Thursday, December 31, 2015

எங்கெங்கு காணினும் சக்தியடா - 6

நமது பாரத தேசத்தின் ஆன்மிக வாழ்கையின் அஸ்திவாரமாக கருதப்படும் ஆதிசங்கரர் அவர்களது உருவப்படத்தை எப்போதாவது தரிசித்து இருக்கிறீர்களா ? (எனக்கு தெரிந்து ஒரே படம் தான் தான் பொதுவாக காணப்படுகிறது) 
ஒரு மரத்தடியிலோ அல்லது நதிக்கரையிலோ தரையில் சம்மணமிட்டு அமர்ந்து இருக்கும் ஒரு அழகிய இளம் துறவியின் தோற்றம். அவருக்கு முன்னாள் நான்கு சீடர்கள் - பரம சிவனின்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் அவரது சனகாதி சிஷ்யர்களை  நினைவுறுத்தும் வகையில்.... 

இந்த இளம் துறவி - ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின் அத்வைத தத்துவத்தை -  "எல்லாம் ஒன்றே"  என்ற பேருண்மையை - ஸ்தாபித்தவர். அவர் எந்த மரத்தடியில் உட்கார்ந்து தன சிஷ்யர்களுக்கு போதித்தாரோ நமக்கு தெரியவில்லை - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி  பற்றி முக்கியமாக அவர் உட்கார்ந்து இருந்த கல் மர நிழல் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் சில மாதங்களுக்கு முன்னால் தெரிய வந்தது.

எவ்வளவோ வகையான ஆல  மரங்கள் இருந்தாலும் - இந்த "கல் ஆல" மரத்தின் அடியில் அமர்ந்து இருப்பதாக இந்த திரு உருவம் இருப்பத்து ஒரு குறிப்பிட்ட காரணத்தால். இந்த குறிப்பிட்ட ஆல  மரத்தின்  பழங்கள் மிகவும் கசப்பதாக இருப்பதால் பறவைகள் அந்த மரத்தை அண்டாதாம். புரிகிறதா விஷயம் ? 
சிஷ்யர்களுக்கு நல்ல முறையில் உபதேசம் செய்வதற்காக - பறவைகளின் சத்தம் (அசுத்தம் கூட ?) போன்ற  தொந்தரவு இல்லாமல் வகுப்பு நடக்க இந்த தேர்வு.  
"தட்சிணா " என்பதற்கு தெற்கு என்பது மட்டும் பொருள் அல்ல ; "சாமர்த்தியம்" பொருந்தியவர் என்றும் பொருள் உண்டு - நினைவில் கொள்க.

ஆதி குருவாக கருதப்படும் ஒரு கடவுள் மிகவும் தேர்ந்த ரிஷிகள் சிஷ்யர்களை கொண்டு  (அதுவும் நால்வர் மட்டும் தான். ஒரு சில இடங்களில் சப்த ரிஷிகள் இருப்பதாக உருவச்சிலை இருக்கிறதாம்)  ஆன்மிக வகுப்பு எடுக்க இவ்வளவு பிரயத்தினங்கள் தேவைப்படுகிறது.
துறவும், கல் ஆல மரமும்  - எங்கெங்கும் இருக்கும் சக்தியை தரிசிக்க...; இது ஒரு புறம். 
"ஆத்ம ஞானம் அதி சுலபம்" என்ற சமஸ்க்ருத சொல்லாடல் / ஸ்லோகம் மற்றொரு புறம் இருக்கிறது. 
.ஏதோ நெருடல்  இருப்பதாக உங்களுக்கு படவில்லையா ?

குழப்பம் தெளிய நம் காலத்திற்கு வருவோம். நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்...
உங்கள் இல்லத்தில் - நீங்கள் அடிக்கடி பார்த்து, மீண்டும் உங்களை பார்க்க தூண்டும் VCD திரைப்படங்கள், ஓரிரு முறை மட்டுமே பார்த்து இருக்கும் VCD - இன்னமும் "வேளை வராத" அந்த புத்தம் புது VCD -க்கள் எவ்வளவு உண்டு  - வகைப்படுத்தி பார்த்து கணக்கு சொல்லுங்கள்...
சொல்ல மறந்து விட்டேன். - pen drive , external hard disc -ல் இருக்கும் திரைப்படங்களையும் இந்த கணக்கில் சேர்த்து கொள்ளலாம். 
இந்த விளையாட்டு சுவாரஸ்யமாக இருந்தால் audio CD க்களையும் வகைப்படுத்தி அழகு பார்க்கலாம். (அநேகமாக நம் ஒவ்வொருவர் வீட்டிலும் - எந்த அர்த்தமும் இல்லாமல் - செங்கல் செங்கலாய்  Audio casette கள் வேறு...ஹ்ம்ம் ).

கல் ஆல மர- வாசத்திற்கு பதிலாக நம் மனத்தில் கல் எறியும் வண்ணம் ..எத்தனை எத்தனை புகைப்படங்கள், பாடல்கள் புத்தகங்கள், நண்பர்கள், முகநூட்கள்....!! இவற்றின் எந்த ஒன்றும்  நமக்கு முழு நிறைவு தராததை நாம் உணர்ந்ததால் தானோ என்னவோ நம்மில் பலர் பல்வேறு விஷயங்களில் சிக்கி தவிக்கிறோம்; ஒன்றிலிருந்து  மற்றொன்றுக்கு மாறுகிறோம். பழசை வெகு விரைவில் மறந்து போகிறோம். (கல் ஆல மரத்தின் தத்துவத்தை மறந்தது  போலவே !!)

இந்த தொடர் உங்களை குறை கூற அல்ல - வேதனைப்படுத்தவும் அல்ல. நம்புங்கள். மாறாக நாம் நன்றாக சிக்கி கொண்ட இந்த வாழ்க்கை முறையில்   முழுவதும் மூழ்கி போகாமலும், வெறுத்து ஒதுக்காமலும் - கல் ஆல  மரமாக ஏற்றுக்கொண்டு எப்படி சக்தியை தரிசிக்கலாம் என்பது பற்றி என் பார்வை.... சிற்சில வருடங்களாக நான் கடந்து வந்த பாதையும் கூட....!!

நவநாகரிகம் தலைவிரித்தாடும், சகல வசதிகளும் பெருகி ஓடும்  தற்காலத்தில் - இந்த கட்டுரைக்கும், நான் சொல்ல வந்த சேதிக்கும் ரொம்பவே சோதிட பொருத்தம் இருக்கிறது - நம்புங்கள்.

அடுத்த வருட ஜூன் மாசம் என் பிறந்த நாள் வருமுன் இந்த தொடரை நிறைவு செய்ய முடியுமா பார்ப்போம்.

வளரும் 


















No comments:

Post a Comment