அன்புடையீர்
கடையேழு வள்ளல்கள் பற்றி படித்திருக்கீர்கள் தானே ? பாரி, ஓரி ....என்று ஆரம்பிக்கும் அந்த பெருமக்கள் பற்றி ஒரு ஞாபகச் சுவடாவது மனத்தில் தங்கி இருக்கிறதா ?
இந்த அகண்டத்தில் எனக்கு மிகப்பெரிய வருத்தம் இது தான்.....!! மக்களுக்கு மறதி மிகவும் அதிகமாகி விட்டது....!!
இந்த தொடர் - சொல்ல மறந்த கதை - கருத்தே அதுதானே ?
எதற்கு இவ்வளவு பீடிகை ?
எனக்கு வள்ளல் என்ற சொல் மனத்தில் உடனே ஏற்படுத்தும் பிம்பம் புஸ்தி மீசை கொண்ட ஒரு மலையாளி - யின் கனிவான முகம் மட்டுமே !!
பாரி எப்படி இருந்தானோ எனக்கு தெரியாது..... என் காலத்தின் என் அனுபவத்தில் நான் கண்ட வள்ளல் பெருமான் இவன் தான்....!!
ஒரு இருபது வருடம் பின்னோக்கிச் செல்வோம்....வாருங்கள்....!!
என் நண்பர் குழாம் மதிய உணவு முடித்து மந்தமாக ஓய்வாக கல்லூரியின் அருகே ஒரு சிறிய பெட்டி கடை போல் தோற்றம் அளிக்கும் ஒரு பழைய கடைக்குச் செல்லும் காட்சி....
அந்த சிறிய (அநேகமாக ஐந்துக்கு ஐந்து அடி !!) கடையில் வாலிபர்களுக்கு தேவைப்படும் - அகண்டத்தில் கிடைக்கும் அத்தனையும் சீராக அடுக்கப்பட்டு.....எங்கள் வருகைக்கு எப்போதும் தயாராக நாயர்....!! எறும்பு போல் சுறுசுறுப்பு .... மாறாத புன்னகை....!!
சிகரெட் வழக்கம் இல்லாத எங்களைப் போன்ற "பழம்" மாணவர்களுக்கு பல்வேறு வகையில் பழ ரசங்கள்.....!! எங்களுக்கு மிகவும் பிடித்தமானது "வாழைப்பழ ஜூஸ்"....அநேகமாக தினமும் - விலை இரண்டு ரூபாய் இன்று ஞாபகம்....!!
சொல்ல வந்தது - அந்த சுவையான ஜூஸ் மட்டும் அல்ல....அவர் ஒவ்வொரு முறையும் தவறாது எங்கள் டம்ளர் பாதி அளவு ஆகும் பொழுது உவந்து அளிக்கும் அந்த கொசுறு ஜூஸ்....(அதுவும் கடையின் தடுப்பு தாண்டி வயிற்றை எக்கி அவர் எங்கள் டம்ளர் நோக்கி வரும் காட்சி......!! நாயர்......நீங்கள் என்றும் எங்கள் மனத்திலிருந்து அகல முடியாது...).
வளரும் வயதில் எப்போதும் காயசண்டிகைகளாக (மணி மேகலையில் அலையும் ஒரு அரக்கி பாத்திரம் - தெரியுந்தானே ?) பசியோடு வாழ்ந்த எங்களுக்கு - எங்கள் சொற்ப சில்லறையில் மனக்கணக்கு வாழ்க்கையில் நிச்சயமாக பாரியாக ஒரியாக பேகனாக இருந்தவர் அவர்....!!
நிற்க....!! மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியின் அருகே இப்போது கூட அந்த கடை இருக்கக் கூடும்....!! அந்த தெரு சற்றே மாறியிருக்கலாம்....வாகனங்கள் அதிகரித்து இருக்கலாம்.....நாயர் இன்னமும், கனிவோடு தேவையான அளவுக்கு "சற்றே" அதிகமாக இன்னமும் நிச்சயம் ஜூஸ் போட்டுக் கொண்டு தான் இருப்பார்....!! எனக்கு அதில் எள்ளளவும் சந்தேகமில்லை....!!
இது நாயர் பற்றிய மகாத்மியம் மட்டும் இல்லை....!!
போன மாதம் நடந்த ஒரு சிறிய நிகழ்ச்சி....!! அப்பா அம்மா இருக்கும் வீடு போக கருதி ஆபீஸ் லிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் பஸ் -ல் ஏறி ஒரு நாள் சென்றேன். தாம்பரம் ஸ்டேஷன் அருகே நடை பாதையில் முகம் கை காலெல்லாம் முற்றிப் போன ஒரு மூதாட்டி - கூடையில் கடைசி வாடிக்கை - யாளனுக்காக காத்திருக்கும் சிறிய அளவு பச்சை மணத்தக்காளி.....!!
என் அம்மாவுக்கு விருப்பமான ஒரு பண்டம் (எனக்கும் கூட.....) !!!
சட-டென்று நின்ற நான், குனிந்து "எவ்வளவு" என்று கேட்க "ஆழாக்கு பத்து ரூபாய்" என்று பதில் வந்தது....!!
சரி, குடுங்க என்று குரல் கொடுத்த நான் காத்திருக்க, பாட்டி அளந்தெடுத்த அளவுக்கு மேல் மற்றும் ஒரு அரை ஆழாக்கு கூடையில் மீதம்.....!!
மிகவும் இயல்பாக, அந்த மூதாட்டி அதையும் சேர்த்து பொட்டலம் கட்ட, நான் ஒரு கணம் "உணர்ச்சி வசப்பட்டேன்" ....!!
ஒரு வார்த்தை பேசாமல் என் கண்ணைக் கூடப் பார்க்காமல் இருந்த பாட்டிக்கும் அவள் சமூகத்துக்கும் இருபது ரூபாய் இயைந்து அளிப்பது தவிர நான் என்ன செய்மாறு செய்ய முடியும்.....?
ஐயன்மீர்....!! வள்ளல் தன்மை இந்த கடையேழு வள்ளல்களுடன் முடிந்து விடுவது அல்லவே ? என்னைப் பொறுத்த வரை மானுடம் வாழ்வதும், இன்று வரை மழை பொய்க்காது பொழிவதும் சரித்திரத்தில் இடம் பெற்ற இந்த கடையேழு வள்ளள்களால் - மட்டுமல்ல....!! இந்த கடைப்பட்ட பெரிய மனது கொண்ட நாயர்களாலும் மூதாட்டிகளாலும் தான்.....
நமக்கு ரோல் மாடல் ஆக அகண்டத்தில் ஆயிரம் பேர்.....!! இந்த சொல்ல மறந்த கதை சரித்திரத்தில் போய் சேராத என் காலத்து சாதாரண பிரஜைகளுக்கு.....!!
சுரேந்திரன்
No comments:
Post a Comment