Wednesday, November 25, 2015

"எங்கெங்கு காணினும் சக்தியடா " - 3

எழுத தொடங்கி சில நாட்கள் கழிந்து விட்டாலும் , இது இந்த தொடரின் மூன்றாவது பதிவாக இருந்தாலும் , இன்னமும் நான் மனத்தில் எந்த வித கல்மிஷமும் - ஏன் எழுத வேண்டியதை பற்றிய கணக்கு, திட்டங்கள் (விழைவுகள், விளைவுகள்  கூட....)  எதுவுமில்லாமல், வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து முன்னுரையின் இந்த பகுதியை வெகு  தீவிரமாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். 
எழுத்தாளர்களுக்கும் சிந்தனைவாதிகளுக்கும் இருக்க வேண்டிய "சமூக பொறுப்பு ...அக்கறை...." எதுவும் என்னிடம் துளியும் இருப்பதாக தோன்றவில்லை.
ஒரு வகையில், இந்த பதிவின் மூலம் ஏற்படும் எந்த ஒரு விளைவுக்கும் பொறுப்பெடுக்கும் மனநிலை கூட எனக்கு இல்லை.  
ஐயா....நான்தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே...இது என் தன்னந்தனி ஆவர்த்தனம் (சகிக்க முடியாமல் இருந்தால் கண்களை பொத்திக்கொள்வது அவரவர் பொறுப்பு...உரிமை....)

நிஜத்தை சொல்வதானால் இந்த குறிப்பிட்ட பதிவு பற்றி ஒரு one line மனத்தில்  .உற்பத்தியாகி , மேலும் வளர்ந்து, திடப்பட்டப்பின்,  நேரமும் சந்தர்ப்பமும் வாய்த்தவுடன்  அமர்ந்து விட்டேன்.
இந்த அளவு  பரம்பொருள் உதவி செய்தால் போதும்.....
நான் பாட்டுக்கு தொடர்ந்து எழுதித் தள்ளிவிட முடியும்.

என்னை நெறிப்படுத்த நான் எடுத்திருக்கும் ஆயுதம் தான் இந்த தலைப்பு. கட்டுத்தறி இருக்கும் ஒவ்வொவொரு வீட்டிலும் ஒரு கம்பன் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மை தான். (பல மகா கவிகள் இருப்பது அவ்வளவு ஒப்பாக இருக்காது என்பதால் அந்த பரம்பொருள், கம்பன் போல் ஒரு சிலர் மேல்  அருள் பாலித்தான் என்று தான் தோன்றுகிறது.)

என் மனமும் தறி போன்ற ஒரு கருவியே; இந்த தலைப்பு என் எழுதும் செயலை  கட்டுக்குள் வைக்க ஒரு ஏற்பாடு. இதை தெளிவாக உணர்வதால்,  கிஞ்சித்தும் எந்த வித ஊசலாட்டமும் இல்லாமல் என் மனம் போன வழியில் விரல் பதவிசாக செல்கிறது. 

சக்தியின் தரிசனம் சில சமயங்களில் பெரும் நிகழ்ச்சியில் ஏற்படக்கூடும். பற்பல சமயங்களில் -சிறிய விஷயத்தில், ஏன்  அற்பமான  நிகழ்வு ஒன்றில் கூட ஏற்படலாம். எனக்கு ஏற்பட்ட அந்த அற்புதமான கணங்களை கை வலிக்க, வார்த்தைகள் சலிக்க எழுதிக்கொண்டே போவதில் எனக்கு நிச்சயமாக இசைவு இல்லை.

ஒரு கோட்டோவியமாக புகை மண்டலம் போல் ஒரு தோற்றமாக -  என் அனுபவங்கள் சிலவற்றை நான்  சொல்ல வேண்டியிருக்கலாம். 
அவற்றை சொல்வதன் நோக்கம் -  படிப்பவர்களின் மனத்தில் அவரவர் வாழ்க்கை நிகழ்வுகளின் ஞாபகப் படுத்தத்தான் என்பதற்குத்தான் இவ்வளவு பீடிகை.
எவ்வகையிலும் என் கடந்த வாழ்க்கை சம்பவங்கள் இப்போதும் பெரும் ஆசுவாசமாக, நான் தரிசித்த பெருஞ்சக்தியின் மறுக்க முடியாத சாட்சிகளாக இருப்பதில் எனக்கு இசைவு இல்லை.
அது இறந்து போய்விட்ட காலம்....

எப்போதும் பழையதை  நினைத்து மருகுவோருக்கும், வருங்காலம் நினைத்து உருகுவோருக்கும்  அந்த பெரும்சக்தியின்  தரிசனம் நிகழ்வதில்லை. 
ஆம்...அது எப்போதும் நிகழ் காலத்தில் தான்......!

குறைந்த பட்சம் என்வரையில் அப்படித்தான்......!! 

வளரும் 






   

1 comment:

  1. Aw, this was a really nice post. Spending some time and actual effort to produce a great article…
    but what can I say… I put things off a lot and don't manage to get nearly
    anything done.

    Also visit my blog post; roofing contractors

    ReplyDelete