Wednesday, November 25, 2015

"எங்கெங்கு காணினும் சக்தியடா " - 3

எழுத தொடங்கி சில நாட்கள் கழிந்து விட்டாலும் , இது இந்த தொடரின் மூன்றாவது பதிவாக இருந்தாலும் , இன்னமும் நான் மனத்தில் எந்த வித கல்மிஷமும் - ஏன் எழுத வேண்டியதை பற்றிய கணக்கு, திட்டங்கள் (விழைவுகள், விளைவுகள்  கூட....)  எதுவுமில்லாமல், வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து முன்னுரையின் இந்த பகுதியை வெகு  தீவிரமாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். 
எழுத்தாளர்களுக்கும் சிந்தனைவாதிகளுக்கும் இருக்க வேண்டிய "சமூக பொறுப்பு ...அக்கறை...." எதுவும் என்னிடம் துளியும் இருப்பதாக தோன்றவில்லை.
ஒரு வகையில், இந்த பதிவின் மூலம் ஏற்படும் எந்த ஒரு விளைவுக்கும் பொறுப்பெடுக்கும் மனநிலை கூட எனக்கு இல்லை.  
ஐயா....நான்தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே...இது என் தன்னந்தனி ஆவர்த்தனம் (சகிக்க முடியாமல் இருந்தால் கண்களை பொத்திக்கொள்வது அவரவர் பொறுப்பு...உரிமை....)

நிஜத்தை சொல்வதானால் இந்த குறிப்பிட்ட பதிவு பற்றி ஒரு one line மனத்தில்  .உற்பத்தியாகி , மேலும் வளர்ந்து, திடப்பட்டப்பின்,  நேரமும் சந்தர்ப்பமும் வாய்த்தவுடன்  அமர்ந்து விட்டேன்.
இந்த அளவு  பரம்பொருள் உதவி செய்தால் போதும்.....
நான் பாட்டுக்கு தொடர்ந்து எழுதித் தள்ளிவிட முடியும்.

என்னை நெறிப்படுத்த நான் எடுத்திருக்கும் ஆயுதம் தான் இந்த தலைப்பு. கட்டுத்தறி இருக்கும் ஒவ்வொவொரு வீட்டிலும் ஒரு கம்பன் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மை தான். (பல மகா கவிகள் இருப்பது அவ்வளவு ஒப்பாக இருக்காது என்பதால் அந்த பரம்பொருள், கம்பன் போல் ஒரு சிலர் மேல்  அருள் பாலித்தான் என்று தான் தோன்றுகிறது.)

என் மனமும் தறி போன்ற ஒரு கருவியே; இந்த தலைப்பு என் எழுதும் செயலை  கட்டுக்குள் வைக்க ஒரு ஏற்பாடு. இதை தெளிவாக உணர்வதால்,  கிஞ்சித்தும் எந்த வித ஊசலாட்டமும் இல்லாமல் என் மனம் போன வழியில் விரல் பதவிசாக செல்கிறது. 

சக்தியின் தரிசனம் சில சமயங்களில் பெரும் நிகழ்ச்சியில் ஏற்படக்கூடும். பற்பல சமயங்களில் -சிறிய விஷயத்தில், ஏன்  அற்பமான  நிகழ்வு ஒன்றில் கூட ஏற்படலாம். எனக்கு ஏற்பட்ட அந்த அற்புதமான கணங்களை கை வலிக்க, வார்த்தைகள் சலிக்க எழுதிக்கொண்டே போவதில் எனக்கு நிச்சயமாக இசைவு இல்லை.

ஒரு கோட்டோவியமாக புகை மண்டலம் போல் ஒரு தோற்றமாக -  என் அனுபவங்கள் சிலவற்றை நான்  சொல்ல வேண்டியிருக்கலாம். 
அவற்றை சொல்வதன் நோக்கம் -  படிப்பவர்களின் மனத்தில் அவரவர் வாழ்க்கை நிகழ்வுகளின் ஞாபகப் படுத்தத்தான் என்பதற்குத்தான் இவ்வளவு பீடிகை.
எவ்வகையிலும் என் கடந்த வாழ்க்கை சம்பவங்கள் இப்போதும் பெரும் ஆசுவாசமாக, நான் தரிசித்த பெருஞ்சக்தியின் மறுக்க முடியாத சாட்சிகளாக இருப்பதில் எனக்கு இசைவு இல்லை.
அது இறந்து போய்விட்ட காலம்....

எப்போதும் பழையதை  நினைத்து மருகுவோருக்கும், வருங்காலம் நினைத்து உருகுவோருக்கும்  அந்த பெரும்சக்தியின்  தரிசனம் நிகழ்வதில்லை. 
ஆம்...அது எப்போதும் நிகழ் காலத்தில் தான்......!

குறைந்த பட்சம் என்வரையில் அப்படித்தான்......!! 

வளரும் 






   

Sunday, November 8, 2015

"எங்கெங்கு காணினும் சக்தியடா " - 2

பாருங்கள்.....!!
பகிர அவ்வளவு ஆவலாக இருந்தாலும் - எனக்கு மீண்டும் தொடங்க எனக்கு ஐந்து நாள் தேவைப்பட்டு விட்டது. வன்மையான வாழ்கைச் சக்கரம் ஒருபுறம்.... "அவ்வப்போது" மட்டுமே பளிச்சிடும் "சக்தி" ஒருபுறம்... 
இதற்கு இடையில் இந்த மனுஷ ஜென்மம் அல்லாட வேண்டி இருக்கிறது.

ஒரே ஆசுவாசம்....இந்த கால தாமதங்களால் யாருக்கும் ஒன்றும் கேடு இல்லை ....நான் சொல்வது சரிதானே ? 

பந்தியில் பசியோடு உட்கார்ந்து கொண்டிருப்பவர் போல - எல்லா நேரமும் சக்தியை தரிசிக்க, அல்லது தரிசித்தவர்களை காண எவரும் ஏங்கி கிடைப்பதில்லை. 
அவரவருக்கு அவர்களின்  வாழ்க்கை சக்கரம். தன போக்கில் சிறிதும் பெரிதுமாக வெவ்வேறு சுழற்சி.
ஒரு வகையில் பார்த்தால், நான் அவ்வப்போது எழுதுவது .... சக்தியின் விளையாட்டு தன்  போக்கில் வெளிப்படுவதே சரியாக இருக்கும்.

நான் இந்த தொடர் எழுத வேண்டிய காரணத்தை சொல்ல விழைந்தேன்....
நினைவு இருக்கிறதா ??

விஷய பரிமாற்றம் (communication ) ஏற்பட குறைந்த பட்சம் இருவர் இருக்க வேண்டும் என்ற விதி பாடுவதற்கும் எழுதுபவர்க்கும் கிடையாது (பேசுவதற்கு வேண்டுமானால் இருக்கலாம்)
கண்களை மூடி தன்னுள் லயித்து பாடும் ஒரு பாடகருக்கு தன முன் தன் பாட்டை இரசிக்க மக்கள் எவரும் தேவையே இல்லை. இருந்தால் நல்லது....இல்லாவிட்டால் ரொம்ப நல்லது. பெரும்பாலான பாடுபவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் காலப்போக்கில் இது புரட்டி போகிறது ஒரு சோகமான விஷயம் 
இதுவும் சக்தியின் ஒரு லீலை என்று புல்லரித்து போக வேண்டியது தான்....வேறு வழி இல்லை !!
எழுத்தை ஒரு மிகச்சிறப்பான  வடிகாலாக நான் உணர்ந்து இருக்கிறேன். 
குயிலும் மயிலும் கழுதையும் எப்படி தனக்கு அளிக்கப்பட வாழ்கையை வாழ்வாங்கு வாழ்கின்றனவோ, அதுபோல நான் இயற்கையாக எழுதுகிறேன். இதுவே நான் இதுவரை எழுதி வந்ததற்கும் இந்த புதிய தொடருக்கும், இந்த குறிப்பிட்ட பதிவிற்கும் மூல காரணம். 

வயலோடு போகும் தண்ணீர் வரப்பில் ஓடி இஞ்சி, எலுமிச்சை தாகம் தீர்ப்பது இயற்கை....
நல்லது,  கூடாதது என்ற சட்ட திட்டங்களுக்குள் வராது. சரிதானே ? அதுபோல இந்த தொடரை யாரவது சுகித்தால் அதுவும் இயற்கையே...!

மேலும் ஒரு ஆன்மிகச் செய்தி - இது சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்லக்கேட்டது. நாயன்மார்களில் பலரும்  தன்னுள் கண்ட அற்புதத்தை பிறருக்கு சொல்ல வாய்ப்பு கிடைக்காமல் , தக்க மாணாக்கர்கள் கிடைக்கததால், வேறு வழியில்லாமல் தங்களின் அனுபவங்களை கயிலாய மலையில் பதித்து இருக்கிறார்களாம் (ஒரு விதமான தொழில் நுட்பம் என்று வைத்து கொள்ளுங்களேன்.. "Whats UP ? " என்பது நல்ல பெயராக தோன்றவில்லை ??. 
கைலாயம் என்ற அந்த புண்ணிய தலத்தைப்பற்றிய ஒரு  சொற்பொழிவில் சொன்னது இது.

எனக்கு ஒரு கயிலாய மலையாக இந்த அகண்டம். மேலும் காரணங்கள் அடுக்க வேண்டுமா என்ன ?

சுரேன் 

Tuesday, November 3, 2015

"எங்கெங்கு காணினும் சக்தியடா "

இந்த தலைப்பை..... "ஒரு புதிய தொடர்" என்று  அடைமொழி சேர்த்துதான் அறிவிக்க எண்ணினேன். ..ம்ம்ஹம் .... 

சில நாட்களாவது தொடர்ச்சியாக எழுத எண்ணக் குவியல் உள்ளே பொதிந்து கிடந்தாலும் இடையறாது எழுதுவது என் பிறவி குணத்திற்கு ஒத்து வருமா என்ற சந்தேகம் இருப்பதாலும் ("இடையறாது" என்றால் என்ன - சாப்பாடு, தூக்கம் கூட இல்லாமலா ? ம்ம்ம் .....?), எவ்வளவு நாள் தொடரப்போகிறது என்ற தெளிவு இல்லாத காரணத்தாலும்  "தொடர்" என்ற குறியீடு சரியாக இருக்குமா என்ற சந்தேகம் தோன்றிவிட்டது.  ... 
எனவே அந்த கடைசி வார்த்தையை கைவிட வேண்டியதாகி விட்டது !

"புதிய" என்ற வார்த்தையின்  கதையும் கிட்டத்தட்ட அதேதான்....!! 
நான் 7 - 8 வருடங்களுக்கு முன் எழுதிய சில "பழைய" வைரங்கள் இன்னமும் "பளிச்"சென்று இன்று கூட (எனக்கு) தோன்றுவதாலும் , இதற்கு முன் எழுதிய என் எண்ணற்ற மிழற்றல்கள் இப்போது கூட சில நிகழ்ச்சிகளின் போது - என் நினைவில் வந்து மோதி போவதாலும் எதுவுமே  பழையதாகப் போய் விடுவது இல்லை என்ற விவேகம் எனக்கு சில வருடங்களுக்கு முன்னரே  வந்து விட்டது     
இந்த தலைப்பை ஒட்டி என் சிந்தனைகளை முடிந்த வரை சிந்தாமல் சிதறாமல் பதித்து வைக்க ஒரு "புதிய" முயற்சி அவ்வளவு தான். 
புதிதாய் எண்ணங்கள் தோன்றி விடுமா என்ன.....? அதுவும் எனக்கு மட்டும்.....?? 

அத்வைத விசாரம் இப்போதெலாம் கொஞ்சம் அதிகமாகி விட்டதால்,"ஒரு" என்று சொல்லக்கூட கொஞ்சம் "ஒரு" மாதிரியாக இருக்கிறது....Why to state the  obvious ?

தலைப்பு பற்றிய வியாக்கியானம்  முடிந்து விட்டது....சரி தானே....?

தலைப்பில் எழுத மறுத்த வார்த்தைகளுக்கு இவ்வளவு வாழ்வா ? என்று குமுறுபவர்களுக்கும் , இந்த தலைப்பு மட்டும் ("எங்கெங்கு காணினும் சக்தியடா"​) ரொம்ப அவசியமா...? ஏன் இப்போது இவ்வளவு வார்த்தைகளை இறைப்பது மற்றும் எதில் சேர்த்தி ? என்பவர்களுக்கும்   தலைப்பிலேயே பதில் வைத்து இருக்கிறேன்.

இருந்தாலும் என்னால் முடிந்த அளவு விளக்குகிறேன். இனிதான் நீங்கள் கவனித்து படிக்க வேண்டி இருக்கிறது.....

எங்கெங்கிலும் எப்போதும் சக்தியை, பரப்ரம்மத்தை தரிசித்துவிட்டவர்கள் பேச விழைவதில்லை. 
"கண்டவர் விண்டிலர்" என்பது தானே மனித குலத்தின் ஒப்புயர்வற்ற தனித் தன்மை ? 

இது போன்ற அரிதான மனிதர்களை  ஒருபுறம் தள்ளுவோம் - சரி ..நம் தலைக்கு  வைத்து விடுவோம் ...அப்போது தானே நம் கண்கள் சந்திக்க முடியும் ? 

மிச்ச மனிதகுலத்தில் - மிக்க வறுமையிலும் அடிப்படை போராட்டம் மிகுந்த வாழும் அந்த பெரும்பான்மை மக்களை நம் இதயத்துக்குள் பொத்தி வைப்போம்....(ஆம்..இவர்கள் புறம் தள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல. ஒரு வகையில் நாம் சுகிக்கும் பல விஷயங்கள் இவர்கள் பங்கும் அடங்கி இருக்கிறது - என்பதால்.....)

குத்துமதிப்பாக பத்து சதவிகித மக்கள் - தங்கள் அறிவு மூலமாகவோ, ஆற்றல் துணை கொண்டோ, அனுபவங்களால் செரிவூட்டப்பட்டோ...ஏதோ ஒரு வகையில் சக்தியை தரிசித்தவர்கள்தான் என்பது என் திடமான எண்ணம். 
("எப்போதும்" தரிசித்துக்கொண்டே இருக்க வாய்க்க பெற்றவர்கள் இல்லை என்பது தான் சோகம்.)

அவர்கள் அனைவரும்  இல்லாவிட்டாலும் - ஒரு சிலராவது தனக்கு தெரிந்த வகையில் பிறருடன் பகிர விழைகிறார்கள். 
வெகு பலர் ஆய கலைகள் 64 ன் துணை கொண்டு; சிற்சிலர் என்போல வாய் விட்டு அலற தயங்காதவர்கள் (."எங்கெங்கு காணினும் சக்தியடா " ).
விண்டுரைக்க சில வாய்களாவது வேண்டாமா என்ற ஆதங்கத்துடன்  பரம்பொருள் பெருங்கருணையோடு மின்மினி பூச்சியாக இவர்களுக்கு தரிசனம் தர திருவுள்ளம் கொண்டது போலும்....

எப்படி இருந்தால் என்ன ? 

இதை எழுதும் நான் அந்த பத்து சதவிகித்தில் சட்டமாக அமர்ந்து இருப்பவன். 

ஒன்றுக்கு மேற்பட்ட தரிசனங்கள் அருளப்பட்டு , கனகுதூகலமாக கூத்தாடும் மனம் சற்று திடப்பட்டு, மென்மேலும் கூர்மையாய் அறிவு விசாலப்பட்டு... இப்போது உங்கள் முன்னால் மாறாத உவகையோடும்  இன்னமும் தீர்ந்தும் (நீர்த்தும்) போகாத வார்த்தைகளோடும் .... இதை படிக்கும் உங்கள் மேல் பெருங்கருணையோடும் .......!!  

காரணம் இல்லாமல் காரியம் உண்டோ ? காரணங்கள் இன்னும் ஒரு பதிவாக வளரும்....என்னால் தடுக்க இயலாது....மன்னித்து அருள்க.....

மேலும் வளரும்....

பின் குறிப்பு....இந்த தொடரின் ஒவ்வொவொரு பதிவை ஆரம்பிப்பது மட்டுமே என் பொறுப்பு. நடத்துவதும் முடிப்பதும் ஈசன்.