அன்புடையீர்
பொதுவில் நான் கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படையாகவே பேசுபவன், எழுதுபவன்.
என் தற்போதைய இலக்கிய ஆசான் பெண்களின் எழுத்து விஷயமாக ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொள்ள அவருக்காக வருத்தப்பட்டு , பின்னர் "அடடா ! நாம் மட்டும் என்ன ?" என்று உணர்ந்த தருணம் சற்று நாள் முன்னர் வாய்த்தது. (பாருங்கள்.....அவர் பெயரைக்கூட சொல்லவில்லை.....இன்னுமா புரியவில்லை ? " நான் வளர்கிறேனே மம்மி " என்று உரக்கக் கத்த தோன்றுகிறது.)
நேற்று எங்கள் குடும்ப ஹோட்டல்-க்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து போயிருந்தோம். (பெயர் வேண்டாமே ? அதற்கு தானே ஒரு முழு பத்தி இதற்கு முன்னால் எழுதி இருக்கிறேன்).
கடந்த பதினைந்து வருடங்களாக எங்கள் வாழ்வின் ஒரு அங்கம். எங்கள் செல்ல மகளுக்கு முதல் பிறந்த நாள் முதல் பத்து வயது வரை கேக் இங்கே தான் வாங்கி இருக்கிறோம். ஒரு பத்தினித்தனம் போன்ற ஒரு உறவு.....வேறு இடங்களுக்கு ஓரிரு முறை சென்றாலும், இந்த ஹோட்டல்-ன் சுத்தமும் சுவையும் மறக்க இயலவில்லை.
முக்கியமாக நாங்கள் வழக்கமாக செல்லும் ஒரு branch வெளியே போடப்பட்டு இருக்கும் பெஞ்ச் - களில் அமர்ந்தால் எனக்கு என் ஈஷா யோகா மையத்தில் இருப்பதாக ஒரு பிரமை தோன்றும். சாப்பிட்டு விட்டு ஒரு பத்து நிமிடமாவது அங்கே உட்கார்கையில் - பெயர், ஊர், உறவு எல்லாம் மறந்து அழிந்து போய் கனவுலகத்தில் சஞ்சரித்துக் கிடப்பேன்.
நேற்றைய கதைக்கு வருவோம். AC ஹால் - நல்ல கவனிப்பும் வழக்கமான சுவையும் உண்டு என்று தெரியும். நாங்கள் உட்கார்ந்து கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் எங்களை ஒருவரும் பொருட்படுத்தவில்லை. - மனத்தில் ஆனால் குறித்து கொண்டேன். சாப்பிட ஆரம்பித்த பிறகு எதுவும் வித்தியாசமாக படவில்லை. கடைசியில் "strong coffee" என்று முடிப்பது என் style. பார்யாளுக்கும் மகளுக்கும் பிடிக்காததால் எனக்கு மட்டும் வந்தது ; ஆனால் வந்தது என்னவோ "light காபி". எனக்கு சுரீர் என்று தைத்தது அந்த நொடி தான்....!!!
அந்த சர்வர் மீண்டும் வரும் வரை கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவரிடம் விசாரிக்க.....மனிதர் கிட்டத்தட்ட 15 நிமிடம் அழாத குறையாக பொரிந்து தள்ளிவிட்டார். ஆள் குறைப்பாம்.....ஒவ்வொரு நாளும் யுகமாக போகிறதாம்.இவர் ரொம்ப நேரம் எங்களிடம் பேசுவதை கவனித்த supervisor அவசர அவசரமாக வந்து அந்த சர்வர்-ஐ வேறு இடத்துக்கு வேலை சொல்லி அனுப்பி - அவர் பிடித்துக் கொண்டார் சுமார் இருபது நிமிடம் !
ஒரு தனி மனிதர் கட்டிய சாம்ராஜ்யம் அவர் காலம் முடியும் முன்னரே அழிந்து விழப்போகிறதோ என்று கலக்கமாக இருந்தது. வெற்றியாளர்களின் அடுத்த தலைமுறை வீணாய் போனதாக இருப்பதை....பாபர் காலத்திலிருந்து (ஏன் சேர சோழ பாண்டியர் காலத்தில் கூட) பார்த்து வருகிறோம்.
எனக்கு மீசை முளைக்கும் வயத்தில் இந்த ஹோட்டல் branch ஒன்றில் சாப்பிட்ட சிற்றுண்டிகளின் சுவை இன்னமும் என் மனத்தாழத்தில் தங்கி இருக்கிறது. அது நரைக்க ஆரம்பிப்பதற்குள் ஒரு சாம்ராஜ்யம் அழிவதை பார்க்கப் போகிறோம் என்பது கொஞ்சம் துக்கமாய் இருக்கிறது.
போதும்..... சாதாரணனாய் சாமான்யனாய் - சின்னச் சின்ன சம்பவங்களில் களிப்படைந்து தகுந்த காலத்தில் ஒரு பெருமரத்தின் வாடிய சருகாய் மண்ணில் விழுவதே எனக்கு போதுமானது.......!!
இறை மனம் இசைந்தால் தான் இந்த வகையான் நிறைவாழ்வு கூட சாத்தியம் - சாதாரண எதிர்ப்பார்பாக இருந்தாலும் கூட.....
அன்புடன் (கொஞ்சம் துக்கத்துடனும்)
சுச்சு