Thursday, December 31, 2015

2015 - Reverentially Yours !!

So, We are bidding adieu to another wonderful year in approx 22 hours from now.

When we look back such years -as they pass by - unfortunately the latest memories alone pop up in our minds clouding up the previous ones which might me relatively more significant. 
This year - at least for City of Chennai - it  had been the torrential rains that lashed us all just few days back - is the thought of the hour going by this logic.

As I browsed thru my post on the same day last year, I have a triumphant smile on my lips when I look at a particular sentence that I had written "I should admit that I am looking forward for a new year that will really excite me - rather - entice me after this U turn year of 2014."

2015 had been an important year for me beyond doubt. There are lot of personal and official aspects to cherish about. To speak some thing specific and also unique compared to previous year ends, I have invested quite a huge amount of time on self learning thru' this year; In the process, I am happy that I identified a new subject for my mental enrichment which is too interesting too.


There is flip side of coin too...; 

I came out of FB quite abruptly during mid year realizing that it cannot be my path , even a casual one that I can stroll about. I discovered that I am not a person as social as I had imagined to be.
With a huge identity crisis looming upon my head, there was an impact at  AGANDAM too. The total number of my posts have been abysmally low during 2015 - ranking second lowest in the past 7 full years but then, the positive thing about this is that I got rejuvenated again during the last two months of the year.

I wish and pray 2016 improvises me further and life becomes more balanced and interesting. 
Thamasoma Jyothirgamaya.


Love // Suren

எங்கெங்கு காணினும் சக்தியடா - 6

நமது பாரத தேசத்தின் ஆன்மிக வாழ்கையின் அஸ்திவாரமாக கருதப்படும் ஆதிசங்கரர் அவர்களது உருவப்படத்தை எப்போதாவது தரிசித்து இருக்கிறீர்களா ? (எனக்கு தெரிந்து ஒரே படம் தான் தான் பொதுவாக காணப்படுகிறது) 
ஒரு மரத்தடியிலோ அல்லது நதிக்கரையிலோ தரையில் சம்மணமிட்டு அமர்ந்து இருக்கும் ஒரு அழகிய இளம் துறவியின் தோற்றம். அவருக்கு முன்னாள் நான்கு சீடர்கள் - பரம சிவனின்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் அவரது சனகாதி சிஷ்யர்களை  நினைவுறுத்தும் வகையில்.... 

இந்த இளம் துறவி - ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின் அத்வைத தத்துவத்தை -  "எல்லாம் ஒன்றே"  என்ற பேருண்மையை - ஸ்தாபித்தவர். அவர் எந்த மரத்தடியில் உட்கார்ந்து தன சிஷ்யர்களுக்கு போதித்தாரோ நமக்கு தெரியவில்லை - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி  பற்றி முக்கியமாக அவர் உட்கார்ந்து இருந்த கல் மர நிழல் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் சில மாதங்களுக்கு முன்னால் தெரிய வந்தது.

எவ்வளவோ வகையான ஆல  மரங்கள் இருந்தாலும் - இந்த "கல் ஆல" மரத்தின் அடியில் அமர்ந்து இருப்பதாக இந்த திரு உருவம் இருப்பத்து ஒரு குறிப்பிட்ட காரணத்தால். இந்த குறிப்பிட்ட ஆல  மரத்தின்  பழங்கள் மிகவும் கசப்பதாக இருப்பதால் பறவைகள் அந்த மரத்தை அண்டாதாம். புரிகிறதா விஷயம் ? 
சிஷ்யர்களுக்கு நல்ல முறையில் உபதேசம் செய்வதற்காக - பறவைகளின் சத்தம் (அசுத்தம் கூட ?) போன்ற  தொந்தரவு இல்லாமல் வகுப்பு நடக்க இந்த தேர்வு.  
"தட்சிணா " என்பதற்கு தெற்கு என்பது மட்டும் பொருள் அல்ல ; "சாமர்த்தியம்" பொருந்தியவர் என்றும் பொருள் உண்டு - நினைவில் கொள்க.

ஆதி குருவாக கருதப்படும் ஒரு கடவுள் மிகவும் தேர்ந்த ரிஷிகள் சிஷ்யர்களை கொண்டு  (அதுவும் நால்வர் மட்டும் தான். ஒரு சில இடங்களில் சப்த ரிஷிகள் இருப்பதாக உருவச்சிலை இருக்கிறதாம்)  ஆன்மிக வகுப்பு எடுக்க இவ்வளவு பிரயத்தினங்கள் தேவைப்படுகிறது.
துறவும், கல் ஆல மரமும்  - எங்கெங்கும் இருக்கும் சக்தியை தரிசிக்க...; இது ஒரு புறம். 
"ஆத்ம ஞானம் அதி சுலபம்" என்ற சமஸ்க்ருத சொல்லாடல் / ஸ்லோகம் மற்றொரு புறம் இருக்கிறது. 
.ஏதோ நெருடல்  இருப்பதாக உங்களுக்கு படவில்லையா ?

குழப்பம் தெளிய நம் காலத்திற்கு வருவோம். நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்...
உங்கள் இல்லத்தில் - நீங்கள் அடிக்கடி பார்த்து, மீண்டும் உங்களை பார்க்க தூண்டும் VCD திரைப்படங்கள், ஓரிரு முறை மட்டுமே பார்த்து இருக்கும் VCD - இன்னமும் "வேளை வராத" அந்த புத்தம் புது VCD -க்கள் எவ்வளவு உண்டு  - வகைப்படுத்தி பார்த்து கணக்கு சொல்லுங்கள்...
சொல்ல மறந்து விட்டேன். - pen drive , external hard disc -ல் இருக்கும் திரைப்படங்களையும் இந்த கணக்கில் சேர்த்து கொள்ளலாம். 
இந்த விளையாட்டு சுவாரஸ்யமாக இருந்தால் audio CD க்களையும் வகைப்படுத்தி அழகு பார்க்கலாம். (அநேகமாக நம் ஒவ்வொருவர் வீட்டிலும் - எந்த அர்த்தமும் இல்லாமல் - செங்கல் செங்கலாய்  Audio casette கள் வேறு...ஹ்ம்ம் ).

கல் ஆல மர- வாசத்திற்கு பதிலாக நம் மனத்தில் கல் எறியும் வண்ணம் ..எத்தனை எத்தனை புகைப்படங்கள், பாடல்கள் புத்தகங்கள், நண்பர்கள், முகநூட்கள்....!! இவற்றின் எந்த ஒன்றும்  நமக்கு முழு நிறைவு தராததை நாம் உணர்ந்ததால் தானோ என்னவோ நம்மில் பலர் பல்வேறு விஷயங்களில் சிக்கி தவிக்கிறோம்; ஒன்றிலிருந்து  மற்றொன்றுக்கு மாறுகிறோம். பழசை வெகு விரைவில் மறந்து போகிறோம். (கல் ஆல மரத்தின் தத்துவத்தை மறந்தது  போலவே !!)

இந்த தொடர் உங்களை குறை கூற அல்ல - வேதனைப்படுத்தவும் அல்ல. நம்புங்கள். மாறாக நாம் நன்றாக சிக்கி கொண்ட இந்த வாழ்க்கை முறையில்   முழுவதும் மூழ்கி போகாமலும், வெறுத்து ஒதுக்காமலும் - கல் ஆல  மரமாக ஏற்றுக்கொண்டு எப்படி சக்தியை தரிசிக்கலாம் என்பது பற்றி என் பார்வை.... சிற்சில வருடங்களாக நான் கடந்து வந்த பாதையும் கூட....!!

நவநாகரிகம் தலைவிரித்தாடும், சகல வசதிகளும் பெருகி ஓடும்  தற்காலத்தில் - இந்த கட்டுரைக்கும், நான் சொல்ல வந்த சேதிக்கும் ரொம்பவே சோதிட பொருத்தம் இருக்கிறது - நம்புங்கள்.

அடுத்த வருட ஜூன் மாசம் என் பிறந்த நாள் வருமுன் இந்த தொடரை நிறைவு செய்ய முடியுமா பார்ப்போம்.

வளரும் 


















Wednesday, December 16, 2015

எங்கெங்கு காணினும் சக்தியடா - 5

மிகவும் பெரியதாக இருக்கும் ஒரு தின்பண்டத்தை - ஏதோ ஒரு அசட்டு ஆர்வத்தில் வாயில் திணித்துக்கொண்டு மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவஸ்தை பட்ட அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா ?

இல்லாவிட்டாலும் பரவாயில்லை - என் தற்போதைய மன ஓட்டம்  கிட்டத்தட்ட அதுதான்."Baba Magic " பற்றி என் குறைந்தபட்ச சொல்லாற்றல் துணைகொண்டு அவ்வப்போது கணினியின் முன் வந்தமரும் நான் - இதை சொல்ல முயற்சி தான் செய்யப்போகிறேன்.
ஆனால் ஒரு விஷயம் - ஒரு காரியத்தை சொல்ல புகுமுன் சத்தியமாய் தோல்வியில் தான் முடியப்போகிறது என்ற ஒரு defeatist மனநிலை எனக்கு சத்தியமாக இல்லை.  மாறாக ஒரு குழந்தையின் ஊக்கத்தோடு மிகவும் உற்சாகமாகவும் வருங்காலத்தைப் பற்றி கிஞ்சித்தும் வருத்தப்படாத ஒரு அற்புதமான கலவையில் என் உள்ளம் விம்முகிறது.

அடடா....ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன்....நான்கு பதிவுகளில் எந்த  பீடிகையும் தராமல் *** இப்போது "சக்தி" என்று நான் இதுகாறும் சொன்னது "பாபா "    என்கிற மகானைப் பற்றித்தான்....மேலே படியுங்கள்...உய்யுங்கள் ***
என்று  மேலும் ஒரு பக்திக் கட்டுரையாக இது மாறிவிடாது - நம்புங்கள்.....!!

எனக்கு - தினசரி வாழ்க்கைக்கு கலங்கரை விளக்காகவும் , சிற்சில எழுச்சி மிகுந்த தருணங்களில் ஆன்மிக வழிகாட்டியாகவும் அருள் பாலிக்கும் கடவுளர் மிகப் பலர் உண்டு -  பாபாவையும் சேர்த்து.... 

என் பக்தியை பற்றிய புலம்பலாக இந்த கட்டுரை தொடர் மாறுவது எனக்கு உடன்பாடன்று - படிக்கும் ஒவ்வொவோருவருக்கும் ஒரு ரிஷி மூலம் இருப்பதை நான் உணர்வதாலும் மதிப்பதாலும். நம் ஒவ்வொருவரின் காலமும் மிக மதிப்பானதாக இருப்பதால் தான் எழுதுவதில் தாமதங்கள்... எழுத ஆரம்பித்தாலும் இவ்வளவு பீடிகைகள்....  !! என்ன செய்வது - எங்கெங்கும் பறந்து விரிந்து இருக்கும் சக்தி அவ்வளவு சூட்சமமாக சாமர்த்தியமாக இருக்கிறது. 

எந்த விதமான பக்தி உங்களுக்கு இருந்தாலும் - God , God Man, Deity - உங்கள் தேர்வு எதுவாக இருந்தாலும் சரி..ஏன், பகுத்தறிவு வாதியாக இருந்தாலும் சரி  - என் இந்த "Baba Majic " என்ற சொற்றொடர் உங்களுக்கு பொருந்தும். ஒரு வகையில் இதை ஒரு "வாழும் கலையாக" வே நான் கருதுகிறேன். 

எங்கெங்கும் சக்தியை தரிசனம் செய்யும் அருள் பெற்றவர்க்கு வாழ்க்கை என்பது எப்போது நீங்கள் போய் கேட்டாலும் .... ஒரு நெடிய பயணம் அல்ல.....
ஒரே நாள்....ஆம் - ஒரு நாள் மட்டுமே....!! தினம் தினம்......அப்படித்தான். 

"Baba Magic " பற்றி சொல்ல விழைந்த நான் எங்கெங்கோ போய்விட்டேன். ... ம்ம்ம்.. 
மீண்டும் ஒரு நாள் முயற்சி செய்வோம்.

வளரும்.....











Friday, December 11, 2015

எங்கெங்கு காணினும் சக்தியடா - 4

கடந்த 15 நாட்கள் தருமமிகு சென்னை பட்ட பாடு கண்ட பிறகு தலைப்பை  - இந்த பதிவிற்கு  மட்டுமாவது ... "எங்கெங்கு காணினும் "தண்ணீர்"-தான்டா   என்று தலைப்பிட தோன்றுகிறது.

ஆத்மிக விஷயத்தை பேச விழைந்த நான் மானுடம் (மட்டுமா ?) பட்ட அல்லல்களையும் இன்னல்களையும் எழுதுவது எவ்வகையிலும் இந்த தலைப்பிற்கு வேறுபாடாக இருக்காது. நமது அற்புதமான கலாசாரம் தண்ணீரையும் பஞ்ச பூதத்தில் ஒன்றாக வரித்தது தற்செயலா என்ன ? இன்று உமக்கு விதித்தது இதுதான்...
 மேலே படியுங்கள்....

இந்த கால  தமிழகம் அடிவாங்கிய சமீபத்திய  "காற்றழுத்த தாழ்வு மண்டலம்"  என்று அலங்காரமாக அழைக்கப்பட்ட - ஆனால் - "பெருமழை சேதமாக" பரிணமித்த அந்த சோகத்தை சற்றே புறத்தே ஒதுக்கி வைப்போம்.  
சில நூற்றாண்டுகள் முன் நமது மாமன்னர்கள்  தங்கள் இடுப்பில் கை கொடுத்து ஒய்யாரமாய் நின்று மிடுக்காக " மந்திரியாரே... மாதம் மும்மாரி பொழிகிறதா ?"  என்று வினவுவதை நமது இயல் இசை நாடகத்தில் கண்டோம் - ஞாபகம் இருக்கிறதா ?
 "பொழிகிறது தானே ? பொய்த்துவிடவில்லையே ?" என்ற ஆதுரமாகவே அதை அர்த்தப்படுத்திவிட்டோம். "மும்மாரி மட்டும் தானே பொழிகிறது...? விளாசி தள்ளிவிடவில்லையே ? " என்ற பதைபதைப்பை நாம் உணரத் தவறியதில் தான் நம் தப்பாட்டம் ஆரம்பிக்கிறது. (மன்னர் தானே தன் அரண்மனை ஜன்னல் வழியாக பார்த்து தெரிந்து கொள்ளலாமே ? என்று குதர்க்கம் இங்கே தேவையில்லை. எமது  "சக்தி" விரயமாவதில் நமக்குஅவ்வளவாக ஒப்பில்லை.)

பிரபஞ்ச சக்தியாக பஞ்ச பூதங்கள் வரிக்கப்பட்டு வழிப்பட்ட செயல் அவற்றின் வீரியத்தை உணர்ந்ததால்... அவற்றை வழிபடுவத்தை தவிர நமக்கு வேறு வழி இல்லாததால். இந்த வார ஆனந்த விகடன்-ல்  சில அற்புதமான கட்டுரைகள் - "இயற்கை சீற்றத்தைப்பற்றியது - தவற விடாதீர்கள். அதில் ஒன்று பிற நாடுகளில் வெள்ள அபாயத்தை தடுக்க அவர்கள் செய்த சாதுர்யம் பற்றியது. இது விஷயமான  என்  மன ஓட்டத்தை பின்னர் சொல்கிறேன்....
ஒரு அதிசயம் போல் என் இந்த தொடரின் முக்கிய வார்த்தையான "சக்தி" யானது அதே ஆனந்த விகடனின் (16 Dec 2015) தலையங்கத்தில் பல முறை உச்சரிக்கப்படுகிறது. - இந்த பெருமழை மூலம் பல சக்திகளை நாம் தெரிந்து கொண்டோமாம்... இளைஞர் சக்தி, இணைய சக்தி சமூக ஊடகத்தின் சக்தி......!! அடடா... அடடா.... இதைத் தான் நானும்  விம்மி வெடித்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன்..."எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று. நான் தனியன் இல்லை என்று கண்டு கொண்டதில் மீண்டும் ஒரு முறை ஆசுவாசம்.
(இந்த பத்திரிகை குழுமத்திற்கு  "சக்தி விகடன்" என்றொரு பத்திரிகையும் இருக்கிறது. என்னவோ அது பற்றி ஞாபம் வருகிறது....ஒரு வேலை விளம்பர யுக்தியோ ?) 

இது முக்கியமான ரகசியம்.- பிரபஞ்ச ரகசியங்கள் அல்லது சக்தி விளையாட்டுகள் எல்லாமே எப்போதும் தரிசிக்க ஆவலாக, பரிதவித்து இருக்கிறவர்களுக்கு மட்டும்தான். வெறும் ஆராய்ச்சி மனநிலை ஒரு பிம்பத்தை எப்போதாவது தரலாம் - அடிக்கடி நிகழக்கூடிய பாக்கியம் எனக்கும் என்னைப் போல மெய்யன்பர்களுக்கும் தான்.

இப்போது, இந்த தமிழக "காற்றழுத்த தாழ்வு மண்டலம்" பற்றியும் "பெருமழை" பற்றியும் "வெள்ளச்சேதம்" பற்றியும் கொஞ்சம் கதைப்போம். முதல் இரண்டையும் நம்மால் தவிர்க்க முடியுமா தெரியவில்லை. இன்னமும் கொஞ்சம் மனித எத்தனத்தால் "வெள்ளச்சேதம்" குறைக்கப்பட்டு இருக்க முடியும். பெருஞ்செலவு செய்து உருவாக்கப்பட்ட அந்த மற்ற தேசங்களின் தடுப்பு சக்திகளுக்கு ஏதோ ஒரு அளவில் ஒரு வரையறை இருக்கத்தான் செய்யும்.

 அரசாங்கத்தை தூக்கி நிறுத்த வெள்ளத்தில் இறந்த அந்த அரசாங்க ஊழியர் , அவர் போல பெயர் தெரியாத வேறு பலர் - குறைந்த அளவில் இருந்தாலும், அரசின் கையாலாகாத தன்மையை தூற்றி காரி உமிழும் அந்த பெரிய கூட்டத்தின் கூச்சல் மிக பலத்து இருந்தாலும் - நான் இவர்கள் நடுவின் ஊடே சக்தியையே தரிசிக்கிறேன்.

ஆம்...என் அகத்தில் தண்ணீர் இல்லை. என் குடும்பம் சிற்சில ச்ரமங்கள் (உதாரணம், மின்சாரம், கைபேசி செயலிழக்கம் , ஆவின் பால் தட்டுப்பாடு) மட்டுமே இந்த ஊழிக்கூத்தில் கண்டோம். இந்த நிமிஷம்கூட , வீடுகள் தண்ணீரிலும் சாக்கடையிலும் நிரம்பி இருக்க, சொந்த நாட்டிலேயே அகதிகளாக பலர் தமிழகத்தில் இருக்கையில், மிக சௌகரியமாக இருக்கையில் அமர்ந்து, மின்சார விசிறியின் அடியில் குஷாலாக நான் இருப்பது எனக்கு கொஞ்சமும் நெருடல் இல்லை.

சக்தியின் விளையாட்டுகளில் நாம் அறுதியிட்ட நீதிகளும் நேர்மைகளும் உள்ளங்கையில் நெல்லிக்கனி போல் எல்லா நேரமும் புலப்படுவது இல்லை. ஆனால் - கொஞ்சம் போரடிக்கும் -  நமது நியாயங்களை விட சக்தியின் தாண்டவத்தில் மர்மங்களும் சுவாரஸ்யங்களும் சற்றே  அதிகம்.

வருணபகவானை அவன் வீர்யத்தை மேலும் ஒரு முறை துதிப்போம். பஞ்ச பூதங்களில் மற்றவற்றையும் மனத்தில் இருத்தி தியானித்து , சக்தியின் விஸ்வரூபத்தின் அங்கங்களை நம்மால் முடிந்த அளவு தொழுவோம். 
வேறென்ன செய்ய....?

Baba Magic என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ?

 அடுத்த பதிவில் அது என் வாழ்கையை தொட்ட விதத்தை நான் முடிந்த வரை தொட்டு காட்டுகிறேன்.

......... வளரும்