இன்று காலை வெகு அதிசயமாக நான் FM ரேடியோ கேட்டேன்....!!
வழக்கமாக கம்பெனி பஸ்-ஸில் பயணிக்கும் நான் இன்று எங்கள் city office ல் வேலை இருந்ததால் என் செல்லப் பையன் (Figo )-வில் பயணம் சேர்ந்ததால் இந்த பழக்கமற்ற ஒரு செய்கை !!
(எங்கள் பஸ் டிரைவர் எப்போதும் பக்திப் பாட்டு மட்டும் தான் போடுவார்....)
காசி தியேட்டர் அருகே மாப்பிளை அழைப்பு காராக ஊர்ந்து போகும் அலுப்பு சட்டென்று மறைந்து போகும் வண்ணம் ஒரு அழகிய பாட்டு....!!
"காலங் கார்த்தால
மறஞ்சிருக்கும்
சூரியனைப்போல என்னைப்பார்த்தாலே
ஒளிஞ்சிக்குற ….பெண்ணே "
ஏதோ ஒரு பெயர் தெரியாத படத்தில் முகம் தெரியாத நடிகன் (ஒரு வேளை ? ) அவனை விட சுமாராக இருக்கும் கதாநாயகியைப் பற்றி வர்ணித்து பாடும் பாட்டு போலும்.....!!
இந்த வரிகள் மிக சாதாரணமான கவித்துவத்துடன் இருந்தாலும் பாடும் குரல் அதைவிட சுமாராக தோன்றினாலும் மெட்டும் மெட்டுக்கேற்ப வெட்டி வெட்டி இழுத்தாலும் அந்த மிக நேரான அர்த்தம் தெரியும் வரிகள் என்னை மயக்கின....!!
பரபரப்பாக என் டயரியில் அந்த வரிகளை சுறுசுறுப்பாக எழுதினேன். அதற்காகவே காத்திருந்தது போல எனக்கு முன்பாக இருந்த வண்டிகள் பொறுமையாக (எருமையாக?) நின்றன போலும்.....அல்லது இதுவும் என் வழிகாட்டி பாபாவின் திருவருளோ ?
சிறிது மாதங்கள் முன் ஆனந்த விகடன் -ல் படித்த அப்துல் கலாம் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில் (எனக்கு மிகவும் ஆச்சரியம் கொடுத்த ஒன்று !!) ஞாபகத்துக்கு வந்தது. நான் மிகவும் மதித்து பாசம் காட்டும் (??) அவர் சினிமா பார்க்கும் வழக்கமே இல்லாதவராம்.....!! சிறந்த விஞ்ஞானியாக மட்டுமில்லாமல் ஒரு கவிஞராக-வும் பரிமளிக்கும் அவர் இந்த வழக்கம் (அதுதான்.... சினிமா) இல்லாததால் நமக்கெல்லாம் நஷ்டந்தான் என்று எனக்கு தோன்றுகிறது.....!!
மிகக் குறைந்த அளவு சினிமா (அதுவும் தமிழ் தமிழ் தமிழ் தான் ) பார்த்திருந்தாலும், எனக்கு இந்த ஊடகத்தின் சக்தி பற்றி மிதமிஞ்சிய மரியாதை உண்டு. பக்கம் பக்கமாக, ஏன் வண்டி வண்டியாக எழுதித்தள்ளி நம்மையெல்லாம் பிரமிக்க வைக்கும் அறிவு ஜீவி எழுத்தாளர்கள் சாதிக்க முடியாததை வெகு சிறிய நேரத்தில் ஒரு சில காட்சிகளிலேயே வசியம் செய்யும் வல்லமை பெற்றது சினிமா....!!
என் பிரியமான குரு சத்குரு இருபது வருடங்கள் முன் கோயம்பத்தூர்-ல் ஒரு தியேட்டரில் "காட்டுக்குயிலு மனசத் தொட்டு பாட்டுக்கொன்னும் பஞ்சம் இல்ல .... பாடத்தான்....!!" என்ற பாட்டுக்கு அங்கேயே தன்னை மறந்து ஆடி மகிழ்ந்தவர் தான் என்பதில் எனக்கு ஆச்சர்யத்தை விட பெருமை அதிகம். அதுதான் சினிமா.... !! (இன்று வரை ஈஷாவில் "பாவச்பந்தனா" வகுப்பில் இந்த பாட்டு ஒரு முக்கிய பங்கு வகிப்பதை அந்த அனுபவம் பெற்றவர்கள் ஆமோதிப்பார்கள் !!)
இப்போது இந்த என் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த கட்டுரையில் (ஏன் என்று பிறகு சொல்கிறேன்.....) முக்கியமான திருப்பம் வரும் நேரம் வந்து விட்டது....!!
அவ்வளவு முக்கியம் வாய்ந்த இந்த சினிமா அகண்டத்திலேயே இல்லாதது போல வாழ்ந்திருக்கும் அப்துல் கலாம் போன்ற போற்றத்தக்கவர்கள் இல்லையா என்ன ? ஒருவர் நல்ல சினிமா என்று கொண்டாடும் ஒரு படம் மற்றவர்களால் காறித் துப்பப் படுவதில்லையா என்ன ? கலைப்படம் வெகுஜனப்படம் என்ற தெளிவான பாகுபாடு பற்றி காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தாலும் கலைப்படம் சில மிக நன்றாக ஓடி பிரமிக்க வைப்பது போல் அதி விரைவில் பெட்டியில் போய்ச் சேரும் பிரம்மாண்டமான படங்கள் இல்லையா என்ன ?
அவ்வளவு ஏன் ? வெகு சுமாராகத் தோன்றும் இந்த பாடல் வரிகள், ஒரு பக்க மிழற்றலாக (அதுதான் ஐயா , musings ) விரியவில்லையா என்ன ?
மனித மனத்தில் கற்பனை சக்தியும் அதன் அளப்பரிய ஆற்றலும் வார்த்தையில் அடங்காதவை. கவிதையால் அதை கட்டுப்படுத்த முயலுபவர் சிலர்....கதையால் விரிக்க முயல்பவர் வெகு பலர்..... இது இரண்டுக்கும் அவ்வளவாக சில்லறை சேராததாலும் நமது ஜனத்தொகையை நம்பியும் இன்று பரந்து விரிந்திருக்கும் திரைப்படத்தின் பட்டொளி வீசி வசீகரிக்கும் இந்த துறையில், தூண்டிலில் சிக்கும் புழுக்கள் மிகப்பலர்....!! எல்லாமே பராசக்தியின் விளையாட்டு தான்....!!
இதில் மிகவும் விந்தை அளிக்கும் ஒரு விஷயம் - என்னைப் பொறுத்தவரையில் - ஒரு தனி மனித மனம் மட்டும் தான்....!! கனகுதூகலமாக இருக்கும் நேரத்தில் மிகச்சாதாரணமான இந்த வரிகளில் அற்புதம் கண்டு பிடித்து ரசிக்கும் இந்த தெய்வீக மனம், துயரத்தால் வாடும் போது உலகத்தின் மிகச் சிறந்த படைப்பில் (கவிதை / கதை / திரைப்படம் எது வேண்டுமானாலும் ) ஈடுபட முடியாமல் வீட்டோரம் முடங்கி எல்லாம் மறுத்து மருகும்.....
அடடா.....!! இந்த கட்டுரை ....சினிமா பற்றி என்றா நினைத்தீர் ?
உம்மையும் முக்கியமாக என்னையும் பற்றி ஐயா !!
மொத்த வாழ்க்கையுமே சினிமா வாக பார்த்து ரசிக்க துடிக்கும் என் பேதை மனம் பற்றி.....!!
போம்..... போம் …… போய்ப் பிழைப்பைப் பாரும்.....!!
சுரேன்
பின் குறிப்பு : முதலில் இதில் ஆங்கிலத்தில் (வழக்கம் போல) எழுத நினைத்த நான் திடீர் என்று உற்சாகம் பெற்று மிகவும் பொறுமையாய் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் செலவு செய்து என் மிகக் குறைந்த தமிழ் தட்டச்சு ஞானத்தால் தட்டுத் தடுமாறி உருவாக்கியுள்ள இந்த படைப்பு சரித்திரப் பிரசித்தி வாய்ந்தது தானே ? குறைந்த பட்சம் என் சரித்திரம் ஐயா.....என் அகண்டத்தின் சரித்திரம்....!! போம் போம்....நிற்காதீர்......!!
No comments:
Post a Comment