நமது வாழ்க்கையில் சுவாரஸ்யமே நாம் மறந்து போய்விட்ட அந்த அற்புதமான கதைகளில் தான்....!!
ஒரு வகையில் பார்த்தால் நமக்கு நமது முதலமைச்சர் போல் selective amnesia இருந்தால் தேவலை என்றே தோன்றுகிறது - அதாவது இன்னும் ஒரு படி மேலே....!!
மறந்து தொலைக்க வேண்டிய கசப்பான நிகழ்ச்சிகளை விட்டெறிந்து நாம் சந்தோஷித்த நமக்கு திருப்தி அளித்த மிகப்பல சொல்ல மறந்த கதைகளை நம் மூளைக்குள் அடுக்கி வைத்தோம் என்றால் ஒவ்வொரு நாளும் ஆனந்த வைபோகமே ...!!
Mundane Matters என்று தலைப்பிடப்பட்ட என் எண்ண அலைகள் (musings ) சொல்லும் அதே செய்திகளைத் தான் தமிழில் எழுதப்போகிறேன் இந்த தொடரில்....!! வாழ்க்கையின் அற்பமான சில கணங்களின் அற்புத கோவையாக எழுத இருந்த கட்டுரை, நேற்று நடந்த ஒரு சிறு சுவையான சம்பவத்தினால் - ஒரு கட்டுரையாக எழுதி முடிக்கப்படாமல் ஒரு தொடராக விரியப் போகிறது....தமிழிலும் ஆங்கிலத்திலுமாக...!!
இது என் வருங்கால ஞாபகத்திற்கு மட்டுமல்ல. என் அன்பு மகளுக்கு நாளை (தன் நண்பனாய் வலம் வரும்) தகப்பனைப் பற்றி அவன் வாழ்ந்த தன்மை பற்றி கொஞ்சமாய் பிரமிக்க வைக்கும் இன்றைய ஒரு பேரிளைஞனின் (பேரிளம்பெண் - க்கு எதிர்ப்பதம் என்னவோ ?) போராட்டச் சவால் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
அதைவிட முக்கியமாக படிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் சொல்ல மறந்த கதைகள் பற்றி நினைவுறுத்தவே எழுதுகிறேன் .....!!
இதைப்படிக்கும் நீங்களும் நானும் ஏதோ ஒரும் புள்ளியில் ஒரு சம்பவத்திலாவது சேரும் வரை பொறுமையாக படிப்பீர்கள் தானே ??
நிற்க...இனி வருவோம் என் நேற்றிய சம்பவத்திற்கு.....!!
நாளை அதை விட சுவாரஸ்யமான நிகழ்ச்சி வரும் முன், ஞாபகப்பிசகான என் மூளையிலிருந்து இது முழுவதுமாக கழன்று தொலைக்கும் முன்...!!
அற்புதமான குரு வாரத்தில் (அதாவது வியாழக்கிழமையில் ) வழக்கத்தை விட கம்பீரமாக office போகும் என் உருவம் எங்கள் flat வாசலில்.....கார் நோக்கி - வெள்ளை சட்டையோடு ...உங்களுக்கு தெரிகிறதா ? சற்று உற்று கவனியுங்கள்....என் முகத்தின் இடப்புறம் காது பக்கத்தில் (மச்சமல்ல ) கருப்பாய் hands free தெரிகிறதா ? ரொம்ப சந்தோஷம் !!
வாழ்க்கையில் முதல் முதலாக ஏற்படும் சின்ன சின்ன மாற்றங்களை இயந்திரமாய் ஏற்றுக்கொள்ளும் பிரகுதியா நீங்கள்....? இந்த கட்டுரை உங்கள்ளுக்கு நிச்சயம் கிடையாது - விலகி விடுங்கள்....!!
ஒரு basic model கைபேசியை கிட்டத்தட்ட சாகும் வரை தங்கப்போகும் பிரிய வஸ்துவாய் நினைத்து முழு திருப்தியாய் வாழ்ந்து வந்த எனக்கு தலைவலியால் வந்த ஒரு திருப்பம் இந்த blue tooth எனப்படும் மாய வஸ்துவும் இந்த கிருதா போன்ற அதன் சாதனமும்.....!!
அது கூட என் காந்திய மனசாட்சி புது கைபேசி வாங்கி கொள்ள இசையவில்லை.
கிட்டத்தட்ட அண்ணா ஹசாரே போல் சமரசம் தான் செய்து கொண்டேன்....!!
என் தர்மப்பத்னியை பிரிய வார்த்தைகள் சொல்லி புது கைபேசி வாங்கச் செய்து எனக்கு அவள் உபயோகித்து வந்த பழைய வஸ்துவை எடுத்தக் கொண்டேன்; புத்தாண்டு தள்ளுபடி விலையில் எனக்கு என் நரைக்க ஆரம்பித்து விட்ட தலையின் அடியோரத்தில், கன்னங்கரேல் என்ற கிருதா போல் இந்த புதிய வஸ்து....!!
கிளுகிளுப்பான ஒரு மன நிலையில், சமையல் மேடையின் முன்னால் நின்று கொண்டு ஒரு அதிகப்படி உற்சாகத்தோடு beet root நின்ற படியே நறுக்கிக் கொடுத்தேன்....என் lunch -ல் கறி அமுதம் வேண்டாமா ?
நான் வீட்டை விட்டு கிளம்பும் நேரம் 6 40 - அப்போது தான் பஸ் பிடிக்கமுடியும்....!! அன்று city ஆபீஸ் போவதாக plan இருந்ததால், சிறிது கூடுதல் நேரம் கிடைக்கும் என்ற உற்சாகம் மனத்தில் !!
மதிய உணவை மேலும் வளப்படுத்த தேங்காயை உடைத்து துருவி கொடுத்த எனக்கு மனசெல்லாம் blue tooth பற்றி எண்ண அலைகள்....!!
கிளம்புவதற்கு பத்து நிமிடம் முன்னால் எனக்கு இந்த கருவியை உபயோகப்படுத்தும் முறை பற்றிய உபதேசம் என் இல்லாள் மூலம் கிடைத்தது.....!! மிகவும் பொறுமையாக சொல்லித் தந்தாள் பாவம்....!!
பிறகு ஓரளவு ஞானம் பெற்று கிருதா போன்ற அந்த வஸ்துவை கழற்றி மாட்டி, அணைத்து ஒளிரவிட்டு, அப்பப்பா ... "ஆத்ம ஞானம் அதி சுலபம்" என்று எப்படி சொன்னார்களோ தெரியவில்லை....!!
புரிந்ததாக தோன்றும் விஷயம் ஒரு நிமிடத்திலேயே தடுமாற வைத்து நிறைவை நோக்கி ஏங்க வைக்கிறது.... "யாதனின் யாதனின்...." என்று தொடங்கும் திருக்குறள் உதட்டில் மின்னி மறைகிறது.....!!
சுபம்....
இதோ இந்த வீட்டின் தலைமகன் முழு உடுப்போடு கம்பீரமாக புறப்படுகிறான்...
கணினி பை ஒரு தோளில் ஊசலாட மறு கையில் மதிய உணவுப்பை....!!
மிகவும் நிதானமாக புறப்பட்ட காரில் காதில் கருப்பு கிருதாவோடு நாளெல்லாம் வரப்போகும் தொலைபேசி உரையாடலை விஞ்ஞான ரீதியில் இன்று எதிர் கொள்ளப் போகிறான்.....!! சற்று மெதுவாக பேசினால் கூட போதும்....நடக்கும் போதும் உட்காரும்போதும்...மிக நளினமாய் உறுதியாய் உரையாடப்போகிறான்....!!
அரை கிலோ மீட்டர் கூட தாண்டவில்லை.... தொலைபேசியின் அழைப்பு. மிகவும் கிளுகிளுப்போடு காரை ஓரமாய் நிறுத்தி (காரும் புதுசு.... காது வளையமும் மிகப் புதுசு.... என்ன செய்ய....?), காதருகே விரலை கொண்டு போய் (சற்றே) அங்கங்கே தடவி, புத்தானை அழுத்தி, கம்பீரமாய் ஒரு குரல் "ஹலோ "...தர்மபத்தினி தான்....சற்று படபடப்பாக பேசுகிறாள் ....."அப்பா... பீட் ரூட் கறி வெக்க மறந்துட்டேன்... திரும்ப வர முடியுமா ?" குரலில் ஒரு (வழக்கமில்லாத) ஆதுரம்....குற்ற உணர்ச்சி ...கிட்டத்தட்ட அந்த கறியை செய்த ப்ரும்மாவே நான் என்பதால்....!!
ஒரு க்ஷண சஞ்சலம் தான்...உறுதியாக பதில் சொன்னேன்...."போனால் போகட்டும்...சாயங்காலம் சாப்பிடறேன்".
சமயத்தில் நான் இந்த மாதிரி தெளிவாக விவேகமாக முடிவு எடுப்பது உண்டு.....நம்புங்கள்.....!!
இது .... "beet root " - blue tooth ஆன கதை மட்டுமல்ல....!ஒரு சிறிய மாற்றம் என் மனத்தை எக்கு போல் உறுதியாக்கிய கதையும் கூட....!!
கிருஷ்ணார்ப்பணம்....
சுரேன்