அன்புடையீர்....
வெளிநாட்டு படங்களுள் அமெரிக்க படங்களுக்கு ஒரு பிரசித்தியான இடம் எப்போதும் உண்டு.......!! பிரும்மாண்டமாக மிகப்பெருமளவு பொருட்செலவு செய்து அவர்கள் படைத்திடும் திரைப்படங்களை மற்ற நாடுகளின் திரைப்படங்களுடன் (முக்கியாக சில ஏழை நாடுகளின் எளிமையான படைப்புகளுடன்) சீர்தூக்கி... ஆராய்ந்து.......அலசும் காரியம் செய்வது என்னால் ஆகாது.
வெளிநாட்டு படங்களுள் அமெரிக்க படங்களுக்கு ஒரு பிரசித்தியான இடம் எப்போதும் உண்டு.......!! பிரும்மாண்டமாக மிகப்பெருமளவு பொருட்செலவு செய்து அவர்கள் படைத்திடும் திரைப்படங்களை மற்ற நாடுகளின் திரைப்படங்களுடன் (முக்கியாக சில ஏழை நாடுகளின் எளிமையான படைப்புகளுடன்) சீர்தூக்கி... ஆராய்ந்து.......அலசும் காரியம் செய்வது என்னால் ஆகாது.
ஏன் என்றால் முதற்கண் நான் இது வரை பார்த்த வெளிநாட்டு படங்கள் ஒரு 25 இருந்தால் அதுவே அதிகம். (அவற்றுள் ஓரிரு ஈரானிய திரைப்படங்களும் உண்டு என்று அவையடக்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன்).
மற்றொரு காரணம்... பேரிளம் இளைஞன் ஆகிவிட்ட நான் என் வாழ்நாளில் எதையும் இனிமேல் சாதிக்க முடியாவிட்டாலும். அர்த்தமில்லாத செயல்களில் ஈடு படுவதில்லை என்று ஒரு சங்கல்பம் செய்து இருக்கிறேன்.
கடைசி காரணம்....இரகசியமாக உங்களுடன் இருக்கட்டும் - ஓரிரு பத்திரிகைகளில் - சில அறிவு ஜீவிகளின் உலக சினிமா விமர்சனங்களை ரொம்ப வினயத்தோடு படித்துப் பார்த்தும்..... பீதி அடைந்து...மற்றும் சில தடவை முயற்சி செய்தும் ஒன்றும் புரியாமல் போன அனுபவம் எனக்கு இருக்கிறது.
என் சினிமா ஞானம் மிகவும் எளிதானது. ரொம்ப விஸ்தீரணமாக நான் பார்க்கும் படங்களை ஆராயும் பக்குவமும் அறிவும் எனக்கு கிடையாது என்பதை நான் அறிவேன்.
இந்த படத்தின் பிரதம நாயகனான Denzel Wahsington நடித்த "Crimson Tide" (1995) என்ற மற்றொரு அற்புதமான படத்தை நான் கண்டு களித்து இருக்கிறேன். இந்த படத்தில் முற்றிலும் வேறான மற்றொரு பரிமாணம். மனிதர் பின்னி எடுத்து இருக்கிறார்.
ஒரு மனிதன் ஒரே ஒரு நாள் முதல்வரானால் என்ன ஆகும் ? ஒரு வயதான தாத்தா தார்மீக கோபத்தால் உந்தப்பட்டு, தன் துக்கத்தால் தீவிரமடைந்து இலஞ்சத்தை ஒழிக்கும் ஒரு பெரிய காரியத்தை தன் கையில் எடுத்தால் என்ன ஆகும் ? என்று நம் பாசத்திற்குரிய ஷங்கர் பல படங்களை தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு வழங்கியுள்ளார் - அதுவும் பிரும்மாண்டமான பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு நன்கு வியாபாரமான படங்கள்.....
இந்த படமும் அந்த வகையைச் சார்ந்தது தான்....கிட்டத்தட்ட அரை மைல் நீளமுள்ள ஒரு சரக்கு இரயில் ஏதேச்சையாக ஒரு சின்னஞ்சிறிய அசம்பாவிதத்தினால் ஓட்டுனர் இல்லாமல் சீறிப் பாய்ந்தால் என்னவெல்லாம் ஆகக் கூடும் ? ...என்பது கதையின் ஒற்றை வரி (one line) - 90 நிமிட நேரத்திற்கு நம்மை இருக்கையில் கட்டிபோடும் ஒரு திரைப்படம்.
முடவன் ஒருவன் தன தோளில் உட்கார்த்தி குருடன் ஒருவன், முடவன் வழி சொல்லச்சொல்ல தங்கள் சேருமிடம் சேர்ந்த ஒரு கர்ண பரம்பரை கதை உங்களுக்கு தெரியுந்தானே ?
அப்படி, 28 வருட அனுபவம் வாய்ந்த ஒரு வயதான ஓட்டுனரும் (இரண்டு அழகான குமரிகள் 18 மற்றும் 19 வயதுகளில்....குறித்து கொள்க...), அவரிடம் அன்று ஜோடி சேர்ந்த - இரயில் பற்றி அனுபவம் இல்லாத - ஒரு இளைஞனும் (conductor) அசகாய சூரத்தனங்கள் செய்து, மதம் பிடித்து சீறிப்பாயும் அந்த சரக்கு இரயிலை நிறுத்த பிரம்மபிரயத்னப் படுகிறார்கள்.
தன வழியே வேறொரு திசை நோக்கி போய்க்கொண்டு இருந்த அந்த இருவர் விதிவசத்தால் இந்த இரயிலைக் கட்டுப்படுத்தும் முயற்சியை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். எப்படி என்றால், தங்கள் இரயில் வண்டியின் பின்னால் இருந்த பெட்டிகளை கழற்றி விட்டு விட்டு, பின் பக்கமாகவே வெகு விரைவாகச் சென்று, அந்த ஆளில்லா இரயில் வண்டியில் பிணைத்துக்கொண்டு மெது மெதுவாக அந்த வண்டியின் வேகத்தை மட்டுப்படுத்தி .... நிறுத்திவிடலாம் என்ற ஒரு திட்டம்.
அவர்கள் முயற்சிகள் ஒவ்வொன்றாக தோல்வியுற.....அவர்களில் சுய ஊக்கத்தால் தானும் உந்தப்பட்டு அவர்களுக்கு தகவல் தொடர்பு விஷங்களில் தொலைபேசி மூலம் துணை நிற்கும் அந்த இரயில் நிறுவன அதிகாரியாக ஒரு பெண்மணி - ஒரு முக்கியமான பாத்திரமாக மிளிர்கிறார்.
கடைசியில், அவர்கள் (நமது தமிழ் படங்களில் வருவது போல) தாங்களே சாதிக்கிறார்கள் இல்லை என்பது தான் நமக்கு பாடம்... (அல்லது ஞானம்....!!). அவர்களின் பல்வேறு முயற்சிகள் தோல்வியைத் தழுவி விட, திடீரென்று உதயமாகும் அந்த இரயில் நிறுவனத்தின் ஒரு அனுபவம் மிகுந்த மனிதர் துணைக்கு தன் பெரிய காரில் இரயில் அருகே பரபரப்பான சூழ்நிலையில் ஒட்டி வந்து அந்த இளைஞனை தன் வண்டியில் குதிக்கச்செய்து அவனை ஒட்டுனரில்லாத அந்த இரயில் என்ஜின் அருகே கொண்டு பொய் சேர்த்து....அவன் தாவி ஏறி.....வண்டியை நிறுத்த....அந்த உதவி செய்த அதிகாரி - அங்கே குழுமி இருக்கும் ஊடகங்களின் முன் தானே அந்த தீரமுடைய செயலை சாதித்ததாக தம்பட்டம் அடித்து கொள்கிறார்.
படம் முழுதும் நம்மை பிரமிக்க வைத்த குருடனும், முடவனும் அதை தங்களுக்குள் சிரித்துக் கொண்டு இயல்பாக ஏற்றுக் கொள்வது கொஞ்சம் நமக்கெல்லாம்...புதுசு....!!
கதாநாயகனை வாழ்த்தி திரைப்பாடல் ஆசிரியர்கள் a/c அறைகளிலும் மொட்டை மாடியிலும் நின்று பாடல்களை எழுதும் கட்டாயத்தில் இருக்கும் நமது சினிமா உலகத்தில் இது போன்ற யதார்த்தமான கதாநாயகர்கள் "பிழைக்கத் தெரியாதவர்கள் தாம்". (ஆனால் ஒரு விஷயம் - நமது வயது முதிர்ந்த ஓட்டுனர்- நாயகருக்கு முழு பலன்களுடன் பென்ஷன் கிடைத்து விடுகிறது; அந்த இளைஞனுக்கு தன இல்வாழ்க்கை குழப்பங்கள் தீர்ந்து இரண்டாம் குழந்தையும் பிறந்துவிடுகிறது.....என்பத்தை படத்தின் பிற்சேர்க்கையில் அறிகிறோம். அதாவது. அவர்களின் தேவைகள் மட்டுமே தீர்க்கப்படுகிறது..மாலை மரியாதை எல்லாம் அந்த இரயில் நிறுவனத்திற்கே.....)
அந்த இரயில் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்மணி (கதையின் முக்கிய கதாபாத்திரம் தான் இவளும் ...) கடைசியில் "ஸ்தலத்திற்கு" வந்து சேர்ந்ததும்,...."உங்களில் யாருக்கு நான் முதலில் முத்தமிட வேண்டும்"? என்று பூரிப்பில் கேட்க,. நமது வயதான ஓட்டுனர் சிங்கம்...."எனக்குத்தான்" என்று அவள் முத்தத்தை ஏற்றுக் கொள்வதும், அந்த பெண்மணி அவரை அணுகி முத்தமிட்ட பின் "கொஞ்சமே கொஞ்சம்" வெட்கப்பட்டு சிரிக்கவும், அவரின் teen age மகள் இருவரும் அவரை சற்றே தள்ளியிருந்தவாறு அவரை நையாண்டி செய்வதும்....அந்த பெண்மணி மிகவும் இயல்பாக "உங்கள் பெண்களா?" என்று யூகித்து அறிவதோடு ...படம் முடிந்து விடுகிறது.
படத்தை மிகவும் ஒன்றிப் பார்த்த எனக்கோ பெரும் சிரிப்பு ......!
"இரண்டு ஆண்டுகளுக்கு பின்" என்று ஒரு slide போட்டு - அவர்கள் இருவருக்கும் ஒரு திருமணம் செய்வித்து....அவர்கள் ஒரு குழந்தை பெற்று...அதை அந்த இரண்டு மூத்த பெண்களும் கொஞ்சுவதாகவும் , background- ல் ஒரு லல்லல்லா பாட்டு பாடியவாறும் முடிக்காததில் எனக்கு ஒரு ஆசுவாசம்....!!
என்னதான் இருந்தாலும் இந்த வெள்ளைக்கார இயக்குனர்களுக்கு கற்பனை சக்தி கொஞ்சம் நம்மை விட குறைவு தான்....வேடிக்கைக்காகச் சொன்னேன்.
ஆனால் ஒன்று.....!! இந்தப் படத்தை hollywood இன் பத்தோடு பதினொன்றாக. மற்றுமொரு action படம் என்று நீங்கள் முடிவுக்கு வருவீர்களே ஆனால் பெரும் தப்பிதம் செய்தவர்கள் ஆகிவிடுவீர்கள். நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும், மனிதர்களின் மன ஓட்டத்தையும். மனித நேயத்தையும்....நாம் அள்ள அள்ள - நிற்காமல் - நமக்கு அள்ளித்தந்து கொண்டே இருப்பது "unstoppable ".
ஆனால் ஒன்று.....!! இந்தப் படத்தை hollywood இன் பத்தோடு பதினொன்றாக. மற்றுமொரு action படம் என்று நீங்கள் முடிவுக்கு வருவீர்களே ஆனால் பெரும் தப்பிதம் செய்தவர்கள் ஆகிவிடுவீர்கள். நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும், மனிதர்களின் மன ஓட்டத்தையும். மனித நேயத்தையும்....நாம் அள்ள அள்ள - நிற்காமல் - நமக்கு அள்ளித்தந்து கொண்டே இருப்பது "unstoppable ".
காலம் தப்பினாலும் பரவாயில்லை....இதுவரை பார்க்க வாய்க்காவிடின் பார்த்து விடுங்கள்.
அன்புடன்
சுரேந்திரன்
சுரேந்திரன்
No comments:
Post a Comment