Thursday, March 16, 2017

Part 2 : மணிரத்னம்......மணிமகுடம்......மனிதம் !!??


எச்சரிக்கை :  இந்த தலைப்பில் எழுதப்பட இருந்த என்  சிந்தனை கொஞ்சம் தடம் புரண்டு விட்டது. (மேலும் மெருகு ஏறி விட்டது என்று நீங்கள் கருதினால் நான் புளங்காகிதமே கொள்வேன்...என்பது வேறு விஷயம் )

முன் குறிப்பு : Part 1 எழுதி அதற்குள் - கிட்டத்தட்ட ஒரு மண்டலம் முடிந்து விட்டது.....காலம் வெகு வேகமாக சுழலுவது - நமது ஆரோக்கியமான வாழ்க்கையின் அறிகுறி தானே....? 
ஒரு மாமாங்கம் முடிவதற்குள் Part 2 எழுதுவதற்கு சாத்தியப்படத்திற்கு   எனக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.... (பார்த்திபன் கனவு படத்தில் விவேக் சொல்லுவது போல "எனக்கு வேற யாரு இருக்கா ?? ")

அன்புடையீர்.....

முதலிலேயே உண்மையை - முழு பூசணிக்காய் போல - போட்டு உடைத்து விடுகிறேன் . சுமார் 1 வாரம் முன்னாள் நான் கண்டு களித்த ஒரு திரைப்படம்...மணிரத்னம் இயக்கிய "குரு".
படமாக்கப்பட்டு சரியாக 10 வருடங்கள் கழித்து நான் முதல் முறை இப்போது தான் பார்க்க நேர்ந்தது. ஹிந்தி படமாக இருந்தாலும் என் குறைந்தபட்ச பாஷை அறிவு subtitle - உடன் சம்பாஷித்து மிகவும் நிறைவான அனுபவமாகத் தான் இருந்தது. இந்த பதிவில் மணியின் பல மணியான படங்களை ஒன்றாக கோர்த்து.... முத்தாய்ப்பாக -  "இரத்தினமாக" குரு படத்தை வைத்தது அழகு பார்க்கத் தான் நான்  சங்கல்பம் செய்து கொண்டேன். 
ஆனால்  பாருங்கள் - "காற்று வாங்க போனேன்....கவிதை வாங்கி வந்தேன் " என்ற பழமொழியின் கதையாக இந்த பதிவு தடம் மாறிப் போய்விட்டது.
("பிள்ளையார் பிடிக்க...குரங்காய்.... பழமொழியை நீங்கள் இந்த தருணத்தில் நினைத்து பார்க்க வேண்டியதில்லை..)

குரு படத்தின் நாயகன் அபிஷேக்-கின்  "சுமார்-திறமை" பற்றி ஓரளவு கேள்விப்பட்டு இருந்தாலும், (நான் அவர் நடித்து இராவண் தவிர வேறெந்த படமும் பார்க்க நேர்ந்ததில்லை) இந்த படத்தில் மிகவும் நிறைவாகவே நடித்து இருந்தார் என்று எனக்குப் பட்டது. எனக்கு அவ்வளவாக பரிச்சயமில்லாத "திருபாய் அம்பானி"யின் சாயலை, அந்த மனிதரின் விசேஷ குணங்களை ....வெகு அழகாக அபிஷேக் கையாண்டார்... (பெரியவர்களை இயல்பாக தொழும் செயல் - அநேகமாக படம் முழுவதும்).
நான் பல காட்சிகளில் ஒன்றிப்போய் இரசித்துத்தான்  பார்த்தேன். படம் பார்க்கும்பொழுதே மணிரத்தினத்தின் மற்றோரு படமான "இருவர்" எனக்கு நிழலாடியது...."நாயகன்" கூட....

சரி இந்த பதிவின் மூல பகுதியை ஆரம்பித்து வைப்போம் .... 
குறிப்பிட்ட இந்த மூன்று படங்களின் ஒற்றுமை என்ன என்பது உங்களுக்கு சட்டென்று விளங்கியிருக்கும். நிஜத்தில் வாழ்ந்த / வாழ்ந்து கொண்டிருக்கிற பெரிய மனிதர்களை பற்றி, அவர்களின் வாழ்வின் சில முக்கியமான தருணங்கள் மற்றும் சராசரி தருணங்கள் பற்றி..., அவற்றை அவர்கள் கையாண்ட விதம் பற்றி....சார்பு இல்லாமல், ஒரு பொதுவான பார்வையாக திரைக்கதைகள்.
சரி தானே... ? 
(இந்த மூன்று படங்களில் ஒன்று கூட மூல நாயகர்களின் கதை என்று இயக்குனரால் நேரடியாக அறிவிக்க படவில்லை . biography genre என்பது commercial திரைப்படங்களில் ஒத்துப்போகாத ஒன்று...; அதை விட்டுத் தள்ளுவோம் ).

நிற்க...இப்போது இதே  இயக்குனரின் மற்ற சில படங்களை பார்ப்போம்... 
ஒரு சாதாரணன் அசாதாரண சூழலில் தள்ளப்பட்டு அலைக்கழிக்கப்படும் சில படங்கள்... முக்கியமாக, ரோஜா, பம்பாய், உயிரே. அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டாள்..கடைசி இரண்டு படங்களில் கதாநாயகியாக ஒரு சிறுமியின் வித்தியாசமான நடிப்பு, சுற்றியிருப்பவர்களின் மனப்போராட்டம்... 
இந்த படங்கள் எல்லாமே ஒரு மாதிரியாக - இப்படி ஆனால் ? - hypothetical situation - முன்னிறுத்தப்படும் கதைகள். 

எழுபதுகளில் மகேந்திரன் என்ற மாபெரும் இயக்குனர் நமக்களித்த நவீன படங்களை விட  எண்பதுகளின் பிற்பகுதியில் வந்த மணிரத்னம் அதிகமாக தமிழ் மனங்களை தன்னுடைய திறமையால், நவீன சிந்தனைகளால் நம்மை பாதித்தார் என்பது நிஜம். ஆனால் சொல்லப்பட்ட எடுத்துக்காட்டுகள் போல, பெரும்பாலும் .... பெரிய மனிதர்களின் சாதாரண தருணங்கள் ...அல்லது சாமானியர்களின் முக்கியமான தருணங்கள் - நான் தொகுத்தது சரிதானே....?

வித்தியாசமான களங்களில் திரைப்படங்கள், அற்புதமான ஒளியமைப்பு மற்றும் உன்னதமான இசை இவற்றிற்காக நாம் மணிரத்தினத்தை பல விஷயங்களில் சகித்துக்கொண்டோம் - செயற்கை சொட்டும் பல காட்சிகள் மற்றும் மாந்தர்கள் - உதாரணமாக. ரோஜா படத்தில் இருப்பது போல மனிதர்களை கொண்ட ஒரு கிராமம் எங்கேயாவது கண்டு இருக்கிறீர்களா ? அல்லது மௌன ராகத்தில் கார்த்திக் -ன் அதீத நடிப்பு ("சந்திரமௌலி ....!! mr சந்திரமௌலி" நகைச்சுவை ?)  இப்போது பார்த்தால் நம்மால் சகிக்க முடிகிறதா ? அஞ்சலி படத்தில் படம் முழுக்க இருக்கும் ஒரு வித மேட்டுக்குடியின் செயற்கைத்தனம், அந்த அதீத விபரீத குழந்தைகள்.....
முத்தாய்ப்பாக கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் பலரால் பெரிதும் விமரிசிக்கப்பட்ட மணியின் "ரத்தினச்சுருக்க வசனங்கள்"!!
ஒரு திரைப்படம் "classical " அந்தஸ்தை பெறுவதற்கு முக்கிய அளவுகோல் அந்த படம் எல்லா காலத்திலும் இரசிக்கப்படக்கூடியதாக காலத்தை வென்றதாக இருக்கவேண்டும் ?அல்லவா
இயக்குனர் சிகரமான கே.பாலசந்தர் ரோஜா படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சி (மதுபாலா தமிழில் கெஞ்சுவது புரிபட்டு அந்த மத்திய மந்திரி அவருக்கு ஆறுதல் சொல்லும் கட்டம்) தன்னால் அவ்வளவு அழகாக எடுத்திருக்க முடியாது என்று புளகாங்கிதப்பட்டாராம். நிதி நெருக்கடியில் இருந்த அவர் இந்த படம் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தயாரிப்பில் தான் மீண்டார் என்பது எல்லாருக்கும் தெரிந்த கதை ! 
வேறு என்ன சொல்வார் பாவம்...

மணிரத்னம் - தமிழ் நவீன சினிமாவின் மணி மகுடமாக அங்கீரிக்க பட்டு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின் இந்த பதிவு... என் அங்கலாய்ப்பு அவசியமா என்று தோன்றுகிறதா ? 

நான் சமீபத்தில் கண்டு களித்த "குரு " பற்றி சிலாக்கியமாக எழுத தோன்றிய என் எண்ணம், சட்டென்று  இந்த மேதகு இயக்குனர் மனிதனை - வெறும் சாதாரணானாக இருக்கையிலே தெய்வமாகும் சாத்தியக்கூறு பற்றி  ஏதாவது ஒரு படத்திலாவது நமக்கு புலப்படுத்தி இருக்கிறாரா? என்று யோசித்து பார்க்க...சட்டென்று ஒரு உதாரணம் போலும்.... மின்னல் போன்று ஒரு classic ஆங்கிலப்படம் ஞாபகத்திற்கு  வந்தது... 12 Angry Men .... கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன் வந்த கருப்பு வெள்ளைப் படம்....!!
நான் பார்த்தும் கிட்டத்தட்ட 3 - 4 வருடங்கள் ஆகிவிட்டது. நம்பினால் நம்புங்கள்...இந்த பதிவிற்காக -  மணிரத்தினம் படங்களின் வகைமை பற்றி தெளிவாக புரிந்து கொள்ள - அந்த படத்தை தேடி எடுத்து நேற்று மீண்டும் பார்த்தேன். சுமார் 100 நிமிடம் ஓடும் அந்த படம் முடியும் போது - என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது.
 "இல்லை ...இல்லவே இல்லை"
கண்களின் நீர் வழிய - பார்வை வெறிக்க இந்த பதிவை  - அந்த அற்புதமான ஆங்கிலப்படத்திற்காக  - மனதுக்குள் எழுத ஆரம்பித்து விட்டேன்..

நமது திரைப்படங்கள் செயற்கையாக வெறும் பொழுது போக்காகவே பெரும்பாலும் இருக்க காரணம்...மனிதத்தை (humane ness ?) சரிவர கையாளாததால் தான் என்று .படுகிறது.
முதலில் சொன்னது போல், மணிரத்னம் போன்ற ஜாம்பவான்கள் கூட நம்பி தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் - அசாதாரண மனிதர்களையோ, அசாதாரண சம்பவங்களையே மையமாக  கொண்டவை. எனவே நம் திரைப்படங்கள் மாயைகளாகத்தானே  இருக்கும்.... ? அதற்காக சில வருடங்கள் முன் பிரபலமான கலைப் படங்கள்  (art film ) சரியாக பாதையா  என்று .கேட்டால்...அதுவும் எனக்கு முழுக்க சம்மதம்  இல்லை. அதுவும் எங்கேயோ இடிக்கிறது.
மனிதத்தின் இயற்கையான தன்மையாக உறைந்திருக்கும் தெய்வத்தை நமக்கு தரிசனம் தரச்செய்து -  நம்மை சிறிது அளவாவது கொஞ்ச நேரமாவது உயர்த்தி - குறைந்தபட்சம் படம் முடியும் வரையாவது நம்மை நெக்குருகி -   ஆனால் நம் உணர்வுகள் எதுவும் அந்த திரை மனிதர்களை  எவ்வகையிலும் பாதிக்காமல் அவர்களை இயல்பாகவே இருத்திவைப்பது.... இது ஒரு சாதனை திரைப்படத்தின் அடிப்படை குணாம்சமோ  .... என்று தோன்றுகிறது.

12 Angry Men - முழுக்கதையும் எழுதப்போவது இல்லை.
வெகு எளிமையான படம் - தெளிவானதும் கூட.  
தூக்கு கயிற்றின் பிடியிலிருந்து ஒரு சாதாரணனை தன் வைராக்கியமாக சுயத்தால் (strong personality ?)மற்றோரு  சாதாரண மனிதர் விடுவிக்கிறார். 
இரண்டு மணிக்கு குறைவாக ஓடும் அந்தப்படத்தின் கடைசி நிமிடம் பற்றி மட்டும் ஒரு சில வார்த்தைகள் !
நான் தேடியதை எனக்கு பொட்டில் அடித்தால்போல் புரிய வைத்த அந்த சாதாரண காட்சி படமாக்கப்பட்ட விதம்....அடடா !!

செயற்கரிய ஒரு செயல்புரிந்து விட்டு அந்த ஒல்லியான நெடிய மனிதர் - வானத்தை பார்வையிட்டு, மழையின் பாதிப்பை விழியால் அளந்தவாறு - தன் வழி நோக்கி அமைதியாக நடக்கையில்  <<நம் ஒவ்வொருவர் போலவே!!>>  நாமும் அமைதியில் உறைந்து போகிறோம். 
Human Possibility demonstrated without any pomp - isn't it ?

 இது போன்ற- வாழ்க்கை மீதும் நம்மீதும் நம்பிக்கை தர வல்ல படங்களை மாதத்திற்கு ஒன்று பார்க்க நேர்ந்தால், இரசிக்க முடிந்தால் அதை நம் நல்லூழாகவே கொள்ள முடியும்.

ஆம்.... தீதும் நன்றும் பிறர் தர வாரா !!

கிருஷ்ணார்ப்பணம் !!!

அன்புடன் சுரேந்திரன்










No comments:

Post a Comment