அன்புடையீர்
கடந்த வார தினசரிகளில் "புலவர் பழனிச்சாமி " என்ற ஒரு முதியவருக்கு (85 வயது ) ஆயுள் தண்டனை கிடைக்கப்பெற்ற செய்தி உங்கள் கண்களில் பட்டிருக்கலாம். இது கும்பகோணத்தில் ஒரு பள்ளிகூடத்தில் நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் கொல்லப்பட்ட 94 பள்ளி சிறுவ சிறுமியர்கள் பற்றிய வழக்கின் தீர்ப்பு. ஞாபகம் வந்து விட்டதா ?
அந்த பெரியவர் ஒரு காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து இருக்கலாம் - அவருக்கு விதி எழுதிய கணக்கு எப்படியோ சிறைச்சாலையில் போய் அவரை சேர்த்து விட்டது. இந்த விபத்தை பற்றியும் அதற்கு பின்னர் கொடுக்கப்பட்ட நஷ்ட ஈடு பற்றி - பாதிக்கப்பட்ட பெற்றவர்கள் சங்கம் அமைத்து வழக்கு தொடுத்து இதனை காலம் கடந்து இப்போது அவர்களுக்கு மேலும் ஒரு சிறிய தொகை கிடைக்கும் வழி செய்து விட்டது இந்த தீர்ப்பு.
அந்த முதியவரை காவலர்கள் இழுத்துக்கொண்டு போகும் காட்சியை படமாகப் போட்டு முதல் பக்கத்தில் ஒரு தினசரியில் வெளியிட, பல்வேறு உணர்வுகளுடன் அவரின் முகத்தை பார்த்தவாறு அமர்ந்து இருந்தேன்.
இது அந்த முதியவரைப் பற்றியோ, அந்த விபத்தை பற்றியோ, இந்த வழக்கைப் பற்றியோ, தீர்ப்பின் தரம் பற்றியோ அல்ல இந்த பதிவு. நாம் இது போன்ற கொடுமையான சம்பவங்களின் ஒரு அங்கமாகவோ அல்லது ஒரு பாதிக்கப்பட்ட பரிதாபமானவரோ ஆக இருந்தால் - நமக்கேற்ற நிலைக்கேற்ப எதாவது கருத்தை சொல்லலாம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கருவேல முள் குத்திய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா ? மண்டை வரை சுர்ரென்று வலி பாய்ந்து நம்மை துடிக்கச்செய்யும். இது ஒரு உபமானம் தான் - உங்களுக்கு புரிய வைப்பதற்காக.
கடவுள் அருளில் மின் விசிறியின் அடியில் அமர்ந்து செய்தி தாள் படிக்கும் என் போன்றவர்கள் எல்லாருக்கும் அதிக பட்ச உணர்வு "நெருஞ்சி முள்" குத்துவது போலத்தான்......
இருங்கள்........பதிவு இனிமேல் தானே ஆரம்பிக்க போகிறது ?
நான் பெற்ற நெருஞ்சி முள் கடந்த வெள்ளிக் கிழமை அன்று - அதாவது மேற்சொன்ன செய்தி செய்தித் தாள்களில் வந்த அடுத்த நாள்.
பள்ளியிலிருந்து வழக்கத்தை விட சற்று பரபரப்பாக வந்த அன்பு மகள் நானும் என் மனைவியும் இருந்த இடத்தின் அருகே சீருடையிலேயே வந்து நின்றாள் - கையில் ஒரு சின்ன காகிதம் (school circular). "அப்பா அம்மா - ஒரு நியூஸ். பொதுவாக நானே உரக்க படித்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு ஒரு சங்க கால கட்டியக்காரன் போல குரலைச் செருமிக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள் - ஆங்கிலத்தில் தான்.......சாராம்சம் என்ன தெரியுமா.....?? "அவர்கள் பள்ளியில் group insurance policy எல்லா குழந்தைகளுக்கும் சேர்த்து எடுக்கப் போவதாக "முடிவு" செய்து இருக்கிறார்களாம். குழந்தை பள்ளிக்கு உள்ளேயோ வெளியேயோ இறந்து விட்டால் எங்களுக்கு ஒரு இலட்சமும் ஊனமுற்றால் ஐம்பதாயிரம் ரூபாயும் தருவார்களாம்."
இதை அவள் படிக்கும் பொழுதே கடுகடுத்துப் போன என் மனைவியின் கோபமும் "பேஷ்" என்று படித்து முடித்த பின் சொன்ன பொது அவள் சீற்றமும் எனக்கு நன்றாக புரிகிறது.
படித்து முடித்த திருப்தியோடும், அவள் பெயரில் இலட்சக் கணக்கில் முதலீடு செய்ய உத்தேசித்த அவள் பள்ளி பற்றி பெருமை முகத்தில் தெரிய , இடம் பெயரும் மகளின் பெருமிதம் மிக நன்றாய் தெரிகிறது.
முதல் நாள் செய்தியை படித்த அவர்கள் பள்ளி நிர்வாகத்தில் உள்ள ஒரு மகானுபாவர் "தீர்க்க தரிசனமாக" ஒரே நாளில் எடுத்த முடிவும் அதன் உள்ளே புதைந்த நல்ல உத்தேசமும் ...... ஹ்ம்ம்...புரியாமல் இல்லை.
எல்லாம் சரி.... அந்த policy பற்றி இந்த circular அவசியமா ? என்ற கேள்விதான் என்னை நெருஞ்சி முள்ளாய் உறுத்தியது. பள்ளி நிர்வாகம் அவர்களின் பாதுகாப்பிற்கு செய்த ஒரு செயல் இது. பெற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்கள் என்ன சாதிக்க நினைத்தார்கள்......? ஒரு வகையில் அசட்டுத்தனம் என்று தான் எனக்கு படுகிறது.
ஆனால் பாருங்கள் .... வாழ்க்கை என்பது பாதைகளே இல்லாத காடுகளைப் போன்றது.
ஒரு சிறு நெருஞ்சி முள் காலில் தைத்தால்.....அதை தட்டி விட்டு கொண்டு நாம் நம் உள்ளுணர்வின் உதவியால் மேலே போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
அதையே தான் செய்தேன் நானும்......அகண்டத்தில் தட்டி (தட்டச்சு) விட்டு போய் கொண்டு இருக்கிறேன் மேலும்.இன்னமும் போக வேண்டும் பல காத தூரம் !
சுச்சு
some times it is better to be prudent and practical instead of being over sensitive to these kind of things in life. Kumbakonam type of tragedies happen once in our life time. But schools have become "vyaparam" long time back and sales promotion is not taboo these days .Kumbakonam tragedy just "help" them to show their concern for children and parents .
ReplyDelete"concern" for children and parents ?? Did you really mean it ?? the purpose of this post is to point out the "consideration" for parents instead of their children. The crux of the post is on "sensationalizing" the act done in selfish interest. If the schools want to run it as a "vyaparam", let them do good business - that's my whole point. Namaskarams
ReplyDelete