Tuesday, November 3, 2015

"எங்கெங்கு காணினும் சக்தியடா "

இந்த தலைப்பை..... "ஒரு புதிய தொடர்" என்று  அடைமொழி சேர்த்துதான் அறிவிக்க எண்ணினேன். ..ம்ம்ஹம் .... 

சில நாட்களாவது தொடர்ச்சியாக எழுத எண்ணக் குவியல் உள்ளே பொதிந்து கிடந்தாலும் இடையறாது எழுதுவது என் பிறவி குணத்திற்கு ஒத்து வருமா என்ற சந்தேகம் இருப்பதாலும் ("இடையறாது" என்றால் என்ன - சாப்பாடு, தூக்கம் கூட இல்லாமலா ? ம்ம்ம் .....?), எவ்வளவு நாள் தொடரப்போகிறது என்ற தெளிவு இல்லாத காரணத்தாலும்  "தொடர்" என்ற குறியீடு சரியாக இருக்குமா என்ற சந்தேகம் தோன்றிவிட்டது.  ... 
எனவே அந்த கடைசி வார்த்தையை கைவிட வேண்டியதாகி விட்டது !

"புதிய" என்ற வார்த்தையின்  கதையும் கிட்டத்தட்ட அதேதான்....!! 
நான் 7 - 8 வருடங்களுக்கு முன் எழுதிய சில "பழைய" வைரங்கள் இன்னமும் "பளிச்"சென்று இன்று கூட (எனக்கு) தோன்றுவதாலும் , இதற்கு முன் எழுதிய என் எண்ணற்ற மிழற்றல்கள் இப்போது கூட சில நிகழ்ச்சிகளின் போது - என் நினைவில் வந்து மோதி போவதாலும் எதுவுமே  பழையதாகப் போய் விடுவது இல்லை என்ற விவேகம் எனக்கு சில வருடங்களுக்கு முன்னரே  வந்து விட்டது     
இந்த தலைப்பை ஒட்டி என் சிந்தனைகளை முடிந்த வரை சிந்தாமல் சிதறாமல் பதித்து வைக்க ஒரு "புதிய" முயற்சி அவ்வளவு தான். 
புதிதாய் எண்ணங்கள் தோன்றி விடுமா என்ன.....? அதுவும் எனக்கு மட்டும்.....?? 

அத்வைத விசாரம் இப்போதெலாம் கொஞ்சம் அதிகமாகி விட்டதால்,"ஒரு" என்று சொல்லக்கூட கொஞ்சம் "ஒரு" மாதிரியாக இருக்கிறது....Why to state the  obvious ?

தலைப்பு பற்றிய வியாக்கியானம்  முடிந்து விட்டது....சரி தானே....?

தலைப்பில் எழுத மறுத்த வார்த்தைகளுக்கு இவ்வளவு வாழ்வா ? என்று குமுறுபவர்களுக்கும் , இந்த தலைப்பு மட்டும் ("எங்கெங்கு காணினும் சக்தியடா"​) ரொம்ப அவசியமா...? ஏன் இப்போது இவ்வளவு வார்த்தைகளை இறைப்பது மற்றும் எதில் சேர்த்தி ? என்பவர்களுக்கும்   தலைப்பிலேயே பதில் வைத்து இருக்கிறேன்.

இருந்தாலும் என்னால் முடிந்த அளவு விளக்குகிறேன். இனிதான் நீங்கள் கவனித்து படிக்க வேண்டி இருக்கிறது.....

எங்கெங்கிலும் எப்போதும் சக்தியை, பரப்ரம்மத்தை தரிசித்துவிட்டவர்கள் பேச விழைவதில்லை. 
"கண்டவர் விண்டிலர்" என்பது தானே மனித குலத்தின் ஒப்புயர்வற்ற தனித் தன்மை ? 

இது போன்ற அரிதான மனிதர்களை  ஒருபுறம் தள்ளுவோம் - சரி ..நம் தலைக்கு  வைத்து விடுவோம் ...அப்போது தானே நம் கண்கள் சந்திக்க முடியும் ? 

மிச்ச மனிதகுலத்தில் - மிக்க வறுமையிலும் அடிப்படை போராட்டம் மிகுந்த வாழும் அந்த பெரும்பான்மை மக்களை நம் இதயத்துக்குள் பொத்தி வைப்போம்....(ஆம்..இவர்கள் புறம் தள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல. ஒரு வகையில் நாம் சுகிக்கும் பல விஷயங்கள் இவர்கள் பங்கும் அடங்கி இருக்கிறது - என்பதால்.....)

குத்துமதிப்பாக பத்து சதவிகித மக்கள் - தங்கள் அறிவு மூலமாகவோ, ஆற்றல் துணை கொண்டோ, அனுபவங்களால் செரிவூட்டப்பட்டோ...ஏதோ ஒரு வகையில் சக்தியை தரிசித்தவர்கள்தான் என்பது என் திடமான எண்ணம். 
("எப்போதும்" தரிசித்துக்கொண்டே இருக்க வாய்க்க பெற்றவர்கள் இல்லை என்பது தான் சோகம்.)

அவர்கள் அனைவரும்  இல்லாவிட்டாலும் - ஒரு சிலராவது தனக்கு தெரிந்த வகையில் பிறருடன் பகிர விழைகிறார்கள். 
வெகு பலர் ஆய கலைகள் 64 ன் துணை கொண்டு; சிற்சிலர் என்போல வாய் விட்டு அலற தயங்காதவர்கள் (."எங்கெங்கு காணினும் சக்தியடா " ).
விண்டுரைக்க சில வாய்களாவது வேண்டாமா என்ற ஆதங்கத்துடன்  பரம்பொருள் பெருங்கருணையோடு மின்மினி பூச்சியாக இவர்களுக்கு தரிசனம் தர திருவுள்ளம் கொண்டது போலும்....

எப்படி இருந்தால் என்ன ? 

இதை எழுதும் நான் அந்த பத்து சதவிகித்தில் சட்டமாக அமர்ந்து இருப்பவன். 

ஒன்றுக்கு மேற்பட்ட தரிசனங்கள் அருளப்பட்டு , கனகுதூகலமாக கூத்தாடும் மனம் சற்று திடப்பட்டு, மென்மேலும் கூர்மையாய் அறிவு விசாலப்பட்டு... இப்போது உங்கள் முன்னால் மாறாத உவகையோடும்  இன்னமும் தீர்ந்தும் (நீர்த்தும்) போகாத வார்த்தைகளோடும் .... இதை படிக்கும் உங்கள் மேல் பெருங்கருணையோடும் .......!!  

காரணம் இல்லாமல் காரியம் உண்டோ ? காரணங்கள் இன்னும் ஒரு பதிவாக வளரும்....என்னால் தடுக்க இயலாது....மன்னித்து அருள்க.....

மேலும் வளரும்....

பின் குறிப்பு....இந்த தொடரின் ஒவ்வொவொரு பதிவை ஆரம்பிப்பது மட்டுமே என் பொறுப்பு. நடத்துவதும் முடிப்பதும் ஈசன்.  









No comments:

Post a Comment