சில சமயம் விதி மேல் பெருமதிப்பு ஏற்படுகிறது. இந்தத் திரைப்படத்தை எப்படியாவது பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், சமய சந்தர்ப்பம் சரியாக வாய்க்காமல், ஆசை வற்றிப் போன பின் "உலகத்திலேயே முதன் முறையாக புத்தம் புது திரைப்படமாக" நாம் காண ஏங்கியப் படத்தை ஆவலுடன் தொலைக்கட்சிப்பெட்டியில் பார்க்க நேர்வது விதியின் விளையாட்டே அன்றி வேறென்ன ?
ஆண்டவனுக்கு நன்றி.....!!
இதுவும் வாய்க்காமல் போகும் துரதிர்ஷ்டத்தை நமக்கு அளிக்காத அந்த பேரருள் முன் கை கூப்பியே ஆகவேண்டிய ஒரு தருணந்தான் இன்று....
ஆம் !! நான் ஆறு விருதுகளைப் பெற்ற "ஆடுகளம்" திரைப்படம் கண்டு திளைத்தேன்...!!
அற்புதமான ஆனால் நமக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாத ஒரு களம் .... உன்னிப்பாக கவனித்தால் மிக நன்றாகவே புரியும் அழகு தமிழ் வசனங்கள் ..... பாத்திரங்களாகவே மாறிவிட்ட நடிக நடிகையர்..... சேவல் சண்டையில் துவங்கி, மனிதர்களின் கேவலமான பக்கத்தை மிக அழகாக துகிலுரிக்கும் ஒரு அற்புதமான திரைக்கதை.
அற்புதமான முடிச்சுகள்..... கதையோடு இழைந்து கரையும் இசை..... கதாநாயகனின் லாவகமான லுங்கி நடனம்....மழலையாய் மிழற்றும் அந்த அழகு கதாநாயகி.....பொறுப்பாய் உபதேசம் செய்யும் கதாநாயகனின் அம்மா மற்றும் யதார்த்தமாய் ஆங்கிலத்தில் பேத்திக்கு நிதர்சனம் புரிய வைக்க முயலும் கதாநாயகியின் பாட்டி.....!!
கிளி கொஞ்சும் திரைக்கதை....!! ஆறு விருதுகளும் ஜன்ம சாபல்யம் பெற்றிருக்கும்.....!!
வெறுப்பையும் வன்மத்தையும் விட மிகவும் ஆபத்தானது நம்பிக்கைத் துரோகம். அதுவும் அநீதி இழைக்கப்பட்டவன் கடைசி கணம் வரும் வரை நினைத்து நினைத்து மருகும் வகையில் மிகக் கேவலமாக நடந்துக் கொள்ளும் அந்த முதியவரின் முடிவான முடிவு எந்த அளவு நியாயமாக படுகிறதோ, அதே அளவு - அவர் பெயர் கேட்டு விடக்கூடாது என்று மெனக்கெடும் அந்த இளைஞனின் மனமும் மிகவும் நியாயமாகப் படுகிறது. இது போன்ற ஒரு திரைக்கதையை இவ்வளவு அழகாக அமைதியாக வேறு வகையில் நிறைவு செய்ய முயல்வது மிகவும் கடினம். மிகவும் அமைதியாக இயக்குனரின் பெயர் திரையில் கடைசிக்காட்சியில் தோன்ற, அத்துடன் சேர்த்து நம் மனமும் தான் அமைதியில் உறைகிறது.....!!
காலம் தாழ்த்திக் காணக்கிடைத்தாலும் நன்றியில் மனம் விம்முகிறது.....!!
அந்த பெரிய கடவுளுக்கு நன்றி - மீண்டும் ஒரு முறை.....!!
அன்புடன்.....
சுரேன்
No comments:
Post a Comment