Sunday, March 10, 2013

சொல்ல மறந்த கதை - 4 :: காலைக்கடன் :-(

அன்புடையீர்

கொண்டாட்ட மன நிலையிலும், சில சமயம் இயந்திர கதியான வாழ்க்கை ஓட்டத்தை தவிர்க்கவும், முக்கியமாக - "வழக்கத்தை விட சற்றேனும்" சுவையாக சாப்பிடவும் - நீங்கள் அவ்வப்போது ஓட்டல் போகிறவர் தானே ? 

எங்கள் வீடு விஷயமே வேறு.....

கோயிலுக்கு பக்தி பரவசத்துடன் போகிறோமோ இல்லையோ, வாரம் கண்டிப்பாக ஒரு முறை எங்கள் குடும்ப ஓட்டல்-ஆன சரவணா பவன்-க்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக போய் கொண்டு இருக்கிறோம். 

வேறு பல இடங்களும் முயற்சித்தத்தது உண்டு....!! "Feeling  at home" என்று சொல்கிறார்களே.....அந்த ரோமாஞ்சனம் ஏற்படுவது HSB -யில் தான்..

குறிப்பாக அந்த சுத்தமான சூழ்நிலையும் அற்புதமான பரிமாறும் தன்மையும்....வேண்டாம் - என்னை இத்துடன் விட்டு விடுங்கள்....காலங்காலையில் நான் ரொம்ப நெகிழ்ந்து போக விரும்பவில்லை.....வேலை நிறைய இருக்கிறது........!!

(இராஜகோபால்) அண்ணாச்சிக்கு எங்கள் குடும்ப ஆதரவும் ஊக்கமும்தான் அவரை மென் மேலும் கிளைகளையும்  (விலைகளையும் ??) வளர்க்க எருவாக இருக்க கூடும் என்பது என் ஊகம். 

இன்று காலை நானும் என் சக தர்மிணியும் மிக ஒற்றுமையாக மீல்ஸ் பார்சல் வாங்கி பகல் உணவை முடித்து விடுவது என்று முடிவு செய்தோம். 

(நாளைக்கு அருமை மகளுக்கு கணக்கு பரீட்சை...இல்லாள் சற்று ஆடித்தான் போயிருக்கிறாள் பாவம்.......உணவு விஷயத்தில் எவ்வளவு தான் பிடிவாதமான தீர்மானங்கள் எனக்கு இருந்தாலும் எனக்கும் மனிதத் தன்மை உண்டு.....நம்புங்கள்......!!)

அசட்டையாக 300 ரூபாய் (சரியாக 290) எடுத்துக்கொண்டு (1 ஸ்பெஷல் மீல்ஸ்-ம் 1 normal மீல்ஸ்-ம் அதற்கு மேலா இருக்கும் ??) பல்லை தேய்த்து விட்டு முருகா முருகா என்று வீறு நடை போட்டேன்....

(நாங்கள் படுக்கையை விட்டு  எழுந்தது பத்து மணி வாக்கில் தான்...  ஹி ஹி ).

சமீபத்தில் விலை ஏறி இருந்தாலும் பார்சல் வரும்வரை நாக்குக்கு சற்றே வலு சேர்க்க சுடச் சுட ஒரு நெய் பொங்கல் வழுக்கி உள்ளே போனது.....; முருகா....முருகா....!!

கொண்டு போன பணம் பற்றி நிச்சயமாக அவ்வளவு பிரக்ஞை இல்லை. சரியாக 303 ரூபாய்-க்கு பில் வந்தது......; சர்வர்-க்கு 10 / 20 ரூபாய் தராமல் எழுந்து இருப்பது என்னுடைய வழக்கத்தில் கிடையாது. அது மட்டுமில்லை - எப்படியும் பற்றாக்குறை தான்.....; 

உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை...இது போன்ற சந்தர்ப்பங்கள்  பலவற்றில் சிக்கி, முழித்து மீண்டு வந்திருப்பதால் (இதே சரவணா பவன்-ல் கூட ) எனக்கு அவ்வளவு பிரச்சனையாக படவில்லை. 

ஓட்டல் மேனேஜர் பரிச்சயமானவர்தான்....அவர் ரூம்-ல் இல்லாதது நான் உட்கார்ந்திருந்த டேபிள் - லிருந்து தெரிகிறது....!! அவர் அந்தஸ்து-க்கு குறைவானவர்களிடம் பேசுவதில் எனக்கு தயக்கம் இருந்தது.....என்ன செய்வது ?

மிடுக்காக எழுந்து அவர் ரூம் வரை சென்று சுற்று முற்றும் பார்த்தேன். பரிச்சயமான ஒரு சர்வர் முகம் புன்னகையுடன் அருகில் வர.... அவரிடம் நிலைமை சொல்லி ஒரு 25 ரூபாய் மாலையில்  தருவதாக சொன்னேன். நான் எதிர்பார்த்தவாறே மேனேஜர்-க்கு அடுத்த லெவல் கைத்தடிகள் இருவர் என்னை நெருங்கினார்கள்.....!! 

அவர்கள் முகத்தை நேருக்கு நீர் பார்க்காமல், என் நண்ப - சர்வர் கிட்டே மட்டும்தான் என் சம்பாஷனை.....(எனக்கும் 40 வயது ஆகப்போகிறது பாருங்கள்......!! human psychology )

அவர்கள் மூவர் கண்களும் சில வினாடிகள் சந்தித்தன...."இதற்கெல்லாம் எதற்கு சார் மேனேஜர் வரைக்கும் போய்க்கிட்டு ?" கைத்தடிகளில் ஒரு ஆதுரமான குரல் 

(இதுவும் நான் எதிர்பார்த்தது தான்...இந்த முடிவு நண்பா சர்வர் எப்படி எடுப்பார் ....பாவம் ?)

ஹ்ம்ம்.... மாலை மீண்டும் சரவண பவன் போக வேண்டும்....! 

ஒரு அருமையான காப்பியை கண்கள் கிறங்க அனுபவித்து குடித்து விட்டு - காலையில் நான் வைத்து விட்ட கடனை பைசல் பண்ண வேண்டும்.....!! 

.என்ன செய்வது - விதி எப்போதும் வலியது தான்.......; கடமை என்னை நறுமணம் பொங்கும் காப்பியுடன் அழைக்கிறது.....நமக்கு அளிக்கப்பட குறைந்த பட்ச மதியை வைத்துக் வாழ்வாங்கு வாழ வேண்டியது தான்.....

என்ன சொல்கிறீர்கள் ?? 

உஷ்....ஒரு ரகசியம்......!! 

நடந்து முடிந்து இரு மணி நேரத்துக்குள் அகண்டத்துக்கு அறிவிக்கப்பட்ட இந்த ரகசியம் என் சக தர்மினி-க்கு தெரிவிக்கப்படவில்லை......!! 

அவள் உண்ட களைப்பில் சற்று அயர்ந்து இருக்கையில் எது போன்ற சம்பவங்கள் அவளுடைய ஜீரண சக்திக்கு அவ்வளவாக உதவுவதில்லை.... (மயிர் நீப்பின் உயிர் வாழா பரம்பரை .... பாவம்)

அவளுக்கு படிப்பதில் இருக்கும் ஆர்வும் பொறுமையும் எனக்கு தெரியுமாததால் அவள் பாம்பு செவிகளுக்கு உங்கள் மூலமாக சென்றால் தான் உண்டு......!! படித்து விட்டு மறந்துவிடுங்கள் ----- தயவு கூர்ந்து......

அகண்டத்தில் இந்த விஷயத்தை வரவு வைத்தது என் ஆத்ம திருப்திக்காக மட்டுமே......

அன்புடன்

சுரேந்திரன்



No comments:

Post a Comment