞனின் மனநிலையில் ஒருவன் எப்போதும் வாழ்வதில் இருக்கும் தொல்லை....அல்ல....இன்பம்)
கடைசியில் அந்த காலத்து ஸ்டைல்-ல் குஞ்சலம் வைத்தது போல் ஒரு அற்புதமான கிளைமாக்ஸ்......; வசனங்களின் கூர்மையும் கதையின் தன்மையும் - நம்மை அங்கே இங்கே திரும்ப விடாதவாறு - ரொம்பவும் கவனமாக அமைக்கப்பட்ட ஒரு படம்....
அந்த கதாநாயகன் (கலைஞரின் பேரப்பிள்ளைகளில் இவன் தான் ரொம்ப எளிமையோ ? Air of Simplicity யுடன் - இந்த கதைக்கு பொருத்தமான ஒரு தேர்வு. அவனது வித்தியாசமான, சற்று விந்தையான குரலும், ஏற்ற இறக்கமும் போகப் போக பிடித்துப் போய் விடுகிறது. நிஜத்திலும் ஒரு விசித்திர பிறவி தானோ என்னவோ ?
(நல்ல வேளை - ஸ்டாலினின் செல்லப்பிள்ளை இந்த படத்தில் நடிக்கவில்லை....; தமிழுலகம் சார்பில் ஒரு பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்)
கொஞ்சம் யோசித்து பார்த்தால் பழனியம்மாள் கதாபாத்திரம் ஒரு கர்ப்பிணி பெண்ணாக இருக்க வேண்டிய கட்டாயம் கதையில் நிச்சயம் கிடையாது. கதாநாயகனின் உணர்ச்சியற்ற அந்த குரலை ஏற்றுக் கொண்டது போல், அவளையும் மனப்பூர்வமாக கதையின் அங்கமாக ஏற்றுக்கொண்டு விடுகிறோம்; பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். உமா ரியாசுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காதது அகண்டத்தில் புரியாத பல புதிர்களில் ஒன்று.....!!
பாந்தமான அந்த கதாநாயகியும், வெறுமே வெறித்தும் முறைத்தும் பார்க்கும் அந்த அக்காவும், அழகு ராகத்தில் பேசும் அந்த அம்மாவும், பட்டும் படாமலும் இருக்கும் அந்த அண்ணனும் அவரவர் பகுதியை நிறைவாகவே செய்தது இருக்கிறார்கள். வில்லர் கூட்டமும் பொருத்தமான தேர்வு....மற்றும் நடிப்பு.
title song - ல் அந்த சிவனடியார்கள் போடும் குத்துப்பாட்டு ஒன்று தான் கொஞ்சம் அன்னியமாக அனாவசியமாக என் பார்வைக்கு பட்டது. பொதுவாகவே பாடல்கள் சுமார் ரகத்தில் சேர்ந்த்தவை தான்....(நல்ல விஷயங்களில் கொஞ்சம் திருஷ்டிப் பொட்டும் தேவை தானே ?)
மேலும், அநேகமாக பெரும்பாலான வசனங்கள் கதையோடு இழைந்து இருப்பதால் - பரீட்சைக்கு தயார் செய்து கொள்ளும் தீவிரம் , தனிமை மற்றும் கவனம் படத்தை முழுவதும் புரிந்து கொண்டு இரசிக்க அவசியம்; இதுவும் ஒரு குறையாகவே நான் பார்க்கிறேன்.
ஓரளவு புரிந்து கொண்ட ஒரு படத்தை - பிடித்து பார்த்த ஒரு படத்தை சற்று நாள் கழித்து மீண்டும் அதே அளவு தீவிரத்தோடு பார்ப்பது எவ்வளவு வசீகரமாக இருக்கிறது ?
தூரத்து பச்சை கண்ணுக்கு அழகு தான்.......
இந்த பழமொழியை நக்கலாக சொல்லாமல், மனப்பூர்வமாக மீண்டும் சொல்கிறேன்.
தவற விட்டிருந்தால் தேடி பாருங்கள்.
புத்திசாலி இயக்குனர் ஒருவர் (புதியவரோ ?) எடுத்து இருக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் நல்ல முயற்சி.
cinemaவை கேளிக்கையாக எண்ணாமல் தேடலுடன் இருப்பவர்கள் தவற விடக்கூடாத ஒரு படம்.
புத்திசாலி இயக்குனர் ஒருவர் (புதியவரோ ?) எடுத்து இருக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் நல்ல முயற்சி.
cinemaவை கேளிக்கையாக எண்ணாமல் தேடலுடன் இருப்பவர்கள் தவற விடக்கூடாத ஒரு படம்.
எத்தனை கோடி இன்பம் வைத்தே என் இறைவா....
அன்புடன் சுரேந்திரன்
No comments:
Post a Comment