எச்சரிக்கை : தலைப்பில் நீங்கள் கண்டது "பா" .
சோப்பு விற்க துவங்கியிருக்கும் காவியுடை தரித்த ஒரு நவீன துறவி (?) ஒருவர் பற்றியல்ல எம் பதிவு.சறுக்கி விடாதீர்.....
spelling பற்றித்தான் சொன்னேன் !!
அன்புடையீர்
நமது பாரம்பரியமும் சரித்திரமும் கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு மனிதனின் உடல் அங்கங்களில் "பாதம்" பற்றிய முக்கியத்துவம் நன்றாக தெரிந்து இருக்கும். பல சரித்திர கதைகளில், ஞானிகள் மற்றும் குரு பரம்பரையினர் ஏதாவது காரணத்திற்காக அரசவை வர நேர்ந்தால் மன்னன் அவர்களை எதிர்கொண்டு அழைத்து தக்க ஆசனத்தில் இருத்தி , பெருமை பொருந்திய தனது மணி மகுடத்தையே கழற்றி அவர் பாதங்களில் சமர்ப்பிப்பது ஒரு மரபாக இருந்ததிருக்கிறது என்று நிச்சயம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆன்மிகத்தில் இருப்பவர்களின் பாதங்களுக்கு அவ்வளவு கீர்த்தி உண்டு....!!
(அப்படியென்றால் "எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் " என்ற பழமொழி எப்படி வந்தது ? என்று நக்கல் அடிக்க வேண்டாம். இந்த பதிவு பாதங்களுக்கான என் சமர்ப்பணம்.
"தலை" வணக்கம் என்று பெயரிட்டு பிறிதொரு நாளில் முகத்தை பற்றி கதைப்போம்.....)
நமது பாதங்களில் சில குறிப்பிட்ட பொட்டுகளில் நிபுணர்கள் அழுத்தினால் அது மருத்துவ ரீதியாக பல தீர்வுகளையும் வல்லது என்று தற்காலத்தில் கூட கேள்விப்படுகிறோம். தலையை எந்த அளவு நம்பிக்கையோடு நம் saloon - ல் ஒப்படைக்கிறோமோ அதையே போல் பாதத்தை ஒரு Refloxology கிளினிக் வசம் ஒப்படைத்தால் நம் ஆரோக்கியம் எளிய முறையில் பாதுகாக்க படுகிறது - இந்த காலத்தில். மருத்துவ உலகம் பண்டைய ஞானங்களின் துணை கொண்டு விஸ்தரித்துக்கொண்டே போகிறது.
இந்த அற்புதமான மனித உடலில் .....
ஐந்து முக்கிய உறுப்புகள் (vital organs )
எண்ணற்ற பிற உறுப்புகள் - உள்ளேயும் வெளியேயும்....
எல்லாவற்றையும் விட நம் அகத்தின் விலாசம் காட்டும் ஒரு முகம் ("Face is the Index of Mind"),
அதில் ஒளி தெறிக்கும் கரு விழிகள்....
(கண்ணோடு கண் நாம் பிறரை நோக்கும்போது ஒரு வித மின்சார தெறிப்பு ஏற்படுவத்தை உணர்ந்து இருக்கிறீர்களா ? அதிலும் ஒரு வசீகரமான எதிர் பாலரை (opposite sex ) சந்திக்கும் போது வேறு பல இராசயன மாற்றங்கள் estrogen துணை கொண்டு ஏற்படுவது .... வேறு ஒரு பெரிய பதிவுக்கான விஷயம்...) .
எல்லாவற்றையும் விட்டுவிட்டு உனக்கு பாதம் பற்றி தான் இந்த வார இறுதி நாளில் எழுத தோன்றியதா என்று அலுத்துக்கொள்பவர்களுக்கு புன்னகை தான் என் பதில். .
ஆம்...மனித உடலில் "இறுதியாக" பிற அவயங்கள் எல்லாவற்றுக்கும் கீழே .... அமைந்து இருக்கும் இந்த பாதம் என்னை ரொம்பவே பரசவப்படுத்துகிறது .
பல வருடங்களுக்கு முன்....ஒரு கோயில் வாசலில் ஒரு போர்டு "பாத அணிகளை இங்கே விடவும்." என்று எழுதியிருந்தது கண்டு ... இரசித்து இப்போது ஞாபகம் வருகிறது. ("காலணி " என்பது தவறு தானே ?? இப்படித்தான் பாஷை சில சமயம் அழுகிப் போகிறது).
வெகு ஆஜானுபாகுவாக 100 கிலோ எடை கொண்டவர்களை பார்க்கிறோம். அவர்கள் எடையை தாங்க அவர்கள் தொடை பருத்து இருந்தாலும், சற்று கீழாய் அவர்கள் பாதங்கள் நம்முடையது போலத்தான் இருப்பதாக தெரிகிறது என்ன அதிசயம் இது .... அடடா.....!!
கொஞ்சம் ஆடி ஆடி...யானை அசைவுகளோடு சற்று மெல்ல அவர்கள் நடந்து போனாலும், அந்த பாதங்கள் அவருக்கு தேவையான சம நிலை (balance ) அளிக்க வல்லதாய் இருக்கிறது....
என்ன அற்புதம்...!!
இந்த பதிவு வெறும் theory இல்லை....நம்புங்கள்...!!
ரொம்ப நாளாக நான் தள்ளிப்போட்டு கொண்டு இருந்த ஒரு வேலை ... ஒரு modern saloon போய் ஒரு pedicure செய்து கொள்ள வேண்டும் என்பது.
நாற்பதுகளின் மத்யமத்தில் வயசு ... பித்த வெடிப்பின் ஆரம்பம்... கொஞ்சம் பாதங்களை பராமரிக்க வேண்டிய தேவையை பற்றி என் இல்லாள் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்கிறாள்.
என் வழக்கமான saloon நண்பர் அந்த காலத்து மனுஷன்.... கடையும் சிறிசு.... அவருக்கு இது போன்ற அம்சங்கள் இன்னும் கைவரப் பெறாததால் , எனக்கு Green Trends போன்ற இடங்களுக்கு போக இருந்த மனத்தடையை இந்நாள் வரை காப்பாற்றி வந்திருக்கிறேன் ... அது போன்ற குளுகுளு கடைகளுக்கு உள்ளே போகும் வாய்ப்பு கூட நான் ஏற்படுத்திக்கொண்டது இல்லை....
(ஒரே ஓரு முறை "துணை"க்காக போயிருக்கிறேன் - ஓரிரு வருடம் முன்பு)
போன ஞாயிறு - சுபதினத்தில் - மிகவும் தயக்கமாக எங்கள் அருகாமையில் இருக்கும் ஒரு branch - க்கு உள்ளே சென்று விசாரிக்க - வெடவெட என்று ஒரு இளைஞன் ரொம்ப சந்தேகமாக என் பாதங்களை சோதித்துப் பார்த்தான்.
கொஞ்சம் களேபரமாக இருந்த என் பாதங்கள் அவனை கலவரப்படுத்தி இருக்கக் கூடும். அவனிடம் நான் சமாதானமாக இந்த அழுக்கும் பிசுக்கும் அருள்மிகு சாய் நாதர் அருளில் திளைக்கும் சீரடியில் புழுதி என்றும் நான் அன்று காலைதான் சென்னைக்கு வந்தேன் என்று சொல்லவும், அரை (half) மனத்தோடு அவன் வேலையை ஆரம்பித்தான்....
அவன் என் கால் இரண்டையும் பத்திரமாக ஏந்தி வெதுவெதுப்பான நீரில் அமர்த்திய அந்த கணம்...நான் கூசிப்போனேன். இது மிகவும் புதிய உணர்வு...எவரும் இது வரை என் பாதத்தை இதுபோல் ஆதுரமாக பிடிக்க நேர்ந்ததில்லை. பெரும்பாலானவர்களுக்கும் அப்படிதான் என்று தோன்றுகிறது . அந்த ஒரே கணத்தில் அந்த பையன் என் நெருங்கிய சிநேகிதன் ஆகிப்போனான். ( உடன் பிறவா சகோதரன் ?? )
ஆறு / ஏழு கட்டமாக அவன் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் தன் "திறமை"யை காட்ட - அச்சுபிச்சாக இது வரை காட்சியளித்த சின்னம்மா எப்படி ஒயிலான அரசியல் தலைவராக மாறிப்போனாரோ அதுபோல் என் பாதங்கள் ஒளிரத் துவங்கியது. மிகவும் ஆதுரத்துடன் - நான் அவன் பெயர் கேட்க, அந்த பையன் அடக்கமாக "ஏழுமலை" என்று சொன்னதும் எனக்கு அட.....என்று தோன்றியது.
கடந்த 5 நாட்களாக திடீர் திடீர் என்று இந்த பேரானந்த 45 நிமிட அனுபவம் ஞாபகம் வரும் போதெல்லாம் நான் மனம் இளகி என் பாதங்களை நோக்குகிறேன்.
பரவாயில்லை...ஓரளவு நன்றாக சுத்தமாகத்தான் நான் வைத்துக் கொண்டு இருக்கிறேன்.
அடுத்த மாதம் வந்ததும் இந்த அதி அவசிய "திருப்பணி"யை எனக்கு நான் செய்து கொள்வது என்று உறுதி பூண்டு விட்டேன். இதை சுகத்தையும், சுத்தத்தையும் ஸ்திரமான விஷயமாக ஆக்கிக் கொள்வது ஒரு வகையில் எனக்கு கடமை ஆகி விட்டது.
நிற்க, எனக்கு திடீரென்று தோன்றுகிறது.
ஆன்மீக உலகத்தில் குருக்களும் சதகுருக்களும் "பாத பூஜை"யை ஒரு முக்கிய அம்சமாக இன்னமும் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் ஒரு முறை feet massage முறையாக அனுபவித்து விட்டால்... கண்கள் கிறங்கிப்போய், துறவறம் துறந்து ... இந்த சுகத்திற்காகவே பொருள் உலகத்திற்குள் மீண்டும் நுழைய ஆசைப்படலாம்....
"கதவை திற .. காற்று வரட்டும்" என்ற ஒரு கட்டுரை தொடர் எழுதிய ஒரு ஆன்மிக குருவும்.... அவருக்கு பின்னர் ஏற்பட்ட கதியும் ஏனோ நினைவுக்கு வருகிறது.....
அன்புடன்....சுரேந்திரன்