முன் குறிப்பு :- இதற்கு முன், பல முறை - தமிழ் படங்களுக்கு ஆங்கிலத்தில் விமர்சனம் (அல்லது, "என் பார்வை" என்று சொல்லலாமா? ம் ம் ம் .......? ) எழுதியிருக்கிறேன். ஒரு மாறுதலுக்காக ஒரு ஆங்கிலப் படத்திற்கு என் தாய் மொழியில் எழுதலாம் என்று பட்டது.
மேலும் ஒரு முக்கியமான நோக்கம் தமிழில் எழுதுவதில் உண்டு.....கடைசியில் சொல்கிறேனே ?? சரியா....?
மேலே படியுங்கள்....
அன்புடையீர்
7 - 8 வருடங்களுக்கு முன்னால் வெளியான "Crimson Tide" என்று ஒரு ஆங்கிலப் படம் பார்க்கும் வாய்ப்பு சுமார் ஒரு வருடம் முன்னால் எனக்கு வாய்த்தது அற்புதமான அந்த திரைப்படம் (காவியம் என்று சொல்ல இதயம் துடிக்கிறது....கௌதம் மேனன் வகையறா-வின் காவியம் போன்ற பெயர் வைக்கும் திறமை சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வருகிறது ) அகண்டத்தில் பொறித்து வைப்பதற்காக மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு இப்போது எழுதுகிறேன்.
எழுதத்தொடங்குவதற்கு முன்னால் இந்த படப்பெயரின் அர்த்தம் பற்றி ஒரு ஆர்வம்.
இணையத்தில் தேடியதில் - இது சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முக்கியமான கால் பந்தாட்டப் போட்டியைக் குறித்து ஒரு பத்திரிகையில் ஒரு குறியீடாக வந்த ஒரு பிரயோகமாம்.....!! பெயர்க்காரணம் - படம் பார்த்தால் நன்றாகவே புரியும். ஏன் ..... இந்த திரை விமர்சனமே ஓரளவு அதை புரிய வைத்து விட முடியும்.
என் வார்த்தைத் தவம் பற்றி எப்போதுமே எனக்கு சற்று அபரிதமான நம்பிக்கை தான்.....!!
நான் இந்த திரைப்படத்தின் இயக்குனராக இருந்தால், அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், "இருவர்" என்று தயங்காமல் பெயர் வைத்து இருப்பேன் (இயக்குனர் மணி ரத்தினத்தின் சம்மதம் பெற்று தான்....; சந்தேகம் வேண்டாம் ) .....ஒரு நீர் முழுகி கப்பலின் கேப்டனுக்கும் அவரின் முதல் அதிகாரி ( XO - Executive Officer) -க்கும் இடையே நடக்கும் ஒரு தர்ம யுத்தம் தான் இந்த இரண்டு மணி நேர படத்தின் மையக்கதை.
திரைப்படங்கள் பார்க்கும் பழக்கத்தில் - ஆழமான, இது போன்ற தேர்ந்த படங்களை நான் பார்க்கத் தொடங்கி இருப்பது சமீப காலமாகத்தான்.
குறிப்பாக - ஆங்கில, ஹிந்தி படங்களைப் பார்ப்பத்தில் இருந்த ஒரு விதமான எதிர்ப்புணர்ச்சியை மிகவும் போராடி வென்று இருக்கிறேன்.
முதல் முதலாக இந்த திசையின் முயற்சி "a wednesday" என்று கொள்ளலாம். Better Late than Never என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே.....
அப்படித்தான் ஆசுவாசம் செய்தது கொள்ளத் தோன்றுகிறது.
குறிப்பாக - இந்த ஆங்கிலப் படத்தை முதல் முறை பார்த்த பொழுது திக்பிரமை பிடித்தாற்போல் தான் பார்த்தேன்....
இது என்ன வகையான படம் ?
வெறும் வசனங்களால் நம்மை நாற்காலி நுனியில் உட்காரவைத்து - படத்தின் கடைசியில் நம் மனத்தை பிசைய வைக்க முடியுமா ? என்று எனக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி இப்போது இரண்டாம் முறை பார்க்கும் பொழுதும் தட்டாமல் வந்தது.
நமது சிவாஜியின் மிகை நடிப்பை கொண்டாடிக்கொண்டு இருக்கும் சமுதாயத்தில் ஒரு அங்கமாக இத்தனை நாள் வாழ்ந்து இருந்தாலும் (ஒரு சில படங்களின் அவரின் நடிப்பையும் இரசித்து இருந்தாலும்), அளவான கச்சிதமான முக பாவங்களோடு அற்புதமான வசனங்கள் நம்மை கட்டிப்போட, சில சமயங்களில் கதா பாத்திரங்கள் கண்களால் மட்டுமே அபரிதமான நடிப்பை வெளிப்படுத்த ..... பற்பல நேரங்களில் மனதை மயக்கும் இசை நம்மை நெக்குருக......இந்த படம் நிச்சயம் பொழுது போக்க அல்ல !
நம்மை வேறொரு உலகத்திற்கு கொண்டு போய்ச் சேர்க்க......!!
சந்தேகமே இல்லை.
நமக்கு (முக்கியமாக எனக்கு) அவ்வளவு பரிச்சயம் இல்லாத களம் - (நீர் முழுகி கப்பல்) மற்றும் அந்த இராணுவக் குழுவினரின் சங்கேத வார்த்தைகளும் வாழ்க்கை முறையும் (highly protocol ridden) படத்தின் முதல் காட்சியிலிருந்தே நம்மை கட்டிப்போட்டு விடுகிறது.
ரொம்பவும் technical ஆக பல்வேறு வசனங்கள் மற்றும் காட்சிகள் கூட நம்மை படத்தின் மையத்திலிருந்து அந்நியப்படுத்துவதில்லை என்பது ஒரு ஆச்சர்யமான உண்மை....
திரை நாயகன் (அற்புதமான முக பாவங்கள் கொண்ட அந்த அழகான கறுப்பர்...."கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு....என்று பாடத் தோன்றுகிறது ) மிக அழகாக நடித்திருக்க - அவரின் (வெள்ளை)அதிகாரி - captain - அவருக்கு ஈடு கொடுத்து நம்மை பிரமிக்க வைக்கிறார்.
அந்த முதியவர் கடைசி காட்சியில் தன நாய குட்டியோடு நடந்து போக நமக்கு - உண்மையில் யார் கதாநாயகன் என்று சந்தேகம் வந்து தொலைக்கிறது.....!!
கதை பற்றி ரொம்ப எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லை. ரொம்பவும் புராதானமான - நமக்கெல்லாம் ரொம்பவே பரிச்சயமான மகாபாரத்தில் மின்னும் "தர்ம சங்கடம்" பற்றிய கதைதான்.....!
சிறப்பான அம்சம் - வாசங்களும் தேர்ந்த நடிப்பும் தான் - அநேகமாக எல்லா நடிகர்களுமே உணர்ந்து நடித்து நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறார்கள்.
முக்கியமாக நான் இரசித்தது பூடகமான வசனங்கள் கொண்ட அந்த உரையாடல்களைத்தான் ....!!
கதாநாயகன் தன மனைவிடம் சொல்ல நினைக்கும் செய்தியை மகனுக்கு - தங்கள் நாய் பற்றி சொல்வது போல் அனாயாசமாக தெரிவிக்கும் முதல் காட்சியில் இருந்து ..... குதிரைகள் பற்றி தான் நினைத்துக் கொண்டு இருந்தது தவறு என்று பெருந்தன்மையாக (?) ஒத்துக்கொள்ளும் captain - ன் கடைசிக் காட்சி வரை.......வார்த்தை தவம்....தான் !!
இசை ?
முதல் காட்சிகளில் அந்த நீர்முழுகி கப்பல் நீரைக் கிழித்துக்கொண்டு இறங்கும் பொழுது ஆண்களின் குரலில் பாடப்படும் அந்த choir இசையிலிருந்து.....கடைசி காட்சியின் விறுவிறுப்பான பின்னணி இசை வரை.....எதைச் சொல்ல ? எதை விட......??
இசை ஞானம் அதிகம் இல்லாத நானே இரசிக்க முடிந்த பொழுது, சற்று சுட்சமமான இசையையில் தேர்ந்தவர்கள் நிச்சயம் மேலும் விரும்புவார்கள். (ஆங்கிலப்படங்களில் ஏன் குத்துப் பாட்டுகள் வருவதில்லை ? உங்களுக்காவது தெரியுமா ?)
மேலாண்மை படிப்பில் கவனம் செலுத்துபவர்களுக்கு conflict management பற்றிய ஒரு அற்புத காவியம் - ஆக படம் மிளிர்வது சிறப்பம்சம்.
இரண்டாம் முறை இந்த படத்தை பார்த்த நான் - இது போன்ற வாய்ப்புகள் நிறைந்து இருக்கும் இந்த பேரகண்டத்தை - பாஷைகளின், கலாச்சாரங்களின் எல்லைகள் தாண்டி போவது - எவ்வளவு சுலபத்தில் ஒரு தனி மனிதனுக்கு கிடைக்கக் கூடும் தற்காலத்தை "கலி காலம்" என்று கரித்துக் கொட்டும் மானுடர்களும் இருக்கிறார்களே என்று வருந்தினேன்.
ஆம்....ஆத்ம ஞானம் அதி சுலபம் என்று ஒரு ரிஷி வாக்கு நம் கலாச்சாரத்தில் உண்டு - அது பற்றி எனக்கு திடமான கருத்து எதுவும் இல்லை.
ஆனால், நம் மனத்தடைகளைத் தாண்டி போவது அதி சுலபம்.....தேவையானது நாம் நமது மன ஜன்னல்களை சற்று திறந்து வைப்பது மட்டுமே......!!
(நீங்கள் "மல ஜலம்" என்று படித்து இருந்தால் அது உங்கள் துரதிர்ஷ்டமே தவிர "என்" குற்றமல்ல...... )
இப்போது புரிந்ததா - நான் எதனால் தமிழில் இந்தப் படம் பற்றி எழுதத் துணிந்தேன்....என்று ? தாய் மொழியில் தானே நமது எண்ணங்களை எந்த தடையும் இல்லாமல் பகிர நம் வார்த்தைப் பொக்கிஷங்கள் இருக்கின்றன ?? சரி தானே.....
இருங்கள் ....கடவுளிடம் இது போன்ற பேரனுபவங்களை வாரி வாரி வழங்குமாறு - பாஷைகளைத் தாண்டி அவருக்கு தெளிவாக புரியும் வண்ணம் பிரார்த்திக்கிறேன்......உங்களுக்கும் சேர்த்து தான்...... சரி தானே ?? உஷ்........இதோ கடவுளிடம் என் வேண்டுதலை ஆரம்பிக்கிறேன்...
alpha alpha charlie beta ..............
புரியவில்லையா...படத்தை பாருங்கள்.....!!
புரிந்து விடும்......!!
அன்புடன் - மிக்க மன நிறைவுடன் - வணக்கத்துடன்
சுரேன்