Monday, September 15, 2014

***** தாடி மஹாத்மியம்*******

முன் குறிப்பு :: சற்றே பெரிய பதிவு. அவசரத்தில் படிக்க வேண்டாம்.

அன்புடையீர் 

நலந்தானே......

இந்த பதிவு ஆண்களுக்கு மட்டுமல்ல. மகளிரும் படிக்கலாம். 
என்ன,  படிக்க மட்டும் தான் முடியும்.....  !!

கீழே இருக்கும் படங்களை உற்றுப்  பாருங்கள்......




இந்த compilation முடித்த பின் , ஒரு பரிசோதனைக்காக என் மகளிடம் இதைப் பார்த்து என் பதிவின் தலைப்பை கணிக்கச் சொன்னேன். அவள் சட்டென்று "பிரபலமான மனிதர்கள்" என்று நான் எதிர்பார்த்ததையே சொன்னாள்  
(பிறகு கீழ் வரிசையில் இருக்கும் சிலர் யார் என்று கேட்டு தெரிந்து கொண்டாள் - அது வேறு விஷயம்).

இதே தவற்றை நீங்களும் செய்து விடக்கூடாது என்ற பேரன்போடு மீண்டும் அதே கேள்வியை கேட்பதற்குள் ........ எனக்கு அது அபத்தமான கேள்வி என்று புரிகிறது. தலைப்பைதான் நீங்கள் பார்த்து விட்டீர்களே ? 

ஆனால் உங்களுக்கும் ஒரு சூட்சமமான ஒரு விஷயம் வைத்து இருக்கிறேன். மஹாகவி (கடைசி photo ) வழக்கமான தாடிக்காரர் அல்ல. என் போன்ற ஒரு சுதந்திரமான மனிதர்.....அவர் தாடி வைத்திருந்த ஒரு கால கட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு photo இது. எனவே இது தாடிகளைப் பற்றிய பதிவு - மனிதர்களைப் பற்றியது அல்ல என்ற பக்குவம் (??) உங்களுக்கு வந்து இருக்கலாம்.

தவிர , தாடி என்பது ஒரு உலகளாவிய விஷயம் என்பதாலும், மதம் , தத்துவம் பற்றி மட்டும் சார்ந்தது கிடையாது என்பதாலும் சிலரை தேர்ந்து எடுத்தேன்.... (பெர்னாட் ஷா , லியோ தல்ஸ்தோய் மற்றும் நம் பிரதமர்) . எவ்வளவு யோசிக்கிறேன் பார்த்தீர்களா... அது தான் என் சிறப்பு (!!)

இவ்வளவு பரந்து விரிந்த விஷயத்திற்கு ஒரு மகாத்மியம் எழுதுவது முறை தானே  ?

எனக்கு தாடி மேல் பிரேமை அதிகம். இது வரை  4 / 5 காலகட்டத்தில் - சுமார்  மூன்று  மாதங்கள் முதல் ஆறு மாதம் வரை வைத்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் வீட்டில் நான் என் தாடி அறிவிப்பை சொன்னதும் யுத்தம் நடக்கும். தாடி வைத்தல் நான் பிச்சைக்காரன் போல இருப்பதாக என் இல்லாளின் தீர்மானம். சில சமயம், "வியாதிக்காரன் " என்றும் சொல்லி இருக்கிறாள். சிற்சில உக்கிரமான மன நிலையில் "வியாதி இருக்கிற பிச்சைக்காரன் " என்றும் சொல்லியிருக்கிறதாய் நினைவு. 

ஆனால் பாருங்கள்....இந்த உலகம் எதிர்மறை விஷயங்களும். கருத்துக்களும் நிரம்பிய ஒரு அற்புத கலவை. எங்கள் உறவினர் ஒருவர் (அவள் பக்க உறவு தான் - வயது முதிர்ந்தவர்) என் தாடியைப் பார்த்து நான் ஒரு "ஞானி" போல இருப்பதாக சொல்லி அவள் மூக்கை உடைத்து இருக்கிறார். அவர் இப்போது இல்லை - என் ஞானத்தை பறைசாற்றவும் யாரும் இல்லை.... ஹ்ம்ம்ம்ம் 

ஞானியர் பலரும் பிச்சை எடுத்து வாழ்ந்தவர் தாம். எனவே இந்த வேறுபாடான இரண்டு  கருத்துகளை சம நிலையில் எடுத்துக்கொண்டு விட்டேன். 
(கௌதம புத்தர் முழு ஞானோதயம் பெற்று 7 / 8 வருடங்களுக்கு பின்னர் தன அரண்மனைக்கு வந்தாராம். அவர் மீது கோபம் குறையாத அவர் மனைவி அவர் அடைந்து இருக்கும் மேலான நிலை புரியாமல் - அவர்களின் சிறு வயது மகனை முன் நிறுத்தி - "இவனுக்கு நீங்கள் என்ன தரப்போகிறீர்கள் ?" என்று கேள்வி கேட்க, ஒரு கணம் கூட தாமதிக்காமல் ஆவலாக கௌதமர் "என் திருவோட்டினை இவனுக்கு தருகிறேன். இதை விட சிறந்த பரிசு என்ன இருக்க முடியும் ? என்று  கேட்டாராம். பிறகு அவர் சூழ்நிலையை புரிந்து கொண்டு விலகி - வயதாகும் வரை மனித குலத்தையே தன குடும்பாக பாவித்து வாழ்ந்த கதை சத்குரு எனக்கு சொல்லி இருக்கிறார். கவனிக்கவும், கௌதமர் தாடி வைத்தவர் இல்லை)
ஞானிக்கும் பிச்சைக்காரனுக்கும் உள்ள தொடர்பு - தாடி என்ற கருத்துக்காக சொன்னேன்.

மேலும், ஒரு விஷயம். free will என்றும் destiny என்றும் இரு கூராக நம் வாழ்க்கை இயங்குகிறது. முழுக்க ஒரு நிலையில் வாழ்வது சாமான்ய மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை. 
ஒரு வகையில், தாடி இந்த இரண்டையும் இணைக்கும் பாலமாக எனக்கு தோன்றுகிறது. 
ஆம்.... தாடி வைப்பதும் மழிப்பதும் நம் சுதந்திரமாக இருக்கலாம் (free will ); ஆனால். அது நம் தோற்றத்தை மாற்றுவது பல காரணிகள் (factors ) கொண்டது. நம்  முக அமைப்பு மற்று தோற்றம், நம் சரும வகை மற்றும், உரோமத்தின் தன்மை, நம் வயது (நரை முடி பற்றி சொல்கிறேன்) என்று பல காரணிகளால்......விதியால் (desiny ) நம் தாடி மாறு படும். 

பழைய தமிழ் பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது....."என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்".....என்று சுஹாசினி பாடும் பாடல் ("கோபுரங்கள் சாய்வதில்லை ?) . 
அது போல .... " என் தாடி தான்... எனக்கு மட்டும் தான்" என்ற பொன்னான வரிகளோடு இந்த பதிவை நிறைவு செய்கிறேன்....; 

காவியங்கள், காப்பியங்கள், மஹாத்மியங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து தான் ஆக வேண்டும். 
அது சொல்ல வரும் செய்திக்கு முடிவே கிடையாது.

என்ன சொல்கிறீர்கள்...??



(பத்து வருத்திற்கு முந்தையது........; பிரபஞ்சத்தில் எதுவும் பழையது இல்லை.....)

மிக்க அன்புடன் 

suchoo 

என்று அறியப்படும் 

சுரேந்திரன்  













No comments:

Post a Comment