Sunday, February 4, 2018

*** களவாணி **** "Better to be late than Never "



அன்புடையீர்.....

பார்க்க வேண்டிய படங்கள் என்று மனத்தில் குறித்து கொண்டாலும் சோம்பறித்தனத்தாலும், மனத்தில் அவ்வளவு பெரிய விருத்தி (இந்த வார்த்தையை குறித்து கொள்க......அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்)  ஏற்படாததாலும் சினிமா theatre -லிருந்து வெகு விரைவில் வெளியேறிய படங்களில் ஒன்றாக இருப்பதாலும் சிலவை தட்டிப்போய் விடுகின்றன. 

அப்படிப்பட்ட ஒரு தட்டிப்போடப்பட்ட, தள்ளிப்போடப்பட்ட ஒரு படத்தை நேற்று தரவிறக்கம் செய்து நேற்று பார்த்தேன்.
ஈர்க்கக்கூடிய தலைப்பு - "களவாணி".


ரணகளமாக, இரத்த வாடையோடு அமைந்து இருக்கக்கூடிய ஒரு திரைக்கதை -  மிதமான நகைச்சுவையின் துணை கொண்டு -  மிக லாகவமாக தேர்ந்த இயக்குனரால் கையாளப்பட்டிருக்கிறது. தலைமுறையாக இருந்து வரும் ஒரு ஊர்ப்பகை ("கோயில் விக்கிரஹம் எந்த ஊருக்கு ?") வெகு இயல்பாக ஒரு விறுவிறுப்பான திரைக்கதையின் இறுதியில் அனாயசமாக ஒரு முடிவுக்கு வருவது - ஒரு வகையில் திரைக்கதையில் இயக்குனருக்கு இருக்கும் தேர்ச்சியை - பூடகமாக , ஏன் மிக ஆணித்தரமாகவே  - பறைசாற்றுகிறது. வசனங்கள் வெகு கூர்மை -  பொழுது போக்க படம் பார்க்க நினைத்தால் மொத்த வசனத்தின் விஸ்தீரணத்தை தவற விட்டு விடுவோம்.

பல காட்சிகளில் - தீவிர உணர்ச்சிகள் விளிம்புக்கு சென்றுவிட்டு  வெகு இயற்கையாக - முக்கியமாக காட்சியின் நளினம் கெடாமல் -நகைச்சுவையாக  கொண்டு போவது படத்தின் முழுவதும் இருக்கும் சிறப்பு....!! 

சட்டென்று மனத்தில் தோன்றும் ஒரு உதாரணம் - ஊரிலிருந்து திரும்பும் கணவன் (கதாநாயகனின் தந்தை) கண் மண் தெரியாமல் தன மனைவியை அடிக்க , அவள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது போல நடித்து அவர் கோபத்தை "நேர்" செய்யும் காட்சி).
மற்றோரு சந்தர்ப்பத்தில் மகனுக்கு passport எடுக்க பணம் தர மறுக்கும் கணவனை தன்னுடைய தங்க சங்கிலியை தருவது போல் நடித்து வழிக்கு கொண்டு வருவது. 

கதாநாயகன் விமல் வேறு சில படங்களில் பார்த்து இருக்கிறேன். கூத்துப்பட்டறையில் தேர்ச்சி பெற்றவர் என்று எங்கோ படித்த ஞாபகம். அவரது பூஜை மணியின் ஒலி  போல ஒரு "கண கண " குரலும், பூஞ்சையான உடலும், வெகு சுமாரான உடல் மொழியும் எனக்கு பெரிய ஈர்ப்பு எதுவும் ஏற்படுத்தவில்லை. இந்த படத்தில் குறிப்பிடப்பட்ட அவரது  எல்லா விதமான குறைகளும், நிறைவாக அமைந்து விட்டது.

இந்த படத்தில் "களவாணி"யாகப்பட்டவர் கொடுமைக்காரன்  அல்ல. மிகவும் புத்தி சாதுர்யமும் நகைச்சுவை உணர்வும் கொண்டவன்  -  ஒரு வகையில் "situation leader ".  (நண்பர்கள் கடை கடையாக நுழைந்து வசூல் செய்ய, பட்டும் படாமலும் கடையின் வெளியே நின்று விட்டு, அவர்களது வசூலை எண்ணிக்கொண்டு தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு அவர்களை தன் தலைமையில் "சரக்கடிக்க" கூட்டிச் செல்பவன் .
கதாநாயகியை வரப்பில் சீண்டிக்கொண்டிருக்கும் பொழுது எதிர்ப்படும் நண்பனிடம், வெகு இயல்பாக "அவள் பேனாவை தொலைச்சுட்டா .. தேடிக் குடுத்தேன். நீ சொல்லு ...என்ன விஷயம்? "  என்று பேச்சை மாற்றும் சாமர்த்தியம் உள்ளவன்.
சந்தைக்குச் செல்லும் மாடுகளை தன் வயலில் உழ வைத்துவிட்டு அந்த திருட்டுத்தனம் வெளிப்பட்டு விடாமல் சாட்சியின் வாயை அடைக்கும் காட்சி... ;  திருடிய உர மூட்டையை மிகவும் சாமர்த்தியமாக அப்பாவி போல் ஒப்படைத்து விட்டு அவப்பெயர் வராமல் காப்பாற்றிக்கொள்ளும் காட்சி... சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த படத்தில் விமலின் பாத்திரம் மற்றும் அவர் கையாண்ட விதம் ஒரு பிரபலமான திருக்குறளை நினைவூட்டியது ("இதனை இதனால் இவன் முடிப்பான் ...").

மகன் எவ்வளவு தப்பு செய்தாலும் அவன் மேல் வாஞ்சை குறையாத தாயாக  சரண்யா -  இந்த படம் இவருக்கும் மேலும் ஒரு மைல் கல் தான் - சந்தேகமில்லாமல். "top " ஆக  வரப்போகும் மகனுக்காக அவன் நிகழ்கால  தப்புக்களை மன்னிப்பது மட்டும் அல்லாமல் இயல்பாக ஏற்றுக்கொள்வது - தத்துவார்த்தமாக  பார்க்கப்போனால் - ஒரு சராசரி இந்திய தாய். 
அப்பா தமிழரசுவும் கோபம் வெளிப்படுத்தும் முகத்தில் நகைச்சுவை தொனிக்கும் வசனங்கள் அழகாக பேசியவாறு கதையோடு பொருந்தி போகிறார். (கடைசி வரை அவர் தன மனைவிக்கு "devils advocate " ஆகவே இருப்பது வெகு இயல்பாக அமைந்து விட்டது)

அறிமுக கதாநாயகி ஓவியா - நேர் வகிடு எடுத்து , இழுத்துக்கட்டப்பட்ட பின்னலோடும், ஒல்லி உடம்பில் பாந்தமான  தாவணியோடும் (கொஞ்சம் கூட விரசம் இல்லாமல் - கவனிக்க) அமர்க்களமாக நடித்து இருக்கிறார். Big Boss ல்  நம் எல்லாரையும் கவர்ந்த அந்த உதட்டு சுழிப்பும், ஒய்யாரமாக அந்த நடையும் -  அவருக்கு  இயல்பாகவே அமைந்து இருக்கின்றன என்பதற்கு "களவாணி" படம் ஒரு  சாட்சி !
" 'மகேஸ்வரி.... !! மகேஷ்'ன்னு தான் சொல்லுவாங்க"  என்று சிடுசிடுப்போடு தன்னை விமலிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளும் காட்சியில் ஆரம்பித்து  சிறிது நாள் கழித்து "கட்டிக்கிறேன்" என்று முகம் பூரா பூரிப்போடு சொல்வதும், ஒரு பெண்ணை "தூக்கும்" விமலை பார்த்து வெறுத்து போய் வெறுப்பை உமிழ்வது என கதையோடு பிணைத்துக்கொள்ளும் முக பாவங்கள்... big boss பங்கேற்றத்தினால் அதிக புகழ் பெற வேண்டிருப்பது இவர் தலையெழுத்தாக இருந்து இருக்கவேண்டும். காலம் தப்பினாலும் பாதகமில்லை - திறமை ஒளிர்ந்தால் சரி....!!

அந்த உயரமான சிடுசிடுப்பான வில்லன் மற்றும் ஒரு நல்ல தேர்வு (ஒரு காட்சியில் - ஒரே ஒரு காட்சியில் அதுவும் கடைசியில் புன்னகைக்கிறார்) . வெகு பக்தியாக (mannerism போல ?) தன் கழுத்து மாலைகளை "தீவிரம்" காட்டுவதற்கு முன்னால் அவிழ்த்து வைக்கிறார். விமலின் அதிரடி புளுகுண்ணித்தனத்தை  எதிர்கொள்ளும் வகையில் மிக நிதானமாக யோசித்து செயல்படும் இயல்போடு இவரை காட்டியிருப்பது நல்ல கதை யுக்தி. அவ்வளவு நிதானமாக இருக்கும் அவர் கடைசி காட்சிகளில் செயலின்மையின் உச்சத்தில் (height of helplessness) தவிக்கும்போது ரொம்ப பரிதாபம் மேலிடுகிறது. (எனக்கு என்னவோ  கதாநாயகன் களவாணி மேல் கொஞ்சம் கோபமே ஏற்பட்டது)
(ஒரு விஷயம் குறிப்பாக கவனித்தேன் - ஹீரோ வும் வில்லனும் முதல் முறையாக படத்தில் நடுப்பகுதியில் தான் பேசிக்கொள்கிறார்கள் - முதல் காட்சியிலிருந்து  ஒருவரை ஒருவர் பார்த்து உறுமிக் கொண்டே  இருந்தாலும்... (Quite Amusing) 

பாட்டுக்களும் அவசியமான இடங்களில் பொருத்தமாகவே இருக்கின்றன. கிராமத்து பேச்சு வழக்கங்களும், நையாண்டிகளும் படமெங்கும் விரவி இருக்கின்றன. 

இந்த படத்தை பார்த்து விட்டு அந்த நினைவுகள் நீங்காத நிலையில் வெகு எதேச்சையாக டிவியில் இன்று  - நாடோடிகள் - கடைசி 20 நிமிட காட்சிகளை பார்த்தேன் . இதுவும் நான் இரசித்து பார்த்த ஒரு படம்தான் - பத்து வருடங்களுக்கு முன்னர். நட்பின் "scope" பற்றி வெகு தீவிரமாக மிக வித்தியாசமாக பேசிய படம். கடைசி காட்சியில், படத்தின் இறுக்கத்தை தணிக்கும் வண்ணம் கதாநாயகனின் புன்சிரிப்போடு - 24 ஆட்களோடு கதாநாயகனும் அவன் நண்பர்களும் சேர்ந்து 28 ஆவது -  முடிந்த அந்த படம் - நகைச்சுவையின் அளப்பரிய ஆற்றலை சட்டென்று எனக்கு புரிய வைத்தது. 

ஆம்...  வாராவாரம் பல low budget படங்கள் இது போன்று தமிழகத்தில் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அறிவுஜீவிகளின் பார்வையில் இவை புறக்கணிக்கத்தக்கவை -   "வெறும் குப்பைகள்" .

7 வருடங்களுக்கு முன் வந்த ஒரு படத்திற்கு நீட்டி முழக்க வந்தாயா என்று என்னை கேட்க நினைப்பவர்களுக்கு -
நான் தான் பல்வேறு தருணத்தில் பல வாக்கியங்களில் சொல்லி - அகண்டம் நெடுக - சொல்லி வந்திருக்கிறேனே !! 
எதுவும் பழையது ஆவது இல்லை. காலங்கடந்து என்று எதுவுமே இல்லை...

அங்கங்கே பளீரென்று  வெளிச்சம் பாய்ச்சும் இது போன்ற சில படங்களை (காலம் கடந்து) பார்க்க நேர்வதும்,
அதைப்பற்றி சிலாகிப்பதும்,
அகண்டத்தில் பதிய நேர்வதும்,
சராசரி மானுடனின் மகிழ்ச்சி ! 

சுரேந்திரன் 











No comments:

Post a Comment