Saturday, March 15, 2014

வாஷிங்டனில் திருமணம் - ஒரு மறு பார்வை

பழைய படங்களில் நாம் இரசித்த ஹாஸ்யங்கள் நாம் வளர்ந்த பிறகு பார்க்கும் பொழுது சற்று அபத்தமாய் இருப்பதை உணர்ந்திருக்கீர்களா ? 
ஆம் நாம் வயதில் நிச்சயமாய் இப்போதைவிட வெகுளியாய் வெள்ளந்தியாய் இருந்து இருக்கிறோம்.... அதேதான் பழைய கதைகள், நாவல்கள்  கதியும்......!!

ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவல் - நகைச்சுவையாய் எழுத வல்லவர் என்று புகழாரம் சூட்டப்பட்ட "சாவி" என்று அழைக்கப்பட்ட சா விஸ்வநாதன் எழுதிய நாவலை மறுமுறை படிக்க நேர்ந்தது. 
இதே நாவலை மிகவும் சுவாரஸ்யமாக படித்த அந்த பத்து வயது சுச்சு காணாமல் போய் விட்டதை நினைத்தால் கொஞ்சம் துக்கமாக இருக்கிறது. 

வெகு சுருக்கமாக சொன்னால், ஒரு கோடீஸ்வர வெள்ளைக்கார சீமாட்டி ஒரு தமிழ் சம்ப்ரதாய திருமணத்தை ("பிராமண" என்று குறித்து கொள்க) தன் ஊரில் நடத்தி பார்க்க விரும்பி செயல் படுத்துகிறார். அதாவது கல்யாண பெண் மாப்பிள்ளையிலிருந்து வைதிகர்களிருந்து, ஏன் ஜானவாசத்திற்கு காஸ் லைட் தூக்கும் நரிக்குரவர்வரை அனைவரும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப் படுகிறார்கள். பல விஷயங்கள் அபத்தமாக இருந்தாலும் நான் இந்த மறு பார்வையில்  நாவலை நான் ரசிக்கவே .செய்தேன்....

காரணங்களை அகண்டத்தில் எழுத இரண்டு காரணங்கள்....
கடைசியில் சொல்கிறேனே .......

(1) பெரும்பாலான நகைச்சுவை சுமார் ரகமாக இருந்தாலும் (கொஞ்சம் ஓவர் - உதாரணம் - நரிக்குறவர்களைப்  பார்த்து குரைப்பதை அமெரிக்க மக்கள் பார்த்து இரசிக்க நூறு தெரு நாய்கள் இந்தியாவிலிருந்து தருவிக்கப் படுகிறதாம்.)  அர்த்தம் புரியாமல் ரொம்ப ஸ்ரத்தையாக இன்று கூட நாம் செய்யும் சடங்குகள் பரிகசிக்கப்படும் பொழுது இந்த நாவலின் "contemporeriness" நம்மை உற்சாகப்படுத்துகிறது.

(2) இந்த நாவலின் சிறப்பம்சமே கத்தி நுனி போல் செல்லும் ஒரு இலாவகம்  தான். சில இடத்தில் அமெரிக்கர்கள் கேலி செய்யப்படுவது போல் தோன்றுகிறது ; பல இடங்களில் நாமும் நம் வழக்கங்களும்.....

(3) நூற்றுக் கணக்கான பாட்டிமார்கள் ஒரு வானளாவிய கட்டடத்தின் மொட்டை மாடியில் ஒரு இலட்சம் அப்பளம் இடும் காட்சி - இயக்குனர் ஷங்கரை ஞாபகப் படுத்துகிறது !! 
சில அப்பளங்கள் காற்றில் பறப்பதும், பல "flying saucer" போல் நகரத்தின் பல்வேறு இடங்களில் தரையில் இறங்குவதும், பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் வெளியாவதும்........ visualisation  effect கொடுப்பது நிஜம்.

(4) தமிழில் பல எழுத்தாளர்கள் விஞ்ஞான கதைகள் எழுதி கற்பனை லோகத்துக்கு நம்மை கொண்டு செல்ல முனையும்  பொழுது , இந்த நாவல் (அது வெளி வந்த அந்த கால கட்டம் கருதி) சிறப்பம்சம் பெறுகிறது. 

(5) முக்கியமாக அம்மாஞ்சி  என்ற ஒரு அந்தணரும் ஒரு சாஸ்த்ரிகளும்  செய்யும் கூத்துகள் (பெரும்பாலும்) அபத்தமாக இருந்தாலும் - சில சமயம் கிட்டத்தட்ட "கவுண்டமணி செந்தில்" ஜோடியை நினைவு படுத்துகிறது. 

இப்போது இந்த நாவலைப் பற்றி நான் இந்த பதிவு எழுதுகிறேன் என்று சொல்லி  விடுகிறேன்.
 நிச்சயமாக இந்த நாவலை மறுமுறை படித்தது நிறைவான  அனுபவம்.ரொம்ப விவரம் எழுதி விடாமல் அதே நேரத்தில் ஒரு snapshot நம்மால் கொடுக்க முடிகிறதா என்று எனக்கு நானே கொடுத்துக்கொண்ட சவால் (படிக்கும் உங்களுக்கு ஒரு "சோதனை" என்று வைத்து கொள்ளுங்கள்)

இந்த தலைமுறை இந்த நாவலை (மிகவும் சிறிய நாவல் - 150 பக்கங்கள்தான்) படிக்க வேண்டும். இந்த நாவலை என் மூலமாக தெரிந்து கொண்டு யாராவது ஒரு இளைஞனோ யுவதியோ படித்தால் கூட நான் மகிழ்ச்சி அடைவேன்.

பெரிய புத்தக கடைகளில் கட்டாயம் கிடைக்கும். இரவலாக வேண்டுமென்றால் சென்னை சிட்லப்பாக்கம் பகுதில் உள்ள பவானி தெருவில் இருக்கும் என் தமக்கை காயத்ரியை வேண்டி கேட்டுக் கொண்டால்  கண்டிப்பாக உவந்து அளிப்பாள்...!! 

அந்த வெள்ளைக்கார சீமாட்டி அளவு பணம் இல்லாவிட்டாலும் அடுத்தவருக்கு கொடுக்கும் மனம் நமக்கும் உண்டுதானே..  

அன்புடன்
சுரேந்திரன்






 



2 comments:

  1. I remember, previously there was a different version ...
    Right dear ?
    May I know what prompted you to revise your view ?

    If you can lend me that book, I would like to read it ...

    Appan
    17.03.2014

    ReplyDelete
  2. mmm...you mean this post....not at all. I read this book during last week and posted it on saturday of last week. period....!! When I meet you i will reach only with this small booklet (yes; it could take hardly 2 - 3 hours even for average paced readers)

    ReplyDelete