எனக்கும் எங்கள் குடும்பத்திற்கு மட்டுமே ஏற்பட்ட ஒரு சிறு நிகழ்ச்சி பற்றி ஒரு பெரும்பத்தி எழுதிவிட்டு இந்த தொடரை புலங்காகிதப்படுத்தி விட்டதாக நான் கருதுவதாயில்லை.
ஆட்டம் இப்போது தானே ஆரம்பித்து இருக்கிறது ?
சொல்ல வந்ததது "தன்னிச்சையாக" நடக்கும் செயல்களின் ஒருமைப்பாடு பற்றி , அதை அங்கீகரித்து இரசிக்கும் நமது ஏற்றுக்கொள்ளும் தன்மை பற்றி.
பாபாவின் சக்தியை பற்றியோ நான் அவரின் பேரருளுக்கு பாத்திரமாகி விட்டது பற்றியோ அல்ல விஷயம். முதலிலேயே தெளிவாக சொன்ன மாதிரி - நீங்கள் நாத்திகராகவே இருந்தாலும் , இது போன்ற தொடர்பற்ற இரண்டு சம்பவங்களின் கோர்வை பற்றி, அவற்றில் பொருந்தி இருக்கும் ஒரு அழகியலை இரசிக்க உங்களுக்கு தடை என்ன இருக்கிறது ?
அட, இது போன்ற அற்ப சந்தோஷத்திற்கு கூட உங்களுக்கு வழங்கி கொள்ளாமல் சக்தியை தரிசிக்க எங்கே புறப்பட்டு விட்டீர்கள் ?
மற்றொரு புறம், ஆன்மிகத்தில் ஊறி திளைத்து இருப்பவர்கள்.
உதாரணமாக பாபாவின் ஆத்மார்த்தமான பக்தர்கள் என்னை கோவிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அங்கிங்கினாதபடி எங்கும் கொட்டி கிடக்கும் அந்த பெருஞ்சக்தியின் ஒரு ஸ்தூல, சூட்சமான வடிவம் தான் தாங்கள் போற்றி வணங்கும் ஒரு தெய்வ சக்தி அல்லது தெய்வ மகன் அல்லது சித்த புருஷன் என்ற பிரக்ஞை கொண்ட எந்த ஆன்மிக பக்தனும் இந்த நிகழ்ச்சியில் நான் பிரஸ்தாபித்த பாபா மேஜிக் - கை எவ்வகையிலும் நான் குறைத்து மதிப்பிடுவதாக கருதி விட மாட்டான்.
எனக்கு இந்த ஆன்மிக பாதை மட்டுமே போதுமானது என்று அவர்கள் பரிபூர்ணமாக நிச்சலனமாக தைல தாரையாக வாழ்வதில் எனக்கும் எந்த ஆட்சேபணையும் கிடையாது.
நானோ - எங்கெங்கும் காணத் தலைப்படும் சக்தியின் வெகு சில தரிசனங்களில் தூண்டப்பட்டு, கவரப்பட்டு - என் வார்த்தைகளை இங்கே பெரும் உவகையோடு இறைத்துக்கொண்டு இருப்பவன்.
என் வழி தனி வழியோ, தன்னந்தனி வழியோ - விதித்தபடி இருக்கட்டும்.
இது ஒரு ஆன்மிக பாதையே ... படித்துத் தான் பார்ப்போமே என்று ஆவலாகும் ஆன்மிக பக்தர்களுக்கு ஒரு எச்சரிக்கை.
முழுக்க முழுக்க பக்தி ரசத்தில் ஊறிப் போகாத பிரகுதியாக நான் இன்னமும் இருப்பதால் இந்த கட்டுரைத் தொடரின் மூல விஷயம் பற்றி இந்த எச்சரிக்கை செய்யத்தான் வேண்டி இருக்கிறது.
1. எதிர்பாராமல் நடந்து நமக்கு இன்பம் ஏற்படுத்தும் விஷயங்களை மற்றும் நினைவில் வைத்து புலங்காகிதப்படுவது மட்டுமே சக்தி தரிசனத்தில் சேராது . ரொம்பவே ஆவலாக காத்திருந்தோ அல்லது நாம் நிச்சயமாகவே கொண்டு விட்ட சில விஷயங்களில் நம் மூக்கு உடைபடுவதும் சக்தியின் செயலே.....என்ற பிரக்ஞை அத்தியாவசியம். (மேலும் விஸ்தரிக்க வேண்டி இருக்கிறது. அடுத்த வரைவில் செய்வோம்)
2. கவனம்.... "எல்லாமே நல்லதுக்காக தான் நடக்குது" என்ற ஒரு வித பாமர பிரக்ஞை - பெரும்பாலான பக்தர்கள் மனப்பூர்வமாக நம்புவது - கொடுக்கும் ஆசுவாசத்திற்கு உங்கள் உள்ளம் ஏங்குகிறதா. ? உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் விஷயங்கள் அனைத்தையும் (இந்த கட்டுரையாக கூட இருக்கலாம்) . "எல்லாமே நல்லதுக்காக தான் நடக்குது" என்று விகல்பமிலாமல் எடுத்துக்கொள்வது சற்று மேலான மன நிலை.
நல்லதும் கேட்டதும் சேர்ந்தது தானே வாழ்க்கை ? தங்களுக்கு பிடிக்காத காயை ஒதுக்கி சாம்பாரை மாட்டும் லாவும் கரண்டியா என்ன - உங்கள் பக்தி ? அழகு தான்.
3. ரொம்ப முக்கியமான குறிப்பு..... சக்தியின் தரிசனம் - சின்னதும் பெரியதுமாக.... வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் சூழ்நிலைகளிலும் ... நல்லதும் கெட்டதுமாக - சில சமயங்களில் - வேளை கேட்ட வேளைகளில் கூட - அருளப்படும் ஒரு தன்மை.
கடந்த காலத்து (சிற்சில ) நிகழ்ச்சியில் விம்மி கொண்டும் , வருங்காலத்தை ரொம்ப கற்பனை செய்து கொண்டு நிம்மதி இல்லாமல் இருப்பது - சக்தி தரிசனத்திற்கு நேர்மாறான மன நிலை.
முன் இரண்டு குறிப்பை காட்டிலும் - காட்டம் குறைவாக தோன்றினாலும் - மிகவும் நுட்பமாக உள்வாங்கிக்கொள்ள வேண்டியது இந்த அம்சத்தை தான்.
வளரும்.....